Tuesday, May 15, 2012

வாழ்வா? சாவா? ... முடிவெடுக்கும் தைரியசாலிகளா நீங்கள்?


எனது முதுநிலை பட்டப்படிப்பின் போது எனக்கு சி.எம்.சி. மருத்துவமனையின் மயக்க மருந்து துறையில் ஒருமாத கால பயிற்சி இருந்தது. அப்போது, நான் கண்ட ஒரு அறுவை சிகிச்சை என்னை வெகுவாக கவலையடையச் செய்தது. திடகாத்திரமான உடல்வாகு உடைய 23 வயது இளைஞன் ஒருவனின் வலது காலை அதன் முழங்கால் மூட்டுக்கு மேலே வெட்டி எடுத்து விடுவது தான் (Above Knee Amputation) அந்த அறுவை சிகிச்சை.

அந்த இளைஞனுக்கு அப்படி என்ன பிரச்சினை வந்து விட்டது. வலது முழங்கால் மூட்டில் சிறிய வீக்கம் மற்றும் வலி. வலி காரணமாக மருத்துவர்களிடம் வந்த அவனுக்கு இப்போது மூட்டுவலியைக் காட்டிலும் பெரிய வலி ஒன்று வந்து சேர்ந்தது. அது என்னவெனில், அந்த வீக்கம் மற்றும் வலிக்கு காரணம் அந்த எலும்பில் தோன்றியுள்ள ஒரு சிறிய கேன்சர் கட்டி வளர்ச்சி எந்த மருந்து மாத்திரைக்கும் அடங்காத ஒன்று (). அறுவை சிகிச்சை மூலம் அதையும் அதன் சுற்று வட்டாரத்திலுள்ள நல்ல பகுதிகளையும் அகற்றிவிடுவதே ஒரே வழி என்பது தான் இப்போது மிகப்பெரிய வலி.

வேறுவழியே இன்றி அவ்விதம் அறுவை சிகிச்சை செய்ய அவன் ஒப்புக் கொண்டதால், அன்றைய தினம் அந்த அறுவை சிகிச்சை நடந்தது. மயக்க மருந்துக்கு அவனை தயார் செய்யும் போது, அவனது காலை நன்றாக உற்று நோக்கினேன். அப்படி ஒன்று பெரிதான பிரச்சினை அதில் இருப்பதாக வெளிப்புறமாக தெரியவில்லை. ஆனால் Biopsy Report சொல்லும் விதமாக அறுவை சிகிச்சை செய்யாவிடில் அவன் சில மாதங்களில் இறந்து போவது உறுதி. அறுவை சிகிச்சையின் ஒரு கட்டத்தில் வெட்டப்பட்ட அந்த காலை அப்படியே தூக்கி அதற்குரிய குப்பைத் தொட்டியில் (Bio Medical Disposable Bag) போடும் போது அந்த காட்சி மிகவும் பரிதாபமாக இருந்தது. 

இயேசு கிறிஸ்து இப்படியாக சொல்லியுள்ளார்: “உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு காலுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்” (மத்தேயு 18:8; மாற்கு 9:45).  இந்த வசனத்தை யோசிக்கும் போதெல்லாம், அவியாத அக்கினியின் கொடுமையை வர்ணிப்பதற்காக ஒரு எடுத்துக்காட்டாக தான் இதனை சொல்லியிருப்பார் என நான் நினைத்துக் கொள்வதுண்டு. ஆனால், அது உவமையாக அல்ல; உண்மையாகவே சொல்லப்பட்ட வார்த்தை என்பதை இந்த நிகழ்ச்சி எனக்கு ஞாபகப்படுத்தியது.

இரண்டு காலுடையவனாய் சில மாதங்களில் மரிப்பதைக் காட்டிலும் சப்பாணியாய் பல வருடங்கள் இந்த உலகில் வாழ்வது நல்லது அவனுக்கும் அவனது பெற்றோருக்கும் மனதில் பட்டதினால், அந்த அறுவை சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டனர். ஐயோ, இளம் வயது தானே… இப்போது தானே படித்து முடித்திருக்கிறான்… இனிமேல் தான் வேலைக்கு போக வேண்டும் … பின்னர் திருமணத்திற்கு பெண் பார்க்க வேண்டும். ஒரு கால் இல்லாதவனுக்கு எப்படி பெண் கிடைக்கும் என்றெல்லாம் அவர்கள் மனம் பாடுபட்டிருக்கும்…. ஆனாலும் துணிந்து இந்த முடிவை எடுத்தனர்; ஜீவனைக் காத்துக் கொண்டனர். 

அந்த இளைஞன் சாதாரண வலிதானே, சிறிய வீக்கம் தானே என நினைத்துக் கொண்டு சில நாட்கள் அருகிலுள்ள சாதாரண மருத்துவரிடம் போய் காண்பித்துக் கொண்டிருந்திருக்கிறான். அதற்கென சிறப்பு மருத்துவரிடம் வந்து சேர்ந்தபோதோ, நிலைமையை உணர்ந்து கொண்டு மிகப்பெரிய முடிவை எடுக்க நேர்ந்தது. 

அவ்விதமே,  நாமும் இந்த உலக வாழ்க்கையில் பலவிதமான பிரச்சினைகளின் வழியாக கடந்து வரும் போது முதலில் நண்பர்கள், பின்னர் உறவினர்கள், பெரியவர்கள், தலைவர்கள் என ஒவ்வொருவரிடமாக சென்று ஆலோசனை செய்கிறோம். சாதாரண மருத்துவரைப் போன்று அவர்கள் தரும் ஆலோசனைகள் கூட சில வேளையில் சிறிய அளவில் பலனைத் தரலாம். ஆனால் இறுதியில் நம்மையே படைத்த இறைவன், அவரது ஒரே குமாரன் இயேசு கிறிஸ்துவிடம் ஆலோசிக்கும் போது அவரால் மட்டுமே ஒரு தீர்க்கமான பதிலை கொடுக்க முடியும். அது பல வேளைகளில் கடினமானது போன்று தோன்றும். ஆனால் அது பலவேளைகளில் கடினமானதே அல்ல. என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார் இயேசு (மத்தேயு 11:30). கடினமானதாக தோன்றுவதற்கு உண்மையான காரணம் இந்த உலகம், மாமிசம் மற்றும் அதின் மீது உள்ள இச்சை தான். அதிலிருந்து விடுபட இறைவனின் ஒத்தாசை அவசியம். 

விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனான போது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, அநித்தியமான பாவ சந்தோஷங்களை அநுபவிப்பதைப் பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு, இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான் (எபி. 11:24-26). பின்னாட்களில் அவன் பிரபல தலைவன் ஆனான் என்பது சரித்திரம். 

இந்த உலக வாழ்க்கை தான் எல்லாமுமே என நினைத்துக் கொண்டிருந்தால், பாவ சோதனைகளை வெல்ல முடியாது. மறு உலக வாழ்வு பற்றிய சிந்தனையும் இந்த உலகிலே மறுபிறப்பின் அனுபவமுமே நம்மை பாவ சோதனைகளினின்று காக்கும். இன்னும் பாவங்களில் நிலைத்திருப்பது வாழ்வா சாவா பிரச்சினை என்பதை மனதில் கொண்டு அதில் ஒரு தீர்க்கமான முடிவெடுக்கும் தைரியம் உங்களுக்கு உண்டா? 

வாழ்த்துக்கள்.    

“உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு காலுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்” (மாற்கு 9:45).





Sunday, March 04, 2012

(என்) குழந்தைக்கு பெயர் வைப்பது (வைத்தது) எப்படி?

முன்பெல்லாம் கஞ்சிக்கும் வழியில்லாத பரம ஏழைகள் கூட அஞ்சி ஆறு என குழந்தைகளைப் பெற்றெடுத்த காலம் போய், இப்போது பரவலாக எல்லோருமே ஒன்றிரண்டுடன் முடித்துக் கொள்வது வழக்கமாகிவிட்டது.  குழந்தைகள் எண்ணிக்கை குறைந்திட்டாலும் அப்படிப்பட்ட மதிப்புமிகு குழந்தைகளுக்கு பெயர் வைப்பது  என்பது எளிதான காரியம் அல்ல.

நம் குழந்தைகளுக்கு நாம் ஒரு குறிப்பிட்ட எதிர்பார்ப்புடன் தான் பெயரிடுகிறோம். பெயரிடும் வண்ணம் வரும்நாட்களில் அந்த குழந்தை உருவெடுக்கிறதோ என்னமோ, பொதுவாக குழந்தையின் பெயரை வைத்து அவரது பெற்றோர்களின் எண்ணங்களை, பண்புகளை மதிப்பிட முடியும் என்பது மட்டும் உண்மையான விஷயம்.

நான் இரட்சிப்பின் அனுபவத்திற்குள் வருவதற்கு முன் எனது அப்பாவிடம் ‘உங்களுக்கு வேறே பெயரே கிடைக்கவில்லையா?’ என கடிந்து கொண்டதுண்டு. அவரும் சங்கடப்படாமல் ;நீ இயேசுவின் பன்னிரு சீடர்களில் ஒருவனான பேதுரு போன்று வரவேண்டும்’ என்று தான் வைத்தேன் என கூலாக சொல்லுவார். அப்போது நான் சொல்வேன்: ‘அப்படிண்ணா எனக்கு பீட்டர்-ணு வச்சிருக்க வேண்டியது தானே’ . அதற்கும் அவர் சொல்லும் நியாயமான பதில், ’நான் என்ன ஆங்கிலமா படித்தேன்; A B C D கூட தெரியாத எனக்கு தெரிந்ததெல்லாம் தமிழ் வேதாகமம் ஒன்று தான்’. இப்போது என்னை யாரும் பீட்டர் என சொல்லுவதைவிட பேதுரு என சொல்லுவதையே பெருமையாக நினைக்கிறேன். பன்னிருவரில் ஒருவனான பேதுரு போன்று வரவும் முயற்சிக்கிறேன்.

சரி... இப்போது நான் எனது குழந்தைக்கு பெயர் வைத்தது எப்படி என சொல்லிட விரும்புகிறேன். 

கருவாக இருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என சொல்ல மருத்துவ துறையினருக்கு அனுமதியில்லாத காரணத்தினால், எனது மனைவிக்கு ஸ்கேன் செய்த மருத்துவர் எங்கள் உறவுக்காரராய் இருப்பினும் அதனை சொல்லவில்லை; நாங்களும் பதிலை எதிர்பார்க்கவில்லை. அவர் சொல்லாததினால் இது பெண் குழந்தையாக இருக்கக் கூடும் என நானும் என் மனைவியும் பேசிக்கொண்டோம். மட்டுமல்ல, எங்கள் எதிர்பார்ப்பும் ஒரு பென் குழந்தை தான். எனவே, எனது மனைவியின் அம்மா ‘எலிசபெத்’, எனது அம்மா ‘கிரேஸ்’ இரண்டையும் இணைத்து, “எலிசபெத் கிரேஸ்” என பெயரிடுவதாக முடிவு செய்திருந்தோம்.

பிறந்ததோ ஆண் குழந்தை. எனவே, என்ன பெயரிடலாம் என விவாதிக்க ஆரம்பித்தோம்.  ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. ஏதாவது மிஷனரி பெயரை இடலாம் என எண்ணி, திருநெல்வேலி சி.எஸ்.ஐ. டயோசிசன் புத்தகச்சாலை சென்று  நண்பர் சுவிஷேச ஜெபக்குழு-வின் வெளியீடான ‘மறக்க முடியா மா மனிதர்கள்’ என்ற நூலை வாங்கினேன். புத்தகம் முழுவதையும் ஒரே மூச்சில் வாசித்து முடித்து அந்த நபர்களின் பெயர்களில் விருப்பமானவற்றை Short list பண்ணிக் கொண்டு, மனைவியிடம் விவாதித்தேன். அவளுக்கு Stephen (தமிழில் - ஸ்தேவன்) என்ற பெயர் இணைந்து வரும்படி இருக்கவேண்டும் என அவள் விருப்பத்தை கூறினாள்.

Short list பண்ணியிருந்த பட்டியலில் இருந்த ஹட்சன் இறுதி செய்யப்பட்டதற்கு இரண்டு காரணம் உண்டு. ஒன்று அவர் சீனாவுக்கு சென்ற முதல் மருத்துவ மிஷனரி; இரண்டாவது எனது அப்பா பெயர் தேவதாசன் என்பதால், இது சன் என முடிவதில் எனக்கு ஒரு திருப்தி.  எனவே இறுதியில் சொல்வழக்குக்கு வசதியாக “ஸ்டீவ் ஹட்சன் - STEVE HUDSON”  என வைத்துக் கொண்டோம்.


முதல் நூற்றாண்டின் இரத்தசாட்சி ஸ்தேவான் போன்று, ஹட்சன் டெய்லர் போன்று அவன் ஒரு மிஷனரியாக வரவேண்டும் என்பது எங்கள் ஆசை.  அது போன்று ஒருகூட்ட மிஷனரிகளை தட்டி எழுப்பவேண்டும் என்பது எனது கனவு.

எனக்கு மிகவும் பிடித்த மறைந்த தேவமனிதர் டாக்டர். ஜஸ்டின் பிரபாகரன் அவர் கடைசியாக பாடிய ’முதல் இரத்த சாட்சி யார்?’ என்ற அவரது இறுதிப் பாடலை அடிக்கடி கேட்டுதான்  எனக்கு அவ்வித எண்ணம். அந்த பாடலை பதிவிறக்கம் செய்து கேட்க இங்கே கிளிக் செய்யவும்: http://www.saavn.com/s/song/tamil/Idimuzhakka-Geethangal/Muthal-Ratha-Saatchi/OiIsVA1XDnA

Tuesday, December 27, 2011

LIFE IS LIKE AN EVENING AT BEACH

Yesterday evening (25th) we as family were at Mondaicaud Beach on Christmas. A thought came to me about life.

LIFE IS LIKE AN EVENING AT BEACH


We all won't like to spend a hot noon at seashore. Obviously we all wait till 3, 3.30 or 4 based on the climate/ season. Then we slowly near the beach. Immediately we won't go near tides. We observe for sometime and then go near to it and slowly we near without fear. By the time it becomes 6, 6.30. We all enjoy at peak. We even take snaps of 'setting sun' with red and soft rays even not realising that actually that is going to be the end. We all feel that we could have come earlier or plan to come on another day.  

For a newborn child it takea some years to become a man. Like waiting for an appropriate hour to go to beach, he has to grow, get eduated, get exposed/ matured to start his own life. May be by 20 yrs or 30 based his eduaction or economical factors. Slowly he picks up his life like earning and other things slowly to get a stability or hold or popularity. By the time he reaches 50 or 60 , when he looks back, he feels proud of his life, about his achievements, family, children, their career, his earnings, investments and wealth and so on. He enjoys life rarely thinking about his end is nearing. Then by a sudden heartattack (physical illlness) or a chronic mindattack (phycological illness - anxiety & depression), he rapidly loose hpe in life. He feels much about 'life' mainly regretting for the things not done and sometimes for the things done which should not have been done. But it is too late that there IS an end.

What Bible says:
1) ....as a flower of the field he will pass away (James 1:10)

2) All people are like grass, and all their glory is like the flowers of the field; the grass withers and the flowers fall. (1 Peter 1:24)

3) Man who is born of woman is of few days and full of trouble (Job 14:1)

4) Our days may come to seventy years, or eighty, if our strength endures;
yet the best of them are but trouble and sorrow, for they quickly pass, and we fly away. (Psalms 90:10).

This is what I like end my thought:
Rejoice, O young man, in your youth,
And let your heart cheer you in the days of your youth;
Walk in the ways of your heart,
And in the sight of your eyes;
But know that for all these
God will bring you into judgment. (Eccl. 11:9)

Let us hear the conclusion of the whole matter:
Fear God and keep His commandments,
For this is man’s all.
For God will bring every work into judgment,
Including every secret thing,
Whether good or evil (Eccl. 12:13,14).

Monday, January 03, 2011

நில்லாதே... கவனியாதே... செல்லாதே...!

நில்... கவனி... செல்...! என்பது நம்மெல்லோருக்கும் பழக்கமானதொரு சொல். ஒருவர் ஒன்றை செய்யச் சொன்னால், சொல்வதற்கு நேரெதிராகச் செய்வது மனித இயல்பு.

வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள கட்டளைகளை, நில்லாதே... கவனியாதே... செல்லாதே...!  என்ற கோணத்தில் பார்ப்பது பிரயோஜனமாக இருக்கலாம் என நம்புகிறேன்.  இதோ அவைகளின் தொகுப்பு:



நில்லாதே...!


1) உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே. (ஆதியாகமம் 19:17 )

2) பாவிகளுடைய வழியில் நில்லாதே. (சங்கீதம் 1:1 )

3) பெரியோர்களுடைய ஸ்தானத்தில் நில்லாதே. (நீதிமொழிகள் 25:6 )

4) பொல்லாதகாரியத்திலே பிடிவாதமாய் நில்லாதே. (பிரசங்கி 8:3 )



கவனியாதே...!


1) சொல்லப்படும் எல்லா வார்த்தைகளையும் கவனியாதே. (பிரசங்கி 7:21)

2) தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கும் (I தீமோத்தேயு 1:3 )



செல்லாதே...!


1) நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு. (ஆதியாகமம் 26:2 )
2) வழிக்குப் பையையாகிலும், அப்பத்தையாகிலும், கச்சையில் காசையாகிலும் எடுத்துக்கொண்டுபோகால் (மாற்கு 6:8 )

3) ... வீட்டுக்கு வீடு போகாதிருங்கள். (லூக்கா 10:7 )

Saturday, January 01, 2011

பு(ப)த்தாண்டு வாக்குத்தத்தம்

மூன்றாம் மில்லேனியத்தின் முதல் பத்தாண்டுகளை முடித்து 2011 என்றதொரு புத்தாண்டுடன் இரண்டாம் பத்தாண்டுகளுக்குள் நுழைகிறோம். புத்தாண்டு தினங்கள்தோறும் எப்படியாகிலும் தப்பாமல் அநேக வாக்குத்தத்த வசனங்கள் நம்மை வந்தடைகின்றன. நாம் அவை அவ்வண்ணமே பலித்திட வேண்டுமென விரும்பி ஜெபித்து வருவதுமுண்டு. ஆனால் அவை அப்படியே அனுபவமாகியதாக ஆண்டு இறுதியில் சாட்சி பகருவோர் வெகுசிலரே. காரணம் பலவிதம். அவற்றுள் பின்னணியிலுள்ள நிபந்தனைகளை கண்டுகொள்லாமல் விட்டுவிடுவது முக்கியமானதொரு காரணம்.

ஆசீர்வாதங்களை அருளும் ஆண்டவர் எப்பொழுதுமே பின்னணியில் மறைமுகமாக சில நிபந்தனைகளை வைத்திருக்கிறார் என அவரைக் குறித்து நாம் குறைவாக நினைத்துவிட வேண்டியதில்லை. ஏனெனில் வாக்குத்தத்தங்களின் பின்னணியில் கட்டளைகளை வைத்திருக்கும் தேவன் தாமே மோசே மூலம் கொடுத்த பத்துக் கட்டளைகளினூடே வெளிப்படையாக வாக்குத்தத்தங்களையும் வழங்கிட தவறவில்லை (யாத். 20:6,12 ; எபே. 6:3).

இன்று உங்களை நோக்கி வரும் வாக்குத்தத்த வசனமாகிய ஏசாயா 33: 15-16 ன் பின்னணியிலுள்ள நிபந்தனைகளையும் சற்றே நோக்குவோமா? ”V15 நீதியாய் நடந்து, செம்மையானவைகளைப் பேசி, இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, பரிதானங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி, இரத்தஞ்சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்குத் தன் செவியை அடைத்து, பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவனெவனோ, V16 அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்.”


நீதியாய் நடந்து – கால்

செம்மையானவைகளைப் பேசி – வாய் / நாவு

இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து – மனம் / மனபான்மை

பரிதானங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி – கை

இரத்தஞ்சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்கு…செவியை அடைத்து – காது / செவி

பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவனெவனோ – கண்

உயர்ந்த இடங்களில் வாசம்...உயர்ந்த அடைக்கலமாகும் – பாதுகாப்பு

அப்பம் .... தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும் – அவசியத் தேவைகள்.



நம் வாழ்வின் அன்றாட அவசியத் தேவைகள் குறைவின்றி நிச்சயமாய் சந்திக்கப்பட நம் உடலின் அவயவங்களை அன்றாடமும் ஆண்டவர் பாதத்தில் அர்ப்பணித்து அவர் விரும்பும் விதம் வாழ ஆயத்தமா?

அப்படியெனில், இந்த வாக்குத்தத்தம் இந்த புத்தாண்டுக்கோ அல்லது வரும் பத்தாண்டுக்கோ மட்டுமல்லாமல், இப்பூவுலகில் நாம் வாழும் நாட்கள் மட்டும் நமக்கு உரித்தாகும்!

Sunday, August 29, 2010

அறிந்து கொள்வோம் அரவாணிகளை

அரவாணிகள் அல்லது திருநங்கைகள் என கண்ணியமான வார்த்தைகளாலும் இன்னும் பிற கண்ணியமற்ற சில வார்த்தைகளாலும் அழைக்கப்படும் மூன்றாம் பாலினத்தவர் பற்றி நம்மில் பலருக்கு சரியான முழுவிபரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காரணம் அவர்களைக் குறித்து நேர்மையான நோக்குடன் அணுகாமல் அவர்களை பிச்சை மற்றும் பாலியல் தொழிலாளர்களாக ஊடகங்கள் சித்தரித்து வரும் நிலை தான். முழுமையாக ஆண் எண்றோ அல்லது பெண் என்றோ இல்லாமல் இருவரது பண்புகளையும் உள்ளடக்கிய இடைநிலை பாலினமான (Intersex) இவர்கள் மூன்றம் பாலினத்தவராக (Third Gender) தற்போது தான் பல நாடுகளிலும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறார்கள்.

ஆணும் பெண்ணுமாக

ஆதியிலே மனுஷரைச் சிருஷ்டித்த தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் (மாற்கு 10:6). அப்படியென்றால், இவர்கள் எப்படி வந்தார்கள் எப்போது வந்தார்கள், இவர்களைக் குறித்த தேவனின் திட்டம் என்ன, இவர்களை நாம் அணுக வேண்டிய விதம் என்ன என்பதை குறித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

மனித உடலில் 46 குரோமோசோம்கள் உண்டு என்பது நாம் பள்ளிப் பருவத்திலேயே அறிந்து கொண்டது தான். அதைப்பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொண்டால் தான் அரவாணிகளைப் பற்றி புரிந்து கொள்ள முடியும். மனிதனின் பல்வேறு குணாதிசயங்களுக்கும் காரணமான வெவ்வேறு மரபணுக்களை (Genes) கற்றையாக ஒருங்கே கொண்டிருப்பது தான் குரோமோசோம். இந்த 46 குரோமோசோம்களும் இரண்டிரண்டாக மொத்தம் 23 ஜோடிகளாக காணப்படும். இவற்றில் 22 ஜோடிகள் உடலின் பால் சம்பந்தப்பாடாத உடலின் மற்ற அனைத்துப் பண்புகளையும் கட்டுப்படுத்துபவை. கடைசி ஜோடி குரோமோசோம்கள் பாலினம் (Sex) சம்பந்தப்பட்டவை. அது XY என்று ஆண்களிலும் XX என்று பெண்களிலும் கானப்படும். இனப்பெருக்கத்தின் போது ஆண்களில் அது X மற்றும் Y ஆகவும். பெண்களில் இரண்டு X களாகவும் அளவில் மட்டுமல்ல பண்புகளிலும் சரிபாதியாக பிரிந்து கரு உருவாக உதவும். உருவாகும் கருவில் ஆணின் X ம் பெண்ணின் X ம் இணைந்து XX குரோமோசோம் உருவானால் அது பெண்ணாக வளரும். ஆணின் Y ம் பெண்ணின் X ம் இணைந்து XY குரோமோசாமாக உருவானால் ஆணாகவும் வளரும். இன்னும் வேறுவிதமாக கூறினால் உருவாகும் கருவில் Y குரோமாசோம் இருந்தால் அது ஆணாகவும் Y இல்லையென்றால் அது பெண்ணாகவும் வளர்ச்சியடைகிறது எனலாம்.

மிகச்சில வேளைகளில் (ஆயிரத்தில் ஒன்றிரண்டு) இது இவ்விதம் முறைப்படி இரண்டாக பிரிந்து இணைவதில்லை. எடுத்துக்காட்டாக உருவாகும் கருவில் அல்லது என்ற ஒற்றைக்குரோமோசோம் மட்டுமே காணப்படலாம்; இவர்கள் 45Y ஆகவோ (ஆண்பண்புகள் குறைவான ஆண்கள்) அல்லது 45X (பெண்பண்புகள் குறைந்த பெண்களாகள்) ஆகவோ இருப்பர். இதுபோன்று உருவாகும் கருவில் இரண்டிற்கும் மேற்பட்ட குரோமோசோம்களும் காணப்படலாம். இவர்கள் பெண்பண்புகள் அதிகம் கொண்ட பெண்கள் (47XXX) ஆண்பண்புகள் அதிகம் கொண்ட ஆண்கள் (47XYY) ஆண்பண்புகள் கொண்ட பெண்கள் அல்லது பெண்பண்புகள் கொண்ட ஆண்கள் (47XXY) என வித்தியாசமானவர்களாக இருப்பர்.


இவ்விதம் குரோமோசோமின் எண்ணிக்கை கூடுதல் குறைவைப் பொறுத்தும் இவற்றில் Y குரோமோசோம் இருப்பதையும் இல்லாததையும் பொறுத்தும் அந்த கருவானது வளர்ச்சியடையும் போது அதில் உட்புறமான மற்றும் வெளிப்புறமான இன உறுப்புக்கள் உருவாகுவது கட்டுப்படுத்துகிறது. மட்டுமல்ல, இப்படியான இன உறுப்புக்களின் வளர்ச்சியின் அளவை பொறுத்து அவர் பின் நாட்களில் பருவ மாற்றங்கள் உடலில் தென்பட ஆரம்பித்து முழுமையான ஒரு ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ அல்லது இடைநிலையாகவோ அடையாளம் காணப்படுகிறார்.

ஆணா? அல்லது பெண்ணா?

ஒருவரை ஆண் என்றோ அல்லது பெண் என்றோ வெளித்தோற்றத்தை வைத்து, எளிதாக அடையாளம் கண்டு விடுகிறோம். ஆனால் அது எப்போதும் சாத்தியமில்லாத சூழ்நிலையில், ஆணுக்கும் பெண்ணிற்கும் உள்ள பல்வேறு பால் வேறுபாடுகள் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஆணுக்கும் பெண்ணிற்கும் உள்ள வேறுபாடுகள் அடிப்படையில் பால் வேறுபாடுகள் என்பதை கீழ்கண்டவாறு 4 முக்கிய வகையாக பிரிக்கலாம்:

1. மரபணு பால் (Genetic Sex) : இதன் படி ஒருவரின் உடலில் 23ம் ஜோடி குரோமோசோமில் Y காணப்பட்டால் அவரை ஆண்(XY) அது காணப்படாவில்லையெனில் பெண்(XX) எனவும் கூறுகிறோம்.

2. இன உறுப்புகள் பால் (Gonadal Sex) : உருவாகும் கருவில் Y குரோமோசோம் இருப்பதையும் இல்லாததையும் பொறுத்து உள்ளான மற்றும் வெளிப்புறமான இனஉறுப்புக்கள் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ வளர ஆரம்பிக்கும். எனவே இந்த இன உறுப்புகள் பால் உருவாக அடிப்படையாது மரபணு பால் எனலாம்.

3. புறத்தோற்ற பால் (Phenotype Sex) - இதில் இனஉறுப்புக்கள் வளர்வது மாத்திரம்மல்ல, அதற்கேற்ப அவைகளில் நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் ஹார்மோன்கள் (ஆண்ட்ரோஜன், ஈஸ்ரொஜன்) அதனால் ஏற்படும் உடல்வாகு / பிற உடல் மாற்றங்கள் (Secondary Sexual Characters) ஆகியவை அடங்கும். இன உறுப்புகளில் ஆண்ட்ரோஜென் சுரந்தால் ஆணாகவும் ஈஸ்ட்ரோஜன் சுரந்தால் பெண்ணாகவும் வளர்ச்சியடைகின்றனர்.

4. உளவியல் பால் (Psychological Sex) – மேற்கண்ட பண்புகளுடன் ஒருவரது வளர்ப்புமுறை சமுதாய சூச் நிலையை பொறுத்து ஒருவர் மனதளவிலும் முழுமையான ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ முதிர்ச்சிய்டைகிறார்.
இவ்விதம் ஒருவர் நான்கு நிலைகளிலும் ஒரேவகையினராக பொருந்தினால் மட்டுமே அவர் ஒரு முழுமையான ஆண் அல்லது பெண் எனலாம். ஒர் முழுமையான ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இல்லாமல், இடை நிலையுடன் இருப்பது கரு உருவாகும் போது அவற்றிலுள்ள மரபணுக்கள் மற்றும் அவற்றைத் தாங்கியுள்ள குரோமோசோம்களின் அமைப்பையும் அளவையும் பொறுத்தது. இந்த மரபணுக்களில் நடைபெறும் மாற்றங்கள் (mutations) தன்னிச்சையாக தலைமுறைதோறும் தொடர்கின்றன. இதனை மரபணு ஆலோசனை மூலம் ஓரளவு தவிர்க்கலாமே தவிர முற்றிலும் சரிப்படுத்துவது நம் கையில் இல்லை.

அண்ணகர்கள் (அரவாணிகள்) மூன்றுவிதம் 

விவாகரத்து குறித்து கேள்வி கேட்ட பரிசேயர்களைப் பார்த்து இயேசு: ”தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு; மனுஷர்களால் அண்ணகர்களாக்கப் பட்டவர்களும் உண்டு; பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக் கொண்டவர்களும் உண்டு. இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக் கடவன்” என்றார் (மத் 19:12).

தாயின் வயிற்றில் அண்ணகர்களாய் பிறந்தவர்களை மரபணு பால் மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் பால் வகையில் இவ்விதம் வகைப்படுத்துகிறோம். இவர்களுக்கே இன்று சரியான அங்கிகாரமும் தேவைகளும் இல்லாத நிலையில் மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்படுகிறவர்கள் இன்றைய நாட்களில் இல்லை எனலாம். இவர்கள் இனப்பெருக்க உறுப்புகளை அறுவைசிகிச்சை செய்து கொள்வதன் மூலம் புறத்தோற்ற பால் மற்றும் உளவியல் பாலில் மாற்றம் காண முற்படுபவர்கள். இன்றைய காலகட்டத்தில் அண்ணகர்களுக்கு இத்தகைய அறுவைசிகிச்சை மூலம் தங்களின் முதன்மை பாலினத்தோடு ஒத்துப்போகும் புறத்தோற்ற/உளவியல் பாலின நிலையை அடையவே இவை அதிகம் பயன்படுத்தப் படுகின்றன. பரலோக இராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக் கொள்பவர்களை உளவியல் பால் வகை எனலாம். இவர்கள் ஒரு முழுமையான ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருப்பவர்கள். இவர்களுக்கு உடலளவில் எவ்வித மாற்றமும் ஏற்படப் போவதில்லை; ஆனால் மனதளவில் இவர்கள் தங்களை ஒரு ஆண் அல்லது பெண்ணின் இனப்பெருக்க கடமையை செய்வதில் நாட்டமில்லாதவர்கள். இவர்களைக் குறித்து 1 கொரி 7: 25-40 ல் விபரமாக கூறப்பட்டுள்ளது. இவைகளை உற்று நோக்கும் போது அண்ணகர்கள் எந்த விதத்திலும் தாழ்ந்தவர்கள் அல்ல என்பது தெளிவாகிறது.

வேதாகமத்தில் இவர்கள்

வேதாகமத்தில் இவர்கள் பிரதானிகள் (2 இரா 9:32, எரே 38:7, ஆதி 37:36, எஸ்தர் 1:11) விதயடிக்கப்பட்டவர்கள் (உபா 28:1), அண்ணகர்கள் (மத் 19:12). என பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்படுகிறார்கள். ராஜாவின் அரணமனைகளில் பிரதானிகள், பானபாத்திரக்காரரின் தலைவன், சுயம்பாகிகளின் தலைவன் (ஆதி 40:2), தலையாரிகளுக்கு அதிபதி (ஆதி 37:36) ராஜஸ்திரீக்கு மந்திரி (அப் 8:27) என்ற முக்கிய பொறுப்புகளில் இவர்கள் இருந்து வந்துள்ளனர். இதன் மூலம் அக்காலங்களில் இவர்களுக்கென்றும் ஒரு சிறப்பான அந்தஸ்து இருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. இப்படிப்பட்ட அன்ணகர்களுக்கும் அவர்கள் வகித்த பொறுப்புகளுக்கும் ஒரே வார்த்தை வார்த்தை பயன்படுத்தப்படுவதால் வேதாகமத்தில் இவர்களைக் குறித்து கிட்டதட்ட 50 முறை சொல்லப்பட்டிருந்தாலும் 28 இடங்களில் மட்டுமே தான் உண்மையான விதயடிக்கப்பட்டவர்கள், அண்ணகர்களைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளவும் வாய்ப்புண்டு.

ஆரம்பத்தில் ஆலய ஆராதனைகளில் சேர்த்துக் கொள்ளப்படாத இவர்கள் (உபா 23:1) பின்னர் சிறப்பாக அங்கீகரிக்கப்படுவதாக ஏசாயாவால் வாக்கு அருளப்பட்டது. என் ஓய்வுநாட்களை ஆசரித்து, எனக்கு இஷ்டமானவைகைளைத் தெரிந்துகொண்டு உடன்படிக்கையைப் பறறிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும் குமாரருக்கும் குமாரத்திகளுக்குமுரிய இடத்தையும் கீர்த்தியையும்பார்க்கிலும், உத்தம இடத்தையும் கீர்த்தியையும் கொடுப்பேன், என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன். (ஏசாயா 56:4,5).

தேவனைத் தொழுது கொள்ளும் இஸ்ரவேலர் தூய்மையானவர்களாக இருக்கவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தவே அன்று அங்கவீனன் அங்கீகரிக்கப்படவில்லை எனலாம். மாத்திரமல்ல இவ்விதம் விதையடிக்கப்படுதல் அந்நிய தேவர்களுக்காக செய்யப்படுதவதாக இருந்ததாலும் பழுதுள்ள எதுவும் பலி செலுத்தப்படலாகாது என நியாயப் பிரமாண சட்டம் இருந்ததாலும் இவர்கள் அவ்விதம் ஆலயங்களில் ஒதுக்கப்பட்டிருந்தனர். புதிய ஏற்பாட்டு காலத்தில் எத்தியோப்பிய ராஜாஸ்திரியின் நிதிப்பொறுப்பிலிருந்த அண்ணகன் பிலிப்பு மூலம் இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் பெற்றான் (அப். 8:37,38). இது கிறிஸ்தவத்தில் அண்ணகர்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதையும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதையுமே காட்டுகிறது.

இந்தியாவில் இவர்களின் நிலை:

காலாகாலமாக ஒவ்வோரு நாட்டிலும் இவர்கள் வெவ்வேறு குறிப்பிட்ட வேலைகளுக்காக பயன்படுத்தப்பட்டனர். அதனைப் பொறுத்து ஒவ்வொரு நாட்டிலும் அவர்களது சமூக அந்தஸ்தில் மாற்றங்கள் உண்டு. இந்தியா போன்ற நாடுகளில் ஏற்கனவே மக்கள் தொகை மலிந்துவிட்ட நிலையில் இடப்பட்ட இவர்களின் நிலைமை திண்டாட்டம் தான். கேலி, கிண்டல், பரியாசம், குடும்பத்தினரால் வெறுக்கப்படுதல், மற்றும் சமுதாயத்தில் சரியாக ஏற்றுக் கொள்ளப்படாதிருக்கும் போது இவர்களில் பலர் பாலியல் மற்றும் பிச்சை தொழிலுக்கு வந்து சேருகின்றனர். இவர்களைக் குறித்த சரியான விழிப்புணர்வும் புரிந்து கொளதலும் அக்கறையும் சமுதாயத்தில் இல்லாமையால் இவர்களின் சமூக நிலைமை இன்னமும் மோசமாகி இவர்களைக் குறித்த தவறான கண்ணோட்ட்த்துக்கு விட்டுச் செல்கிறது. எனவே இவர்களைக் குறித்த தெளிவான பார்வை நமக்குத் தேவை.

திருநங்கையர் என மரியாதைக்குரியவர்களாக அழைக்கப்படுவது போன்று தோன்றினாலும், அவர்கள் எல்லோரிடமும் குறைந்தபட்சம் ஒரு X குரோமோசோம் உள்ளது என்பதற்காக இவர்களை முற்றிலும் நங்கையர் பிரிவில் சேர்த்துவிட்டது நியாயமாக இருக்க முடியாது. இவர்களில் பெரும்பான்மையினோருக்கு Y குரோமோசோமும் உண்டு என்பதைக் கருத்தில் கொண்டு இவர்களை உளவியல் மற்றும் புறத்தோற்ற பால் வகையில் ஆணாக இருந்திட ஏன் சமுதாயம் அனுமதிக்கக் கூடாது? இன்றும் இந்தியாவில் பெண்களின் நிலையே பரிதாபமாக காணப்படும் போது இவர்கள் நிலை இன்னும் பரிதாபம் தான்.

சமீப காலங்களில் இவர்களைப் பற்றிய சமூகப் பார்வையில் மாற்றங்கள் வந்து கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. 2005 முதல் பாள்போர்ட் விண்ணப்பங்களில் இவர்களுக்கென மூன்றாம் பாலினத்தை குறிப்பிட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 2009 முதல் வாக்காளர் பட்டியலிலும் இவர்கள் தனிபாலின வகையினராக அங்கிகரிக்கப்பட்டு அடையாள அட்டைகளும் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் இவர்களின் நலனுக்கென தனி வாரியமே அமைக்கப்பட்டுள்ளது நல்ல விஷயம். அரசியல் மற்றும் அதிகார மட்டத்தில் மட்டும் இந்த மாற்றங்கள் போதாது. ஒவ்வொருவரும் இதுபோன்ற ஆயிரத்தில் ஓரிருவரை அடையாளம் காணும்போது பரிவுடனும் நேர்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும். தங்களாலியன்ற தனிப்பட்ட மற்றும் சமுதாய உதவிகளை நல்கிட முன்வர வேண்டும். இத்தகைய மாற்றுப் பார்வையில் தங்கள் கடமையினை ஆற்றிட முதலில் கிறிஸ்தவர்கள் முன்வரவேண்டும்.

”ஏழையைப் பரியாசம் பண்ணுகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்”(நீதி 17:5).



 இது உன்னத சிறகுகள் ஜனவரி-மார்ச் 2010 இதழில் வெளிவந்த எனது கட்டுரை.

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.