Friday, February 17, 2017

ஆவியின் கனி - சமாதானம்

சமாதானக் காரணராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். சமாதானம் என்ற வார்த்தை சூழ்நிலைகளைப் பொறுத்து வெவ்வேறு அர்த்தமுள்ளதாய் இருந்தாலும் இதனை முக்கியமாக மனஅமைதி, நல்லிணக்கம் அல்லது பாதுகாப்பு என்ற மூன்று வார்த்தைகளில் பெரும்பாலும் வர்ணித்து விடலாம். இரு நாடுகளுக்குள் சமாதான உறவு, இரு நபர்களுக்குள் சமாதானம், மனிதனுக்கும் தேவனுக்கும் இடையில் சமாதானம், ஒருவருக்குள் உள்ளான மனஅமைதி என பல்வேறு நிலைகளில் சமாதானம் என்கிற அம்சம் வெளிப்படுகிறது.

ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது சமாதானம் என கூறி வாழ்த்துவது இன்றளவும் பல கலாச்சாரங்களில் காணப்படுகிற ஒன்று. உயிர்த்தெழுந்த இயேசுவும் தனது சீடர்களுக்குக் காட்சி கொடுக்கும்போதெல்லாம் ‘உங்களுக்கு சமாதானம்’ என்று கூறி வாழ்த்தினார் (யோவான் 20:19,26). புதிய ஏற்பாட்டில், அப்போஸ்தலனாகிய பவுல் ஏறக்குறைய தனது எல்லா நிரூபங்களிலும் ’நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக’ என வாழ்த்துதலுடன் தொடங்கி தனது நிரூபங்களை எழுதியிருப்பதைக் காண்கிறோம்.


புதிய ஏற்பாட்டுக் காலத்தில் சமாதானம் என்ற வார்த்தை பெரும்பாலும் மனஅமைதி என்ற கோணத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இயேசு கிறிஸ்து உலகத்தில் மனிதனாக பிறந்த போது, பரம சேனையின் திரள் தேவதூதனோடே தோன்றி, பூமியிலே சமாதானம் உண்டாக வாழ்த்தி தேவனைத் துதித்தார்கள் (லூக்கா 2:17). ஆம். உலக அமைதிக்கு இயேசு ஒருவரே காரண கர்த்தாவாக இருக்க முடியும். ஏனெனில் அவரே சமாதானப் பிரபு (ஏசாயா 9:6).  அவர் சமாதானத்தின் கர்த்தர் (2 தெச. 3:16). இந்த சமாதானம் என்பது தேவனால் அருளப்படும் ஈவு. ஏனெனில் அதனைப் படைத்தவர் அவரே (ஏசாயா 45:7). சமாதானத்தை அவரே கட்டளையிடுபவர் (லேவி. 26:6) சமாதானக் காரணரும் அவரே (மீகா 5:5).


இந்த சமாதானம் எவருக்கும் எளிதில் கிடைத்துவிடக் கூடியது அல்ல. அது நீதியின் கிரியை மற்றும் பலன் (ஏசாயா 32:17). ரோமர் 5:1 ன் படி,  நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப் பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம். ”உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்” என ஏசாயா 26:3 ல் பார்க்கிறோம். மட்டுமல்ல, “துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்” (ஏசாயா 48:22).


அப்போஸ்தலனாகிய பவுல் விசுவாசிகளை கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருக்க வலியுறுத்தும் போது,  ”நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” என கூறுகிறார் (பிலிப்பியர் 4:4-7).


கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள் (ரோமர் 12:18 ) என நமக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவனோடு சமாதானாமாக இருக்கும் ஒருவரால் உலகத்தில் எந்தவிதமான சூழ்நிலைகளிலும் மற்றவர்களோடும் சமாதானமாக இருக்க முடியும். (யோவான் 16:33). எப்படியெனில் ரோமர் 8:6ன் படி, மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். ”இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்” என 2 கொரி. 5:17,18 ல் பார்க்கிறோம். முதலாவதாக தேவசமாதானம் நமது இருதயங்களில் ஆளுகை செய்யும் போது (கொலோ 3:15) நம்மால் மற்றவர்களுடன் சமாதானமாக இருக்க முடியும். மற்றவர்களூடன் சமாதானப் போக்கினை கடைபிடிப்பதில் ஒருவரின் மனோபாவம் அல்லது அவரது அணுகுமுறை முக்கிய பங்கினை வகிக்கிறது. விசுவாசி ஒருவருக்கு தினமும் உணர்த்தி அந்த நல்ல மனோபாவத்தை வெளிப்படுத்த உதவி செய்பவர் ஆவியானவர்.


தேவனுடைய சமாதானத்தை தேவன் நம்மீது திணிப்பதில்லை. ஆனால், அவருடைய மாறாத அன்பை என்றாவது ஒருநாள் ஒருவர் உணர்ந்து ஏற்றுக் கொள்ளும் போது அவர் தரும் சமாதானத்தை அவர் பெற்றுக்கொள்கிறார். அதுபோலவே நம்முடன் சமாதானமாயிருக்க நாம் மற்றொருவரைக் கட்டாயப்படுத்த முடியாது. ஏனெனில், உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள் (யோவான் 14:17). எனவே, ஆவியானவரின் துணையோடு அவரின் கனியாகிய சமாதானம் நம் வாழ்க்கையில் வெளிப்படும் போது, மற்றவர்கள் என்றாவது ஒருநாள் அதை இனம் கண்டு நம்முடன் சமாதானாமாய் ஒப்புரவாக தேவன் கிரியை செய்வார். ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார் (நீதி.16:7).


ஜனங்களுக்கு சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிப்பது தான் ஒரு சுவிஷேஷகனுடைய வேலை (ஏசாயா 52:7). சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள் (மத்தேயு 5:9). எனவே ஆவியின் கனியாகிய சமாதானம் நம்முடைய மனோபாவத்திலும் செயல்பாடுகளிலும் வெளிப்பட நாம் கவனமாக இருக்க வேண்டும். மேலும், “தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது … … ஆனபடியால் சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக்கடவோம் (ரோமர் 14: 17,19). நாம் ஒருவரோடொருவர் சமாதானமாயிருப்போம்; அப்பொழுது அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் நம்மோடு கூட இருப்பார் (2 கொரி. 13:11).


ஆமென். 

[இது பாலைவனச் சத்தம் – பெப்ருவரி 2017 இதழில் வெளியான எனது கட்டுரை]