Tuesday, December 09, 2008

எழுதிப் பிரகாசி... உனக்கு வழி பிறந்தது.



தமிழ்ப் பத்திரிக்கை உலகில் உள்ள மொத்த பத்திரிக்கைகளின் எண்ணிக்கையில் கிறிஸ்தவ பத்திரிக்கைகள் முதலிடத்தில் காணப்பட்டாலும் அவைகளுள் அதிக பிரதிகளிலோ தரத்திலோ உருப்படியாய் வெளிவருபவை ஒரு சிலவே. இதற்கு பல்வேறு சாக்குப்போக்குகள் கூறப்பட்டாலும் இன்றைய தமிழ்க் கிறிஸ்தவம் இதனை பெரிதாக கண்டுகொண்டதில்லை என்பது தான் நிசர்சனமான உண்மை.


அவ்வப்போது சில கிறிஸ்தவ நிறுவனங்கள் நடத்திய எழுத்தாளர் பணிமனைகள் இந்த குறைபாட்டினை சமாளிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளின் மத்தியில், சமீபத்தில் ஆசீர்வாத இளைஞர் இயக்கம் நடத்திய எழுத்தாளர் பணிமனை ஒரு குறிப்பிடத்தக்க விசயமாகும். “இறைவன் எழுதுகிறார்” என்ற தலைப்பில் 2008 நவம்பர் 28-30 சென்னை சாந்தோம் தியான ஆசிரமத்தில் இது சிறப்புற நடைபெற்றது.


மும்பை துப்பாக்கிச் சூட்டினால் நாடு முழுவதிலும் பரவியிருந்த பாதுகாப்பு பயம், நிசாவின் தாக்குதலால் தமிழகம் முழுவதும் வெள்ள பாதிப்புகள், இதனால் போக்குவரத்துப் பாதிப்பு... என பல்வேறு தடைகள். இவைகளெல்லாம் இருந்த போதிலும் இதில் பதிவு செய்திருந்த 84 பேர்களில் 63 பேர் சரியான நேரத்தில் வந்திருந்து மூன்று நாட்களும் முழுமையாக பங்கு கொண்ட காரியம் இன்றைய தமிழ்க் கிறிஸ்தவர்களிடையே இதற்கென்று ஆர்வம் கொண்டுள்ளோர் இருக்கத்தான் செய்கின்றனர் என்பதை உறுதிபடுத்தியது. அதனை நிறைவு செய்யும் வண்ணம் பனிமனையின் நிகழ்வுகள் எல்லாம் நிறைவாகவும் சிறப்பாகவும் இருந்தன என்றால் அது மிகையல்ல.



ஆசீர்வாதம் பத்திக்கையில் அடிக்கடி கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் பல எழுதி கிறிஸதவ வட்டாரத்தில் சிறப்பான இடம்பிடித்துள்ள டாக்டர். திருமதி. லில்லியன் ஸ்டான்லி, மற்றும் தனியொருவராய் பத்திரிக்கை தொடங்கினும் தரத்திலும் எண்ணிக்கையிலும் உயர்ந்து தமிழ்க் கிறிஸ்தவ உலகில் முத்திரை பதித்துக் கொண்டிருக்கும் வானமுதம் பத்திரிக்கையின் ஆசிரியர். திரு. கிங்ஸ்லி அருணோதய குமார் ஆகியோரின் பயிற்றுவிப்பில் பங்கு கொண்டோர் நல்ல பக்குவம் பெற்றனர். இவர்களுடன் ஆசீர்வாத இளைஞர் இயக்க ஊழியங்களில் தகவல்களைத் தொகுத்து அறிக்கைகளாக தருவதில் நல்ல அனுபவம் கொண்ட திரு. ஈ. எல். மதன்சிங், மொழி பெயர்ப்புப் பணியில் தனக்கென்று தனி பாணியைக் கண்டுள்ள திரு. ஈ.எல். ஈப்ரிம், வானமுதம் இதழில் முக்கிய பங்காற்றும் சிறுகதை சுந்தர் ஆகியோரும் அவரவர் பங்கினை சிறப்பாக பகிர்ந்தளித்தனர்.






பணிமனையில் குழுக்களாகப் பிரிந்து, பத்திரிக்கை தயாரிக்கும் பயிற்சிக்கு நேரம் கொடுக்கப்பட்டது. பங்கு கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களூம் ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக அமைந்த படைப்புகளுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் சிறந்த பத்திரிக்கையை வடிவமைத்த குழுவினருக்கு பாராட்டுப் பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.



மிக குறைந்த கட்டணத்தில் நிறைவான பயிற்சியை இயக்க, நிறுவன அமைப்புகள் வேறுபாடின்றி அனைத்து தமிழ்க் கிறிஸ்த எழுத்தார்வலர்களும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் திரு. ஈ. எல். ஈப்ரிம் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இப்பணிமனையின் முழு செலவினையும் ஆசீர்வாத இளைஞர் இயக்கம் எடுத்துக் கொண்டதன் மூலம் கிறிஸ்தவ எழுத்தாளர்களை எழுப்பி விடுவதில் அதன் தீராத ஆசை நிறைவேறி உள்ளது.


பங்கு கொண்ட அனைவரும், ”எழுதிப் பிரகாசி... உனக்கு வழி பிறந்தது” என்று கர்த்தரின் நேரிடைக் கட்டளையினை பெற்றுக் கொண்ட உணர்வில் திரும்பிச் சென்றனர். இதுபோன்ற அரிய காரியங்களில் அனைத்து முன்னணி கிறிஸ்தவ எழுத்தாளர்களும் ஒன்றுபட்டு செயல்பட்டால் நமது சமுதாயத்தில் கிறிஸ்துவின் ஆட்சி வேரூன்றி விரைவில் மாற்றங்கள் நிகழும் என்பதில் ஐயம் இல்லை.


- டாக்டர். பேதுரு, தாராபுரம்.

Sunday, September 21, 2008

2008 - உனக்கு இது கி.பி. எத்தனையாவது ஆண்டு?

உலக வரலாற்றில் எந்தவொரு நிகழ்வினைக் குறிப்பிட்டாலும் கி.மு/ கி.பி என்ற வழக்கமே பரவலாக இருந்துவருவதை நாம் அறிவோம். காரணம் என்ன? அந்த அளவிற்கு உலக வரலாற்றில் இயேசு முக்கியமான (மைய) இடத்தைப் பிடித்து விட்டார் என்றால் அது மிகையல்ல. கிறிஸ்துவுக்குப் பின் உலக சரித்திரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்பவைகளும் காரணமாகலாம். கி.மு/ கி.பி வழக்கமுறையை வைத்து, உலக நிகழ்வுகளே அவரை மையமாக்க் கொண்டு தானோ என நினைப்பதிலும் தவறு இல்லை.

அந்த அளவிற்கு உலக சரித்திரத்தில் சாதனை படைத்த இயேசு உன் வாழ்க்கையில் ஏதாவது செய்திருக்கிறாரா? ஒருவேளை நீ பிறந்து வளர்ந்ததே கிறிஸ்தவக் குடும்பமாக இருக்கலாம். நல்லது. ஆனாலும் உனது வாழ்க்கைச் சரித்திரத்திலும் கி.மு/ கி.பி என்ற பயன்பாடு உண்டு. அனேகர் தங்களைப் பற்றி அல்லது அடுத்தவரை பற்றி எதையாவது குறிப்பிடும் போது திருமணத்திற்கு முன் அப்படி இருந்தார் இப்போதைக்கு அப்படி இல்லை என்பார்கள்; அல்லது திருமணத்திற்கு பின் ஆளே மாறிவிட்டார் என கூறுவது உண்டு. திருமணம் என்ற நிகழ்வினால் ஒருவனு(ளு)டைய வாழ்க்கையில் நுழையும் ஒருவனா(ள)ல் அவனு(ளு)டைய வாழ்க்கை நடைமுறையில் அத்தனை மாற்றங்கள் நிகழ்கின்றது அல்லவா?

அதுபோன்றே ஒருவனுடைய வாழ்க்கையில் கிறிஸ்து என்று ஒருவர் குறுக்கிட்டால், அவனுடைய வாழ்க்கை நடைமுறையிலும் மாற்றங்கள் கண்டிப்பாக இருக்கும். அது ஒருவேளை சிலருக்கு ஒரே நாளில் வெளிப்படையாக தெரிவதாக இருக்கலாம்; சிலருக்கு படிப்படியான மாற்றங்களுக்குப்பின் பலநாட்கள் கழித்து வெளிப்படுவதாக இருக்கலாம். எது எப்படியாயினும் கிறிஸ்து ஒருவனுக்குள் இருந்தால் அவனுடைய சரித்திரத்தில் கி.மு/ கி.பி என்று இரண்டு அத்தியாயங்கள் கண்டிப்பாக இருக்கும். அப்படி ஏதும் இல்லையெனில், இன்னும் அங்கு கிறிஸ்து வரவில்லையென்று தான் அர்த்தம்.

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. 2 கொரிந்தியர் 5:17

அது சரி. உங்கள் வாழ்க்கை சரித்திரத்தில் இது கி.பி எத்தனையாவது ஆண்டு என உறுதியாக கூறமுடியுமா?

Wednesday, August 13, 2008

புதிய‌தோர் உல‌கு செய்வோம்

இன்று நாம் எத்திசை திரும்பினாலும் எச்.ஐ.வி/எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வு வாசகங்களைக் காணமுடிகிறது. சமீபத்தில் சிக்குன்குனியா, அதற்கு முன்னர் சார்ஸ், போன்ற நோய்களெல்லாம் திடுதிப்பென வந்து பரபரப்பை உண்டுபண்ணி விட்டு பின்ன‌ர் பதுங்கிக் கொண்டன. ஆனால் 27 வருடங்களுக்கு முன்னர் முதன் முதலில் கண்டறியப்பட்ட எயிட்ஸ் நோய் தற்போது இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட இருநூறில் ஒருவருக்கு என்ற அளவில் பரவலாகப் பரவி பரபரப்பையல்ல, பரிதாபத்தை உண்டுபண்ணி வருவதை நாம் கண்கூடாகக் கண்டுவருகிறோம்.


நம்மில் எச்.ஐ.வி/எயிட்ஸ் பற்றி பலரும் பலவிதமாக பேசிக்கொண்டாலும் நான்கு வழிமுறைகளில் மட்டுமே அது பரவுவதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. முதலில் தகாத அல்லது பாதுகாப்பற்ற பாலுறவினால்; இரண்டாவது இந்த கிருமியினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணிடமிருந்து குழந்தைக்கு; அடுத்து இந்த‌ கிருமிகளைக் கொண்ட இரத்தம் தோய்ந்த ஊசிகளின் மூலம்; இறுதியாக பரிசோதிக்கப்படாத இரத்ததானம் மூலமாக.


இவ்விதம் இது நான்கு வழிகளில் பரவினாலும் முதலாம் வகையின் மூலமே கிட்டத்தட்ட 90 சதவிகிதம் பரவுகிறது என்பதும் எச்.ஐ.வி/எயிட்ஸ் கிருமியினால் பாதிக்கபட்டவர்களில் 50 சதவிகிதத்தினர் 15 முதல் 24 வய‌திற்குட்பட்ட இளைஞர்கள் என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயமாகும். இந்தியாவின் எதிர்கால‌ம் இளைஞ‌ர்க‌ள் கையில்... ஆனால் இத்த‌கைய‌ இளைஞ‌ர்க‌ளின் எதிர்கால‌ம்...?


மருத்துவ அறிவியலின் வளர்ச்சி, சட்ட திட்டங்கள் என பல்வேறு முயற்சிகளினால் மற்ற மூன்று வழிமுறைகளும் வெகுமாக கட்டுப்படுத்தபட்டு வரும் நிலையில், முதல் வழிமுறையினைத் தடுக்கும் முக்கிய வழிமுறைகள் தெரியாமல் இன்னமும் தவித்து வருவது இன்று நமது சிந்தனைக்கு விருந்தாகி விட்டது. ஆக "எயிட்ஸை தடுக்க உடனடித் தேவை சட்டமா? மனமாற்றமா? என திண்டுக்கல் லியோனி போன்றோரின் சமீபத்திய பட்டிமன்ற கருப்பொருளாகவும் அது உருவெடுத்துள்ளது.


எச்.ஐ.வி/எயிட்ஸ் பரவுவதைத் தடுக்க தற்போது இருக்கும் ABC திட்டம் மிகவும் பிரபலமான ஒன்று. அதாவது, A - (Abstinence) திருமணத்திற்கு முன் பாலுற‌வைத் த‌விர்த்தல்; B - (Being faithful to the partner) திருமண்த்திற்குப் பின் உண்மையாயிருத்தல்; C - (Condom usage) இரண்டும் முடியாத பட்சத்தில் ஆணுறை அணிதல். இவை பார்ப்பதற்கு மிகவும் எளிதாகவும், பயனுள்ளவையாகவும் தோன்றினாலும் நடைமுறையில் பல சிக்கல்களையும் தத்துவ தர்க்கங்களையுமே இது கொண்டுவர வல்லது. ஒருவேளை குறிப்பிட்ட சூழலில் இருப்போரிடையே கட்டுக்கடங்கா வேகத்தில் பரவிவரும் அதன் அளவினை ஓரளவிற்கு கட்டுப்படுத்தும் ஆரம்பகட்ட முயற்சியாக இது உதவுகிறதே தவிரே இதுவே முடிவான தீர்வு அல்ல.


இது அவசியமான ஒன்றுதான்; எனினும் எச்.ஐ.வி/ எயிட்ஸ்‍க்கு உண்மையான‌ ப‌தில் பாலுற‌வு ந‌டத்தை மாற்ற‌மே. நெறிமுறைக‌ளைப் பின்ப‌ற்றி பாலுற‌வு ந‌ட‌த்தையில் மாற்ற‌த்தைக் கொண்டு வ‌ருவ‌த‌ன் மூல‌ம் எயிட்ஸின் போக்கையே த‌லைகீழாக திருப்ப‌லாம் என்ப‌த‌ற்குச் சான்று பகரும் வண்ணம் உகாண்டா போன்ற சில நாடுகள் எயிட்ஸின் பிடியில் மடிந்துக் கிடந்த நிலையிலிருந்து இன்று அவை எழுந்து நிமிர்ந்து நிற்க‌த் தொட‌ங்கியுள்ள‌ன‌.


ஆனால், இன்றைய இளைஞர்கள் நமக்கோ சவாலே இங்கு தான். 'செக்ஸ்' என்பது மிகவும் பிடித்துப் போன சப்ஜெக்ட் ஆகி விட்டது. அது பற்றிய பாடல்களையே அதிகமாக கேட்கிறோம் அல்லது பாடுகிறோம். அதைப் பற்றிய ஜோக்குகளையே அதிகம் விரும்பி கேட்கிறோம். விளம்பரங்கள் முதல் காட்சிகள் வரை 'கவர்ச்சிகள்' இல்லாத நிலையைக் காண்பது என்பது மிகவும் அரிதாகி விட்டது. அப்போதெல்லாம், 'நானும் அனுபவித்துப் பார்க்கவேண்டும்' என்ற அடக்க முடியாத ஆவலும் ஒருவித கிளர்ச்சியும் நம்மைப் பாடாய்ப் படுத்திவிடுகின்றன அல்லவா?


அதும‌ட்டுமா... 'உன் அன்பை நிரூபித்துக் காட்ட‌', 'உன் ஆண்மையை நிரூபிக்க‌', உன்னால் முடியும் என‌ நிரூபித்துக் காட்ட‌' என, அப்பாடா... இப்படி எத்தனையோ வ‌கையான‌ அழுத்த‌ங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ளிட‌மிருந்தே நாள்தோறும் வ‌ந்து கொண்டிருக்கின்ற‌ன‌வே. பின்ன‌ர் எப்ப‌டி ந‌ட‌த்தையில் க‌ண்ணிய‌மாய் இருப்ப‌து? உன‌து சூழ்நிலைக‌ள் எதுவாயிருப்பினும், பள்ளி/ கல்லூரி இளைஞன் என்ற முறையில் நீ உறுதியான தீர்மானம் எடுக்க வேண்டியதெல்லாம் 'திருமணத்திற்கு முன் உடலுறவு என்பதே இல்லை' என்பது தான்.


காதல் வலையில் சிக்கியோர் பலர் தங்களையும் அறியாமல் சிக்கிக் கொள்ளும் அடுத்த வலை தான் பாலுறவு. அன்பும் பாலுறவும் ஒன்றல்ல. பாலுறவு ஒன்றும் அன்பின் வெளிப்பாடும் அல்ல; உணமையாகக் கூறினால், ஒருவர் மேல் உண்மையான அன்பு செலுத்தும் எவரும் மற்றவரை திருமணத்திற்கு முன் பாலுறவிற்கு நிர்ப்பந்திக்க இயலாது. கொஞ்ச‌ நேர‌ இன்ப‌த்திற்காக‌வும் அட‌க்க‌முடியாத வேட்கைக்காக‌வும் தகாத முறையில் இருவ‌ர் ஒன்றாக‌ கூடுவ‌துட‌ன் பாலுற‌வு முடிவடைந்து விடுவ‌தில்லை. அதுவே வேத‌னைக‌ளின் ஆர‌ம்ப‌ம். எதிர்பார்த்திருந்த‌ இன்ப‌த்தைக் காட்டிலும் மேலான‌ குற்ற‌ உண‌ர்வையும் ம‌ன‌த்துயரையுமே அது கொண்டு வ‌ரும்.


எனவே திரும‌ண‌ம் வ‌ரை பாலுற‌வைத் த‌விர்ப்ப‌து என்பது அனைத்து வழிகளிலும் பயன் தரக்கூடியது. அது ஒன்றும் முடியாத‌ காரிய‌ம் அல்ல! உன்னைச் சுற்றிலும் அனேகர் அது சாத்தியம் என‌ நிரூபித்துக் கொண்டிருக்கிறார்களே! இத்தகைய வலிமையைப் பெறுவது எவ்வாறு? கிறிஸ்த‌வ‌ வேத‌ம் கூறுகிற‌து. உல‌க‌ம் தோன்றிய‌ போது கீழ்ப்ப‌டியாமையால் தோன்றிய‌ பாவ‌த்தைப் போக்க இறைவ‌ன் ம‌னுமைந்த‌னாக‌ (இயேசுவாக‌) வ‌ந்து சிலுவையில் த‌ன்னையே ப‌லியாக‌க் கொடுத்து பாவ‌த்தை போக்கினார். உயிர்த்தெழுந்த இறைவ‌னாய் இன்றும் ம‌க்க‌ளுக்கு பாவ‌த்தை எதிர்த்து நிற்கும் ச‌க்தியை அருளுகின்றார்.


முப்பத்து மூன்று ஆண்டுக‌ள் உல‌கில் இளைஞ‌னாக‌ வாழ்ந்து, ப‌ரிசுத்த‌மான‌ மாதிரியாய் வாழ்ந்து ம‌க்க‌ளுக்காய் ம‌ரித்த‌ இயேசுவை நம்பி உன் உணர்வுகளை அவரிடம் ஒப்படைத்துவிடும் போது அவ்வித வலிமையை நிச்சயம் உனக்கு அருளுவார்.


அப்படிப்பட்ட‌ புனித வாழ்வை த‌னியொருவ‌ன் நீ அடைந்து, அத‌ன் மூல‌ம் எயிட்ஸ் இல்லா புதியதோர் உல‌கு செய்ய‌ நீ ஆய‌த்த‌மா?



[தரிசனச்சுடர்- ஆகஸ்ட் 2008 - நற்செய்தி இதழில் வெளியான எனது கட்டுரை.]


.

Monday, July 21, 2008

பாலுற‌வு சோத‌னைக‌ளும் ப‌ரிகார‌ப் பதில்க‌ளும்

சோத‌னை 1: "'செக்ஸ்' ந‌‌ம்மை இன்னும் நெருக்க‌மாக்கும்"

ப‌தில்: இல்லை. செக்ஸ் ம‌ட்டுமே ந‌மது உற‌வின் மைய‌மாகி, வேறு எத‌ற்கும் அங்கே இட‌மிருக்காது.


சோத‌னை 2: "உன‌க்கு உண்மையாக‌வே என்மீது அன்பு இருந்தால், நிச்ச‌ய‌மாக‌ இத‌ற்கு ஒத்துக் கொள்வாய்"

ப‌தில்: நீ உண்மையாகவே என்னை நேசித்தால் இப்படி என்னிட‌ம் கேட்க‌வே மாட்டாய்; நீ என்னை ம‌திக்க‌வில்லையா?


சோத‌னை 3: "இந்த ஒரேயொரு தடவை மட்டும்..."

ப‌தில்: யாராலும் செக்ஸை ஒருமுறையோடு நிறுத்த‌ முடியாது. அது திரும்ப‌த் திரும்ப‌ வேண்டும் என்று ஏங்க‌ வைக்கும்.


சோத‌னை 4: " என் ஞாபகர்த்தமாக இதை உனக்குக் கொடுக்க விரும்புகிறேன்"

ப‌தில்: ஓ, ஒருவேளை எயிட்ஸ்... அல்ல‌து குழ‌ந்தை...?


சோத‌னை 5: "நீ என்னோடு செக்ஸ் உறவு கொள்ளவில்லை என்றால், நான் வேறு யாரையாவது தேடிக் கொள்வேன்"

ப‌தில்: ந‌‌ல்லது. ந‌ம் இருவ‌ருக்கும் அமோக‌மான‌ வாழ்க்கை அமைய‌ என‌து ந‌ல்வாழ்த்துக்க‌ள்.


சோத‌னை 6: "எல்லோரும் தான் செய்கிறார்களே..."

ப‌தில்: இது உண்மையல்ல; எத்தனையோ பேர் இதனைத் தவிர்த்து, கற்போடு வாழ்கிறார்கள்.


சோத‌னை 7: "கவலையே வேண்டாம். நான் ஆணுறையை பயன்படுத்துகிறேன்; நல்ல பாதுகாப்பு உண்டு".

ப‌தில்: என‌க்கும் 100% பாதுகாப்பு த‌ரும் ஒன்று உண்டு. அது தான் 'வேண்ட‌வே வேண்டாம்' என்ப‌து.

நண்பனே,ஒருவேளை நீ ஏற்க‌ன‌வே செக்ஸ் உறவை அனுப‌வித்து விட்டாய். இன்னும் திரும‌ண‌மாக‌வில்லை. ம‌ன‌ம் உடைந்திருக்கிறாய். நீ கேவ‌ல‌மாக‌, அசுத்த‌மாக‌, க‌ள‌ங்க‌ப்ப‌ட்ட‌வனாக‌ உண‌ருகிறாய். என்ன‌ செய்வ‌தென்று அறியாம‌ல் திகைக்கிறாய்.

உன‌க்கு ஒரு ந‌ற்செய்தி. இன்றே நீ ஒரு புது வாழ்வை ஆர‌ம்பிக்க‌லாம். நீ செய்துவிட்ட‌து த‌வ‌றே என்ற‌ போதிலும் தேவ‌ன் இன்னும் உன்னை நேசிக்கிறார். நீ தேவ‌ன‌ண்டை வந்து, உன் பாவ‌த்தை அறிக்கையிட்டு, உண்மையாக‌வே நீ செய்த‌வ‌ற்றுக்காக‌ ம‌ன‌ம் வருந்துவாய் என்றால், அவ‌ர் உன்னை ம‌ன்னித்து, உன்னை விடுத‌லையாக்கி, உன‌க்கு வாழ்வ‌ளிப்பார். நீ உன்னை ஒரு புது ம‌னித‌னாக‌, ம‌னுஷியாக‌ உண‌ர‌ முடியும்.


இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. (2 கொரி 5:17).

Source: Ten Reasons Not To Have Sex Before Marriage (Tamil)

Saturday, May 10, 2008

வாழ்வதா சாவதா - எது கடினம்?

எனது இளங்கலை கல்லூரி நாட்களில் நான் விரும்பி பயன்படுத்திக் கொண்டிருந்த ஒரு குறிப்பிட்ட பொருளை எப்படியாவது என்னிடமிருந்து பறித்துக் கொள்ள வேண்டுமென்று முயற்சி செய்த எனது நெருங்கிய நண்பனின் முயற்சி இறுதியில் தோல்வியில் முடிந்தது. கடைசி முயற்சியாக அவன் என்னிடம் இப்படியாக கூறினான். " அவனவன் நண்பர்களுக்காக தன் உயிரையே கொடுக்குறான்க; நீ என்னவென்றால், இந்த சாதாரணமான பொருளையே எனக்காக விட்டுக் கொடுக்க மாட்டேன் என்கிறாயே" உடனே நானும் இப்படியாக எனது பதிலை கூறினேன், " நீ வேண்டுமென்றால் எனது உயிரை வேன்டுமென்றாலும் எடுத்துக்கொள்; ஆனால் இந்தப்பொருளை விட்டுவிடு."


இதனைக் கேட்ட அவன் சிரித்துக் கொண்டே இடத்தைக் காலி செய்து விட்டான். ஆனால் இந்த நிகழ்ச்சியை ஞாபகப்படுத்திக் கொள்ளும் போதெல்லாம் எனக்கு ஒரு குறிப்பிட்ட ஆவிக்குரிய கருத்து எனது எண்ணத்தில் வரும் அதனை உங்களுடன் பரிந்து கொள்ள‌ விரும்புகிறேன்.


எனது நண்பனுக்கு வேண்டிய்தெல்லம் நான் விரும்பி பயன் படுத்திக் கொண்டிருந்த‌ எனது பொருள் தான். எனது உயிரை கொண்டு அவன் ஒன்றும் செய்ய முடியாது. ஆனாலும் அன்பின் உச்சக் கட்ட வெளிப்பாடாகத் தான் அவன், உயிர்விடுதலைக் குறிப்பிட்டான். அவனை பொறுத்தவரை எனது உயிர் அல்ல; எனது பொருள் தான் முக்கியம்.


ந‌ம்மில் ப‌ல‌ர் ஆண்ட‌வ‌ருக்காக‌ இர‌த்த‌ சாட்சியாக‌வும் ம‌ரிக்க‌ த‌யார் என‌ மார்த‌ட்டிக் கொள்வதுண்டு. ஆனால் எத்த‌னை சூழ்னிலைக‌ளில் கிறிஸ்துவின் உண்மை சாட்சியாய் ந‌ம்மை வெளிப்படுத்திக் கொள்வ‌தில் த‌ய‌க்க‌தைக் காட்டியிருக்கின்றோம். நாமெல்லரும் இர‌த்த‌ சாட்சியாய் ம‌ரிக்க‌ வேண்டுமென்று ஆண்ட‌வ‌ர் ந‌ம்மை அழைக்க‌வில்லை; நாம் அவ‌ருக்காய் சாட்சியாய் வாழ‌வேண்டும் என‌வும் அத‌ற்கான பாதையில் ஒருவேளை ம‌ரிக்க‌வேண்டி வந்தாலும் அத‌ற்கும் த‌யாராக‌ இருக்க‌ வேண்டுமென்று தான் அவர் ந‌ம்மிட‌ம் எதிர்பார்க்கிறார்.


உள்ளூர்க் குட்டையில் மீன் பிடிக்காத‌வ‌ன் எப்ப‌டி வெளியூரில் ஆற்றில் மீனைப் பிடிக்க‌ முடியும்? என‌வே சாட்சி வாழ்க்கை வாழ‌ து(டி)ப்பில்லாத‌வ‌ர்க‌ளின் 'இர‌த்த‌ சாட்சி' வாசகங்க‌ளெல்லாம் வெறும் வெட்டிப் பேச்சுக்க‌ள்.


"வாழ்வ‌தே கிறிஸ்துவுக்காக‌; அத‌ற்காக‌ சாவ‌தும் மேலாதே" என்ற‌ ப‌விலின் வார்த‌தைக‌ளைப் போன்று நாமும் சாகும் வ‌ரையும் நல்ல‌ சாட்சியாய் வாழ‌ தீர்மானிப்போமா?

Sunday, January 20, 2008

யோகா - ஒரு கிறிஸ்தவ மருத்துவரின் கண்ணோட்டம்.

முற்காலங்க‌ளிலெல்லாம் மக்களிடையே காலரா, வாந்திபேதி, நிமோனியா, தொற்றுநோய்க‌ள் என கிருமிகளினால் ப‌ர‌வும் வியாதிக‌ள் மிக அதிக அளவில் காணப்பட்டன‌. ஆனால் இந்நாட்க‌ளில் ச‌ர்க்க‌ரை, இர‌த்த‌க் கொதிப்பு, புற்றுநோய், மாரடைப்பு, ம‌ன‌ அழுத்த‌ம் போன்ற‌ வாழ்க்கைமுறை சார்ந்த (Life style diseases) வியாதிகளே அதிகமாகப் பேசப்படுகின்றன‌.


மருத்துவத் துறையின் அசூர வள‌ர்ச்சி மற்றும் தகவல் தொழில் நுட்பங்களின் பெருக்கம் மருத்துவருக்கும் நோயாளிக்குமிடையே உள்ள இடைவெளியை அதிகரிக்கச் செய்கிறது... ம‌ருத்துவ‌ச் செலவினத்தைக் கூட்டுகிற‌து... சில வேளைகளில் செல‌வு செய்ய ப‌ண‌ம் இருந்தும் செலவு செய்துகூடப் புண்ணிய‌மில்லை என மருத்துவத்துறை கைவிரிக்கும் நிலைமையில், எப்படியாயினும் தீர்வு கிடைத்து விடாதா என்ற எதிர்பார்ப்போடு மாற்று மருத்துவ முறைக‌ளில் (Alternative Medicine) நாட்ட‌ம் செலுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.


மருத்துவமனைகளுக்கு வந்துசெல்லும் நோயாளிகளில் மூன்றில் ஒருவருக்கு இருப்பது அவரது மனரீதியான பாதிப்புகளினால் ஏற்படும் உடல்நல கோளாறுகளே. இந்நிலையில் அவர்கள் மருந்து மாத்திரகளை மறந்துவிட்டு மாற்று மருத்துவ முறைகளில் ஊக்குவிக்கப்படுவது ஒன்றும் புதிர‌ல்ல. உலகில் யோகா, ஆழ்நிலை தியானம் போன்ற இருபதுக்கும் மேற்பட்ட மாற்று மருத்துவ முறைகள் உள்ளன. ஒருவித‌த்தில் ஆங்கில மருத்துவத்தின் (Allopathic Medicine) வ‌றைய‌றுக்க‌ப்ப‌ட்ட‌ எல்லையே யோகா போன்ற மாற்றுமுறை மருத்துவத்தின் வள‌ர்ச்சிக்கு காரணம் எனலாம்.



யோகா என்பது என்ன?


சமஸ்கிருத மொழியிலிருந்து வந்த யோகா என்ற வார்த்தைக்கு "இணைப்பு" என்று பொருள். உட‌ல் ஆச‌ன‌ நிலைக‌ள் ம‌ற்றும் மூச்சுப்பயிற்சிக‌ள் மூலம் மனிதனை இறைவனுடன் இணைக்க முற்படும் மனித முயற்சியே யோகா என்றழைக்கப்படுகிறது.

யோகா என்பது அடிப்படையில் ஒரு தனிமனித ஒழுக்கம், வாழ்க்கை முறை, சுய முன்னேற்ற கருவி, உடல் மற்றும் மனநலம் பேணும் ஒரு அறிவியல் சார்ந்த கலை, ஆன்மிக சாதனம் இப்படிப் பலராலும் பலவிதமாக கருதப்படுகிற்து. மன அமையின்மை, மன அழுத்தம், அலைச்சல், வேலைப் பளு, மாசடைந்த உணவு, சுற்றுப்புற சூழல், ஊடகங்களின் தாக்கங்கள் ஆகிய போன்ற சமுதாய சவால்களை எதிர்த்துப் போராடுவதற்கு யோகா ஒரு நல்ல ஆயுதம் என்கின்றனர்.

நம்மில் பலரும் யோகா என்றாலே, தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து வலுவினை ஊட்டும் ஒரு சாதாரணமான உடற்பயிற்சி என்றுதான் நினைக்கிறோம். ஆனால் அது உடற்பயிற்சிக‌ளுக்கெல்லாம் மேலான தத்துவங்களை மையமாகக் கொண்டுள்ளது.

சுமார் கி.மு. 150 வருடங்களில் உருவான பதஞ்சலி யோகசூத்திரத்தின் படி யோகாவில் யமம். நியமம், ஆசனம், பிராணயமம், பிரத்யாகரம், தாரணை, தியானம் ம‌ற்றும் சமாதி என ஆக‌ மொத்தம் எட்டுவகையான வழிமுறைகள் உண்டு. ஆனால் பிந்நாட்களில் 15 ம் நூற்றாண்டில் ஆசனம் (குறிப்பிட்ட நிலையில் அமர்ந்திருக்கும் உடற்பயிற்சி), பிராணயமம் (சுவாசத்தை உள்ளே வெளியே இழுக்கும் மூச்சுப் பயிற்சி) என்ற இரண்டு அம்சங்களை மட்டும் உள்ளடக்கிய கதா யோகா உருவெடுத்து மற்ற மதத்தினருடன் எதிர்நோக்கும் தத்துவ தர்க்கங்களை சற்றே சாமர்த்தியமாக தவிர்த்து இன்று உலகமுழுவதிலும் பிரபலமாகி வருகிற‌து.



யோகாவின் தத்துவப் பின்னணி:


யோகா வெளிப்படையாகவே கிறிஸ்தவ தத்துவங்களுக்கு எதிரானது. மனிதனை கடவுளோடு இணைக்க முற்படும் முயற்சியே யோகா என்றறிந்தோம். கடவுளைக் குறித்த கருத்தில் இரண்டிற்கும் பெருத்த வேறுபாடு உள்ளது.

முப்பத்து முக்கோடி தெய்வங்களைக் கொண்ட இந்து மதக் கருத்தின் படி காண்ப‌தெல்லாம் கடவுள் தான். இறைவன் ஒரு ஆள்த்தத்துவத்தோடு இல்லாமல் ஒரு ஆன்மீக பொருளாக அண்ட சராசரத்திலுள்ள எல்லாவற்றிலும் வியாபித்துள்ளார் என அது கூறுகிறது. ஆனால் கிறிஸ்தவமோ, இறைவன் என்பவர் மனிதன் உட்பட அண்ட சராசரங்கள் அனைத்தையும் தனது வார்த்தையினால் படைத்த ஆள்த்தத்துவமுள்ள ஒருவரே என தெளிவாய் கூறுகிறது.

ம‌னிதனைக் குறித்த கருத்திலும் இரண்டிற்குமிடையே வேறுபாடு உள்ளது. காண்ப‌தெல்லாம் கடவுள் என்பதால், உடல் ஆசன மற்றும் மூச்சுப் பயிற்சிகள் மூலமாக மனிதனும் இறை நிலையை அடைகிறான் என்பது யோகாவின் கருத்து. இது "நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள்" (ஆதி.3:4) என்று சாத்தான் ஏவாளை வஞ்சித்தது போல் அல்லவா உள்ளது. பரிசுத்த வேதாகமமோ மனிதன் இறைவனால் தனது சொந்த சாயலில் படைக்கப்பட்ட ஒரு படைப்பு; படைப்பும் படைத்தவரும் ஒன்றாகிவிட முடியாது என கூறுகிறது.

மனிதனின் அடிப்படை பிரச்சினையும் அதற்கான தீர்வும் குறித்த விஷயத்தில் மனிதன் தனது இறைநிலையை உணராமல் இருப்பது தான் அவன‌து அனைத்துவகையான பிரச்சினைகளுக்கும் காரணம் என்பதும் அத‌னை அவன் த‌னது முய‌ற்சியினால் அடைந்து விட‌லாம் என்பதும் யோகாவின் க‌ருத்து. ப‌ரிசுத்த‌ வேதாக‌ம‌த்தின் படியோ ம‌னித‌னின் பாவ‌நிலைமையே அவன‌து பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம்; இயேசுகிறிஸ்துவின் இரத்தமே சகல பாவங்களையும் நீக்கி, அவ‌னை சுத்திகரிக்கும். இது கிருபையாய் தேவ‌னால் அருள‌ப்ப‌டும் அன்ப‌ளிப்பு; அது முய‌ற்சியினால் ச‌ம்பாதிக்க‌ இய‌லாத‌ ஒன்று.யோகா உண்மை தெய்வத்திற்குப் பதிலாக ஒருவன் தன்னையே மையப்படுத்திக் கொள்ள‌ போதிக்கிற‌து. வாழ்வின் இக்கட்டான வினாக்களுக்கு தீர்வை வேதாகமத்தில் தேடுவதைத் தடுத்து அவன் தனது மனசாட்சியையே நாடும் படி ஊக்குவிக்கிற‌து.



அதிலென்ன தவறு?


அதெல்லாம் சரி, எப்படியாயினும் யோகா ஒருவிதத்தில் நன்மையைத் தானே தருகிறது. பின்னர் அதிலென்ன தவறு; பின்னணியிலுள்ள தத்துவத்தை மட்டும் தவிர்த்து விட்டு வெறும் யோகாசன நிலையையும் உடற்பயிற்சியையும் மட்டும் எடுத்துக் கொள்வதில் தவறு இல்லையே என சிலர் கூறுவது எனது காதினுள் தொனிக்கிறது. அது சரியாக இருக்க வாய்ப்பில்லை.

அனைத்து வகையான யோகாவுமே ஆன்மீகப் பயிற்சிகளே. ஒவ்வொரு யோகாசன நிலையும் இந்து தெய்வங்களை வழிபடுவதாகும். உடல் ஆசன மற்றும் பயிற்சிகளை அவ்ற்றின் ஆன்மீக ஈடுபாடுகளிலிருந்து பிரித்துப் பார்க்க இயலாது. இதுகுறித்து, Hinduism Today என்ற பத்திரிக்கை (April -June 2003) த‌ன‌து க‌ருத்தாக‌ "க‌தா யோகாவை இந்து ம‌தத்திலிருந்து பிரித்துப் பார்ப்ப‌து ஒரு ஏமாற்று வேலையாகும். அநேக‌ யோகா ஆசிரிய‌ர்க‌ள் அத‌ன் வேர் இந்து மத‌த்தில் இருப்பதையும் அத‌ன் ஆன்மீக‌ நோக்கத்தையும் அறியாதிருக்கிறார்கள்" என்று கூறி த‌னது ஆத‌ங்கத்தை வெளிப்ப‌டுத்தியுள்ள‌து.

உண்மை தெய்வத்தின் அருளால் வியாதிகள் அகலும் போது, தீய சக்திகளின் வல்லமையினாலும் வியாதிகள் விலகும் என்பதை ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும். அது ஆச்சரியமல்ல; ஏனெனில், சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே (2 கொரி. 11:14). எனவே வியாதியை நீக்குவதால் ஒருவர் தெய்வமாகி விட முடியாது. ஆனால், நம்முடைய தேவனோ உண்மை தெய்வமாக இருப்பதினால் தான் அவரால் சரீர சுகத்தை மட்டுமல்ல, ஆவி ஆத்துமா சரீரம் முழுவதுமான ஒரு பூரண தெய்வீக சுகத்தை அருளுகிறார். எனவே நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள் (1 யோவான் 4:1).

அது எப்படி அந்த வேலையைச் செய்கிறது என்பது மிகவும் முக்கியம். வேதாகமத்திற்கு முரண்பாடான‌ மந்திர சக்தியினால் அது நடை பெறுகிற‌தா? அப்படியெனில் அது இறுதியில் விடுதலையை அல்ல அடிமைத்தனத்தையே கொண்டு வரும். எனவே எதையும் ஏற்றுக் கொள்ளுமுன் எல்லவற்றையும் சோதிக்கும் மனப்பக்குவம் வேண்டும். அப்போது தான் நலமானதை பிடித்துக் கொள்ளமுடியும். யோகா போன்ற மாற்று மருத்துவ முறைகளில் எது நல்லது எது பொல்லாதது என தெளிவாக எளிதில் வறையறுக்க இயலாத நிலையில் ... "பொல்லாங்காய்த் 'தோன்றுகிற' எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்" என்ற‌ தார‌க‌ மந்திர‌த்தை க‌டைபிடிக்க‌ வேண்டும். விசுவாசத்தினால் வராத யாவும் பாவமே (ரோமர் 14:23). எனவே சந்தேகத்திற்கிடமான செயல்களில் விலகியிருப்பது தான் நல்லது.



கிறிஸ்த‌வ‌ யோகா?


சமீப காலங்களில் உடல் மற்றும் மூச்சுப் பயிற்சியையும் வேதாகம தியானத்தையும் இணைத்து கிறிஸ்தவ யோகா என்று புதிதாக ஒன்று முளைத்திருக்கிறது. கிறிஸ்தவ யோகா என்பது அடிப்படையிலேயே ஒரு வார்த்தை முரண்பாடு. ஒருவனை கிறிஸ்தவ இந்து, இல்லையென்றால் இந்துக் கிறிஸ்தவன் என்று நம்மால் வர்ணிக்க இயலுமா? ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா? (யாக்கோபு 3:11). நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது என்று பரிசுத்த வேதம் தெளிவாய் போதிக்கிறது.(மத். 7:18). எனவே யோகா என்ற மரத்தின் வேர் ஆதாரத்தை எண்ணிப் பார்க்க வேன்டியது மிகவும் அவசியம்.

சுவிசேசத்தை பிரசங்கியுங்கள்... வியாதியுள்ளவர்களை சொஸ்தமாக்குங்கள்... இதுவே பன்னிரு சீடர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளையின் வரிசை(மத். 10:7,8). ச‌ரீர நலனில் காட்டும் அக்கறையைக் காட்டிலும் ஆன்மீக‌ ந‌ல‌னே மிக‌வும் முக்கிய‌ம். ஏனெனில், ச‌ரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது (1 தீமோ 4:8).




வேத‌ம் நமது தியான‌மாக‌ட்டும்; ஜெபம் நமது பயிற்சியாகட்டும்:



வேதாக‌ம‌த்தின் ப‌டி தியான‌ம் என்ப‌து பரிசுத்த வேதத்தில் வெளிப்ப‌டுத்தப்ப‌ட்டுள்ள‌ ச‌த்திய‌ங்க‌ள் எந்த‌ அள‌விற்கு நமக்கு ச‌ம்பந்த‌ப்ப‌ட்ட‌வை என‌ சிந்த‌னை செய்து அவற்றை நமதாக்கிக் கொள்லுத‌லைக் குறிக்கிற‌து. தாவீதின் தியான‌ங்க‌ள் ச‌ங். 119 முழுவதிலும் தெளிவாய் திரும்ப‌த் திரும்ப‌ வெளிப்ப‌டுகின்ற‌ன. வேத வாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிற ப‌டியால் (2 தீமோ. 3:16) அவையாவும் நிச்சயமாக நாம் தியானிக்க‌த் த‌குந்த‌வையே.

வேத‌த்தின் மூல‌ம் தேவ‌ன் ந‌ம்மோடு பேசுகிறார்; ஜெப‌த்தின் மூல‌மாக‌ நாம் அவ‌ரோடு உற‌வாடுகிறோம். இக்கட்டான சூழ்நிலைகளில் கூட‌ தானியேல், தன் மேலறையிலே தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான் என்பதை அறிவோம். நமது பிரச்சினைகளை இறைவனிடம் எடுத்துக் கூறி உரிய தீர்வைப் பெற்றுக் கொள்ள ஜெபமே சிறந்த‌ பயிற்சியாகும்.

"போஜனம் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் புசியாதிருப்பேன்" என்று தீர்மனித்த பவுலைப் போன்று நாமும் தெளிவுள்ளவர்களாய் மற்ற சக விசுவாசிகளுக்கு எந்த விதத்திலும் இடறலாயிராமல் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுவோம்; வழி நடத்துவோம்.


அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, அவருடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை (ரோமர். 12:1).


[ இது "உன்னத சிறகுகள்" என்னும் (அக்டோபர்- டிசம்பர் 2007) காலாண்டிதழில்
வெளியாகியுள்ள எனது கட்டுரை. ]

இந்த கட்டுரையை இங்கே ஆங்கிலத்தில் படித்து ,  தமிழ் அறியாத தங்கள் நண்பர்களுடனும் பகிந்து கொள்ளலாம்.