Wednesday, August 13, 2008

புதிய‌தோர் உல‌கு செய்வோம்

இன்று நாம் எத்திசை திரும்பினாலும் எச்.ஐ.வி/எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வு வாசகங்களைக் காணமுடிகிறது. சமீபத்தில் சிக்குன்குனியா, அதற்கு முன்னர் சார்ஸ், போன்ற நோய்களெல்லாம் திடுதிப்பென வந்து பரபரப்பை உண்டுபண்ணி விட்டு பின்ன‌ர் பதுங்கிக் கொண்டன. ஆனால் 27 வருடங்களுக்கு முன்னர் முதன் முதலில் கண்டறியப்பட்ட எயிட்ஸ் நோய் தற்போது இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட இருநூறில் ஒருவருக்கு என்ற அளவில் பரவலாகப் பரவி பரபரப்பையல்ல, பரிதாபத்தை உண்டுபண்ணி வருவதை நாம் கண்கூடாகக் கண்டுவருகிறோம்.


நம்மில் எச்.ஐ.வி/எயிட்ஸ் பற்றி பலரும் பலவிதமாக பேசிக்கொண்டாலும் நான்கு வழிமுறைகளில் மட்டுமே அது பரவுவதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. முதலில் தகாத அல்லது பாதுகாப்பற்ற பாலுறவினால்; இரண்டாவது இந்த கிருமியினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணிடமிருந்து குழந்தைக்கு; அடுத்து இந்த‌ கிருமிகளைக் கொண்ட இரத்தம் தோய்ந்த ஊசிகளின் மூலம்; இறுதியாக பரிசோதிக்கப்படாத இரத்ததானம் மூலமாக.


இவ்விதம் இது நான்கு வழிகளில் பரவினாலும் முதலாம் வகையின் மூலமே கிட்டத்தட்ட 90 சதவிகிதம் பரவுகிறது என்பதும் எச்.ஐ.வி/எயிட்ஸ் கிருமியினால் பாதிக்கபட்டவர்களில் 50 சதவிகிதத்தினர் 15 முதல் 24 வய‌திற்குட்பட்ட இளைஞர்கள் என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயமாகும். இந்தியாவின் எதிர்கால‌ம் இளைஞ‌ர்க‌ள் கையில்... ஆனால் இத்த‌கைய‌ இளைஞ‌ர்க‌ளின் எதிர்கால‌ம்...?


மருத்துவ அறிவியலின் வளர்ச்சி, சட்ட திட்டங்கள் என பல்வேறு முயற்சிகளினால் மற்ற மூன்று வழிமுறைகளும் வெகுமாக கட்டுப்படுத்தபட்டு வரும் நிலையில், முதல் வழிமுறையினைத் தடுக்கும் முக்கிய வழிமுறைகள் தெரியாமல் இன்னமும் தவித்து வருவது இன்று நமது சிந்தனைக்கு விருந்தாகி விட்டது. ஆக "எயிட்ஸை தடுக்க உடனடித் தேவை சட்டமா? மனமாற்றமா? என திண்டுக்கல் லியோனி போன்றோரின் சமீபத்திய பட்டிமன்ற கருப்பொருளாகவும் அது உருவெடுத்துள்ளது.


எச்.ஐ.வி/எயிட்ஸ் பரவுவதைத் தடுக்க தற்போது இருக்கும் ABC திட்டம் மிகவும் பிரபலமான ஒன்று. அதாவது, A - (Abstinence) திருமணத்திற்கு முன் பாலுற‌வைத் த‌விர்த்தல்; B - (Being faithful to the partner) திருமண்த்திற்குப் பின் உண்மையாயிருத்தல்; C - (Condom usage) இரண்டும் முடியாத பட்சத்தில் ஆணுறை அணிதல். இவை பார்ப்பதற்கு மிகவும் எளிதாகவும், பயனுள்ளவையாகவும் தோன்றினாலும் நடைமுறையில் பல சிக்கல்களையும் தத்துவ தர்க்கங்களையுமே இது கொண்டுவர வல்லது. ஒருவேளை குறிப்பிட்ட சூழலில் இருப்போரிடையே கட்டுக்கடங்கா வேகத்தில் பரவிவரும் அதன் அளவினை ஓரளவிற்கு கட்டுப்படுத்தும் ஆரம்பகட்ட முயற்சியாக இது உதவுகிறதே தவிரே இதுவே முடிவான தீர்வு அல்ல.


இது அவசியமான ஒன்றுதான்; எனினும் எச்.ஐ.வி/ எயிட்ஸ்‍க்கு உண்மையான‌ ப‌தில் பாலுற‌வு ந‌டத்தை மாற்ற‌மே. நெறிமுறைக‌ளைப் பின்ப‌ற்றி பாலுற‌வு ந‌ட‌த்தையில் மாற்ற‌த்தைக் கொண்டு வ‌ருவ‌த‌ன் மூல‌ம் எயிட்ஸின் போக்கையே த‌லைகீழாக திருப்ப‌லாம் என்ப‌த‌ற்குச் சான்று பகரும் வண்ணம் உகாண்டா போன்ற சில நாடுகள் எயிட்ஸின் பிடியில் மடிந்துக் கிடந்த நிலையிலிருந்து இன்று அவை எழுந்து நிமிர்ந்து நிற்க‌த் தொட‌ங்கியுள்ள‌ன‌.


ஆனால், இன்றைய இளைஞர்கள் நமக்கோ சவாலே இங்கு தான். 'செக்ஸ்' என்பது மிகவும் பிடித்துப் போன சப்ஜெக்ட் ஆகி விட்டது. அது பற்றிய பாடல்களையே அதிகமாக கேட்கிறோம் அல்லது பாடுகிறோம். அதைப் பற்றிய ஜோக்குகளையே அதிகம் விரும்பி கேட்கிறோம். விளம்பரங்கள் முதல் காட்சிகள் வரை 'கவர்ச்சிகள்' இல்லாத நிலையைக் காண்பது என்பது மிகவும் அரிதாகி விட்டது. அப்போதெல்லாம், 'நானும் அனுபவித்துப் பார்க்கவேண்டும்' என்ற அடக்க முடியாத ஆவலும் ஒருவித கிளர்ச்சியும் நம்மைப் பாடாய்ப் படுத்திவிடுகின்றன அல்லவா?


அதும‌ட்டுமா... 'உன் அன்பை நிரூபித்துக் காட்ட‌', 'உன் ஆண்மையை நிரூபிக்க‌', உன்னால் முடியும் என‌ நிரூபித்துக் காட்ட‌' என, அப்பாடா... இப்படி எத்தனையோ வ‌கையான‌ அழுத்த‌ங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ளிட‌மிருந்தே நாள்தோறும் வ‌ந்து கொண்டிருக்கின்ற‌ன‌வே. பின்ன‌ர் எப்ப‌டி ந‌ட‌த்தையில் க‌ண்ணிய‌மாய் இருப்ப‌து? உன‌து சூழ்நிலைக‌ள் எதுவாயிருப்பினும், பள்ளி/ கல்லூரி இளைஞன் என்ற முறையில் நீ உறுதியான தீர்மானம் எடுக்க வேண்டியதெல்லாம் 'திருமணத்திற்கு முன் உடலுறவு என்பதே இல்லை' என்பது தான்.


காதல் வலையில் சிக்கியோர் பலர் தங்களையும் அறியாமல் சிக்கிக் கொள்ளும் அடுத்த வலை தான் பாலுறவு. அன்பும் பாலுறவும் ஒன்றல்ல. பாலுறவு ஒன்றும் அன்பின் வெளிப்பாடும் அல்ல; உணமையாகக் கூறினால், ஒருவர் மேல் உண்மையான அன்பு செலுத்தும் எவரும் மற்றவரை திருமணத்திற்கு முன் பாலுறவிற்கு நிர்ப்பந்திக்க இயலாது. கொஞ்ச‌ நேர‌ இன்ப‌த்திற்காக‌வும் அட‌க்க‌முடியாத வேட்கைக்காக‌வும் தகாத முறையில் இருவ‌ர் ஒன்றாக‌ கூடுவ‌துட‌ன் பாலுற‌வு முடிவடைந்து விடுவ‌தில்லை. அதுவே வேத‌னைக‌ளின் ஆர‌ம்ப‌ம். எதிர்பார்த்திருந்த‌ இன்ப‌த்தைக் காட்டிலும் மேலான‌ குற்ற‌ உண‌ர்வையும் ம‌ன‌த்துயரையுமே அது கொண்டு வ‌ரும்.


எனவே திரும‌ண‌ம் வ‌ரை பாலுற‌வைத் த‌விர்ப்ப‌து என்பது அனைத்து வழிகளிலும் பயன் தரக்கூடியது. அது ஒன்றும் முடியாத‌ காரிய‌ம் அல்ல! உன்னைச் சுற்றிலும் அனேகர் அது சாத்தியம் என‌ நிரூபித்துக் கொண்டிருக்கிறார்களே! இத்தகைய வலிமையைப் பெறுவது எவ்வாறு? கிறிஸ்த‌வ‌ வேத‌ம் கூறுகிற‌து. உல‌க‌ம் தோன்றிய‌ போது கீழ்ப்ப‌டியாமையால் தோன்றிய‌ பாவ‌த்தைப் போக்க இறைவ‌ன் ம‌னுமைந்த‌னாக‌ (இயேசுவாக‌) வ‌ந்து சிலுவையில் த‌ன்னையே ப‌லியாக‌க் கொடுத்து பாவ‌த்தை போக்கினார். உயிர்த்தெழுந்த இறைவ‌னாய் இன்றும் ம‌க்க‌ளுக்கு பாவ‌த்தை எதிர்த்து நிற்கும் ச‌க்தியை அருளுகின்றார்.


முப்பத்து மூன்று ஆண்டுக‌ள் உல‌கில் இளைஞ‌னாக‌ வாழ்ந்து, ப‌ரிசுத்த‌மான‌ மாதிரியாய் வாழ்ந்து ம‌க்க‌ளுக்காய் ம‌ரித்த‌ இயேசுவை நம்பி உன் உணர்வுகளை அவரிடம் ஒப்படைத்துவிடும் போது அவ்வித வலிமையை நிச்சயம் உனக்கு அருளுவார்.


அப்படிப்பட்ட‌ புனித வாழ்வை த‌னியொருவ‌ன் நீ அடைந்து, அத‌ன் மூல‌ம் எயிட்ஸ் இல்லா புதியதோர் உல‌கு செய்ய‌ நீ ஆய‌த்த‌மா?



[தரிசனச்சுடர்- ஆகஸ்ட் 2008 - நற்செய்தி இதழில் வெளியான எனது கட்டுரை.]


.