Saturday, September 14, 2013

மருத்துவ சுகமா? தெய்வீக சுகமா?



’இந்த வருடத்திலிருந்து டாக்டர். பேதுரு அவர்கள் நம் (அமைதிநேர நண்பன்) இதழில் மருத்துவம் மற்றும் மன ஆரோக்கியம் போன்றவைகளைக் குறித்து எழுத சம்மதித்திருக்கிறார்கள்’ என கடந்த இதழில் அறிவிக்கப்பட்டு விட்டது. இப்போது நான் எழுதியே ஆக வேண்டும்... எதை எழுதுவேன்... ஒரு மருத்துவன் என்ற முறையில் உடல்நலக் குறிப்புகளையா? இல்லை, ஒரு கிறிஸ்தவன் என்ற முறையில் ஆன்மீக நலனையா? இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போதே எனது அலைபேசியில் ஒரு குறுஞ்செய்தி வந்து சேர்ந்தது. 


எனது கல்லூரியில் கிறிஸ்தவ மாணவன் ஒருவன் குறிப்பிட்ட வேதாகமக் கருத்தில் ஒரு தொடராக தினமும் நண்பர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்புவது வழக்கம். தற்போது ‘இயேசுவின் அற்புதங்கள்’ என்ற தலைப்பில் தினமும் ஒவ்வொரு அற்புதங்களை நினைவுபடுத்தி வருகிறான். அந்த விதத்தில் இந்த யோசனையின்போது வந்து சேர்ந்த குறுஞ்செய்தி – கொன்னை வாயுடைய செவிடனை இயேசு குணமாக்குதல் - மாற்கு 7:31-37. அதனை தியானம் செய்தேன். அப்போது என் மனதில் விழுந்த சிந்தனைகளையும் எழுந்த கேள்விகளையும் இங்கே பதித்துள்ளேன். இவற்றை வாசிக்குமுன்னர் அந்த வேதபகுதியை ஒரு முறை வாசித்து விடுங்களேன்.


கொன்னை வாயுடைய செவிடன் (வ32a):


வெறும் செவிடன் அல்ல; கொன்னை வாயுடைய செவிடன். அவனது செவிடுக்கு காரணம் இருக்கிறதோ இல்லையோ, கொன்னை வாய்க்கு காரணம் இருக்கிறது – அது பெரும்பாலும் செவிடு தான் என்பது மருத்துவ அறிவு. ஊமையும் செவிடுமான ஆவியே இவனை விட்டுப் புறப்பட்டுப்போ என்று இயேசு ஒருமுறை சொன்ன (மாற்கு 9:25) ஒரு ஊமையன் அசுத்த ஆவியினால் பிடிக்கப் பட்டிருந்தமையால் ஊமையனாக இருந்தான்; பிறவியிலிருந்தே உமையன் அல்ல (மாற்கு 9:21). இந்த செவிடனுக்கு கொன்னை வாய் பிறவியிலிருந்தே இருந்ததோ, பின்னர் வந்ததோ நாம் அறியோம். 


ஜனங்களின் எதிர்பார்ப்பு (வ32b)


அவர் தமது கையை அவன் மீது வைத்தால் (ஆசீர்வதித்தால்) விடுதலை கிடைத்துவிடும் என்பது அவனைக் கொண்டுவந்த ஜனங்களின் விசுவாசம். அவ்விதமான விடுதலையை விரும்பியே அவர்கள் அவரிடம் வேண்டினர். ஆனால் இயேசுவின் வழிமுறையோ சற்று வித்தியாசமாக இருந்தது.


இயேசுவின் வழிமுறை (வ33-35)


அவரோ அவனை ஜனக்கூட்டத்திலிருந்து தனித்துப் பிரித்தார். தனது வெற்று விரல்களை அவனது காதினுள் நுழைத்தார்; பின்னர் தன் உமிழ்நீரால் நனைந்த தன் விரல்களால் அவன் நாவைத் தொட்டுக் கொண்டே, வானத்தை அண்ணார்ந்து பார்த்து பெருமூச்சு விட்டு எப்பத்தா (திறக்கப்படுவாயாக) என்றார். உடனே அவனுடைய செவிகள் திறக்கப்பட்டு, அவனுடைய நாவின் கட்டும் அவிழ்ந்து, அவன் செவ்வையாய்ப் பேசினான். 


எப்பத்தா என முதலிலேயே சொல்லியிருக்கலாமே... செவிடுக்கு காரணமான அடைப்பை நீக்கவே விரல்களை காதுனுள் நுழைத்தாரோ என்றும், செவிட்டுத்தன்மையால்  அப்படியே இறுகிப் போய்விட்ட அவன் நாவினை தனது நனைந்த கைகளால் தடவி தளர்த்தி விட்டாரோ எனவும் எண்ணத் தோன்றுகிறது. ஊமையும் செவிடுமான ஆவியே இவனை விட்டுப் புறப்பட்டுப்போ என்று இயேசு ஒரு ஊமையனுக்கு ஒருமுறை கட்டளையாக சொன்ன போது (மாற்கு 9:25) அதற்கு காரணமிருந்தது; அவன் அசுத்த ஆவியினால் பிடிக்கப் பட்டிருந்தமையால் தான் ஊமையனாக இருந்தான்.


இயேசுவின் எதிர்பார்ப்பு (வ36)


இயேசு தன்னால் செய்யப்பட்ட அந்த அற்புதத்தை ஒருவருக்கும் சொல்லவேண்டாமென்று அவர்களுக்குக் கண்டிப்பாக கட்டளையிட்டிருந்தார். சொன்னால் ஏற்படும் வீண் சலசலப்புகளால், தான் வந்த காரியம் வீணாகிப் போய்விடக் கூடாது என்பது அவரது எண்ணமாக இருக்கலாம் (மாற்கு 1:43-35). ஆகிலும் எவ்வளவு அதிகமாய் அவர்களுக்குக் கட்டளையிட்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்கள் அதைப் பிரசித்தம்பண்ணினார்கள். இந்நாட்களில் சந்தேகத்திற்கிடமான சுகமாக்குதல்களையும் (?விசுவாச அறிக்கையாக) ’இன்னார்’ மூலமாக இயேசு எனக்கு சுகம் தந்தார் என சொல்லும் படி ஜனங்களை ’அன்னார்’ திணிப்பது ஏனோ? இதனால் எழும் சலசப்புகளுக்கெல்லாம் செவிமடுக்காமல், தற்புகழுக்கான இந்த வாய்ப்பு வீணாகிப் போய்விடக்கூடாது என்பதே ’அன்னார்’ என்ணம் என்பது திண்ணம். 


சிந்தனைக்கு சில கேள்விகள்:


1)  நமக்கு நேரிடும் வியாதிகளுக்கு யார் காரணம்? நம் மூதாதையினரா? நாமா? பிசாசா? இல்லை ஒருவேளை தேவனா?


2) தெய்வீக சுகம்பெற அவசியமான ஒன்று யாருடைய விசுவாசம்? பிணியாளிகளா? பிணியாளிகளின் பொறுப்பாளர்களா? இல்லை, இதையெல்லாம் மீறி இவர்களுக்கு  தெய்வீக சுகம் குறித்த விசுவாசத்தை போதிக்கும் விசுவாச வீரர்களா?


3)   தெய்வீக சுகம் என்பது மருத்துவரால் முடியாத வியாதிகளுக்கு மட்டும் தானா? இல்லை, மருத்துவரால் முடிந்தாலும் அவர்களையல்லாமலே பெற்றுக் கொள்கிற ஒன்றா?


4) பெற்றுக்கொண்ட தெய்வீக சுகத்தை பிரசித்தப்படுத்துவது தவறா? அப்படியானால் வெகுஜன ஊடகங்களைத் தவிர்த்து விட்டு, கிறிஸ்தவ ஊடகங்களில் மட்டுமே அவற்றை பிரபலப்படுத்துவதேன்? 


தலைப்பினைப் பார்த்தவுடனே, இது ஏதோ விவாதத்தை தூண்டும் விதமாக  இருக்கிறதே என எண்ணிய சிலருக்கு இந்த கேள்விகளைக் கண்டவுடன் ஏதோ விதண்டாவாதம் செய்வது போல தோன்றுவதில் தவறில்லை. ஆனால்,  எமது நோக்கம் அதுவல்ல என்பதை வரும் நாட்களில் புரிந்து கொள்வீர்கள். மேற்கண்ட கேள்விகளுக்கு நான் பதிலளிக்கப் போவதில்லை; நீங்களே விடையை தேடிக் கொள்ளுங்கள். அந்த தேடலில், ஆண்டவரை நெருங்கி வருவீர்கள் என்பது எமது எதிர்பார்ப்பு. 


மருத்துவ சுகமா? தெய்வீக சுகமா? என்ற விவாதத்தில் இரு தரப்பு கொள்கையினருமே கூட்டிக்கழித்துப் பார்த்தால், இறுதியில் ’உடல்நலம்’ ஒன்றையே மையமாகக் கொண்டுள்ளனர். எனவே வரும் நாட்களில் கர்த்தர் நடத்தும் விதமாக உடல்நலம் சார்ந்த ஆவிக்குரிய காரியங்களை பகிர்ந்து கொள்கிறேன். 


- டாக்டர். பேதுரு.


(இது அமைதிநேர நண்பன் - மார்ச் 2013ல் வெளியான எனது கட்டுரை)