Sunday, November 06, 2016

பொல்லாங்கனை ஜெயித்ததினால் எழுதுகிறேன்

கிறிஸ்துவில் பிரியமான சகோதர சகோதரிகளுக்கு நம் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அப்போஸ்தலனாகிய யோவான், தான் எழுதிய நிரூபத்தின் நோக்கங்களை மூன்று விதமான மக்களுக்கும் வெவ்வேறாக குறிப்பிட்டத்தையும் அவற்றில் பிள்ளைகளுக்கும் பிதாக்களுக்கும் எழுதியவற்றையும் கடந்த இதழில் விரிவாக தியானித்தோம். வாலிபர்களுக்கு அவர் எழுத்தும் நோக்கத்தினை இந்த இதழில் காண்போம். 
வாலிபர்களுக்கு அவர் எழுதுவதென்ன? ’பொல்லாங்கனை ஜெயித்ததினால் எழுதுகிறேன்’ என்கிறார் (1 யோவான் 2:13b). இரண்டாம் முறையும் அதையே தான், ஆனால் மூன்று படிநிலைகளில் கூறுகிறார். பலவானாய் இருக்கிறதினாலும், தேவ வசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும் உங்களுக்கு எழுதுகிறேன் (1 யோவான் 2:14b) என்கிறார். ஆவிக்குரிய நிலையில் துடிப்பான வாலிபர்களாக இருக்க வேண்டுமெனில், முதலில் இரட்சிப்பு என்ற பிள்ளைகளின் அனுபவம் அடிப்படைத் தேவை. அதைத்தொடந்து வாலிபர்களாய் விளங்கிட நாம்  பொல்லாங்கனை ஜெயிக்க வேண்டும். பொல்லாங்கனை ஜெயிப்பது எப்படி? அவைகளில் உள்ள படிநிலைகளை இங்கு காண்போம். 
பலவான்களாய் இருப்பதினால்:
வாலிபர்கள் இயல்பாகவே பலம் பொருந்தியவர்களாக இருப்பதினால், அவர்களால் எதிராளிகளை எளிதில் மேற்கொள்ள முடியும். வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள் (சங்கீதம் 127:5) என்பது அவர்களுக்கு இரட்டை பலத்தைத் தருகிறது. ஆனால், ஆவிக்குரிய போராட்டத்தில் வாலவயதினர் பலப்படவேண்டியது உடல் ரீதியாக அல்ல; ஆவிக்குரிய நிலையில். கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள் என்கிறார் பவுல் (எபேசியர் 6:10). சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார் என்கிறார் ஏசாயா தீர்க்கத்தரிசி (ஏசாயா 40:29).
உடல் ரீதியான பெலனுக்கு தினமும் நல்ல சத்தான உணவு, உடற்பயிற்சி மற்றும் முறையான ஓய்வு தேவை. அதுபோன்றே ஆவிக்குரிய பெலனுக்கு தினமும் ஆவிக்குரிய வசன உணவூட்டம், கர்த்தரிடத்தில் காத்திருக்கும் ஜெபம் மற்றும் உற்சாகமான ஊழியம் போன்ற பயிற்சிகள் தேவை. ஆவிக்குரிய போராட்டத்தில், தன் சொந்த பலனை நம்பி களம் இறங்குபவர்கள் தோற்றுப் போவது உறுதி. இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள் (ஏசாயா 40:30,31).
வேதவசனம் நிலைத்திருப்பதினால்:
யோவான் 15:4-10 வசனங்களில் விசுவாசிகள் தன்னில் நிலைத்திருப்பதைக் குறித்து இயேசு விபரமாக கூறுகிறார். என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள் (யோவான் 15:4). ஆதியிலே வார்த்தையாக தேவனிடத்தில் இருந்தது, பின்னர் மாம்சத்தில் வெளிப்பட்டவர் தான் இயேசு கிறிஸ்து. எனவே வேத வசனம் நம்மில் நிலைத்திருப்பது என்றால், இயேசு நம்மிலும் நாம் அவரிலும் நிலைத்திருப்பது தான்.  
அப்படி நாம் அவரில் நிலைத்திருக்க வேண்டுமெனில், நாம் அவரது கற்பனைகளுக்குக் கீழ்பப்டிய வேண்டும்.  நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள் என்றார் இயேசு (யோவான் 15:10). நாம் அவரது கற்பனைகளைக் கைக்கொள்ள வேண்டுமென்றால், அவைகளை தினமும் வாசிக்க வேண்டும், நேசிக்க வேண்டும், தியானிக்க வேண்டும், முக்கிய வசனங்களை மனப்பாடம் செய்ய வேண்டும், அவைகளை கடைபிடிக்க வேண்டும்.  அப்போது தான் வாலிபர்களாக பொல்லாங்கனை ஜெயிக்க முடியும். 
பொல்லாங்கனை ஜெயித்ததினால்:
உலகத்தில் நாம் நமது பெற்றோர்களால் பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் இயேசுகிறிஸ்துவை நம் இருதயத்தில்  விசுவாசித்து அவரை நம் பாவபரிகர இரட்சகராக ஏற்றுக் கொள்ளும் போது நாம் தேவனுடைய பிள்ளைகளாகிறோம்; அதாவது, நாம் தேவனால் பிறந்தவர்களாகிறோம் (யோவான் 1:12,13). தேவனாலுண்டாயிருந்தவர்கள் பொல்லாங்கனை ஜெயிக்கமுடியும் என்பது வாக்குத்தத்தம். தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம்; தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான் (I யோவான் 5:18). யோவான் அப்போஸ்தலன் மேலும் கூறுகிறார், நீங்கள் தேவனாலுண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர் (1 யோவான் 4:4). உங்களில் ’இருக்கிறவர்’ பெரியவர். அதாவது நம்மில் தேவ ஆவியானவர் அவருடைய ஆளுமை செயல்பாடுகள் தொடர்ந்து இருந்துகொண்டிருக்கும் போது மட்டுமே நாம் பொல்லாங்கனை ஜெயிக்க முடியும்.

ஆவிக்குரிய வாழ்க்கையில் வாலிபராய் இருக்கும் நாம் பொல்லாங்கனை ஜெயிக்க வேண்டும்; பொல்லாங்கனை ஜெயிக்க நாம் கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படவேண்டும். அவருடைய வசனத்தில் நிலைத்திருக்கும் போது தான் அந்த பலம் நமக்குக் கிடைக்கும். எனவே அவருடைய வசனத்தை நாம் முறையாக வாசிப்போம்; நேசிப்போம்; தியானிப்போம்; அவைகளை முறையாக கடைபிடிப்போம். அப்படி அவரது கற்பனைகளை நாம் கடைபிடிக்கும் போது இயேசுவும் நம்மில் நிலைத்திருப்பார்; நாம் பொல்லாங்கனை எளிதில் ஜெயிக்கலாம்.

இந்தவிதம் பொல்லாங்கனை ஜெயிக்கும் அனுபவத்திற்குள் ஆண்டவர் நம்மை வழிநடத்துவாராக. ஆமென். 


[பாலைவனச் சத்தம் - அக்டோபர் 2016 இதழில் வெளியான எனது கட்டுரை]