Wednesday, October 17, 2012

டாஸ்மாக் – தேறுமா பாஸ் மார்க்?


ஒரு ஆவணத்தை மறுபிரதி எடுப்பதை ஜெராக்ஸ் என்கிறோம். அப்படி பிரதியெடுக்கும் தொழில்நுட்பத்தை முதலில் அறிமுகப்படுத்திய நிறுவனத்தின் பெயரே அந்த தொழிலுக்கு பெயர்க் காரணமாயிற்று. அதுபோலவே, டாஸ்மாக் என்பதற்கு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (Tamil Nadu State Marketing Corporation) என பரந்த நோக்கம் கொண்ட முழுப்பெயர் இருப்பினும் அது மதுபான வகைகள் என்ற ஒரே வட்டத்தினுள் நின்றுவிடவே டாஸ்மாக் என்றாலே மதுபானக்கடை என்று அழைக்கப்பட காரணமாகி விட்டது. டாஸ்மாக் 2003ல்  தொடங்கி இன்று வரையிலும் நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு பரிணாம வளர்ச்சியை பெற்றிருப்பினும் அதன் தனி மனித, குடும்பப் பொருளாதார மற்றும் சமூக தாக்கங்கள் குறித்து பரவலான சலசலப்புகளுக்கு பஞ்சமேயில்லை. 


குடி குடியைக் கெ(கொ)டுக்கும் 

’குடி குடியைக் கெடுக்கும் - குடிப்பழக்கம் உடல்நலத்தைக் கெடுக்கும்’ ; ‘மது -  நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு’ என்பதே டாஸ்மாக்கின் தாரகமந்திரம் என்றால் அது ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.  மதுவிலக்குத் துறை என்னும் அமைச்சகத்தின் மூலம் விலக்கப்பட வேண்டிய மதுவோ இன்று அதன் மூலமே ஊக்குவிக்கப்படுவது ஒரு பெருத்த முரண்பாடு. கள்ள சாராயத்திலிருந்து நல்ல (?) சாராயத்திற்கு மா(ற்)றிக் கொண்டதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளத்தான் முடிகிறதே தவிர அந்த துறையால், பூரணமாக மதுவை சமுதாயத்திலிருந்து விலக்கிவைத்துக் கொள்ள முடியவில்லை. சமுதாயத்திலுள்ள மற்றவொரு ’குடி’மகனிடமிருந்து ஒருவன் எளிதில் கற்றுக்கொள்ளும் கலையாக அது மாறிவிட்டது.   மற்ற மதுக்களை ஒப்பிட்டு, ’கள்’ளை நியாயப்படுத்துவோர் பெருகிடவும் அது வாய்ப்பளித்துள்ளது. தற்போது இவை சமூக, அரசியல், பொருளாதார அடிப்படையில் அணுகப்பட வேண்டிய பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளன.  


குடிமக்கள் தொகைப் பெருக்கம்

உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி உலகில் 2 பில்லியன் மக்கள் மது அருந்தும் பழக்கம் உடையவர்கள். அவர்களில் 75 மில்லியனுக்கும் மேற்பட்டோர் தங்கள் மதுப்பழக்கத்தினால் உண்டான உடல் உபாதைகளினால் அவதிப்படுகின்றனர். மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 2.5 கோடி பேர் மது காரணமான நோய்களினால் இறக்கின்றனர். 15 முதல் 29 வயதிற்குட்பட்டோரில் 9 சதவிகித இறப்புக்கு மதுப்பழக்கம் நேரிடையான காரணமாக இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக பரவலாக வளர்ந்த நாடுகளில் மதுப்பழக்கம் குறைந்து வரும் நிலையில், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அது அதிகரித்துக் கொண்டே வருகிறது. மாறிவரும் சமூக கட்டுப்பாடுகள், நகரமயமாக்கல், மது எளிதாக கிடைத்தல், அதனை வணிகப்படுத்தியமை, அதன் ஏற்றுமதி இறக்குமதி விதிகளில் தாராளம் இவையே அதற்கு காரணம் எனவும் அது கூறுகிறது. 

தமிழ்நாட்டில் ஆறில் ஒருவருக்கு மதுப்பழக்கம் உள்ளது. இதில் பெரும்பாலும் ஆண்களே எனினும், பெண்களின் பங்கும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அண்டை மாநிலமான கர்நாடகாவில் நடத்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட ஆய்வில், பெண்களும் கிட்டதட்ட ஆண்களுக்கு இணையான எண்ணிக்கையில் இருப்பது அதிர்ச்சியைத் தருகிறது. இந்தியாவில் மது அருந்தும் பழக்கம் பரவலாக அதிகரித்து வருகிறது என்றாலும் இளைஞர்கள் மத்தியில் அது மிக வேகமாக அதிகரித்து வருகிறது.  1950களில் 23 ஆக இருந்து மது அருந்துவோரின் சராசரி வயது 90களில் 19 ஆக குறைந்து தற்போது 13 ஆகக் குறைந்துள்ளது. டாஸ்மாக் போன்ற மதுமான சமூக அங்கிகாரம் மற்றும் வாய்ப்புக்கள் காரணமாக வரும்காலங்களில் இது மேலும் குறையும் என்பது மறுப்பதற்கில்லை. 


மிதமான மது மதுரமா?

மதுப்பழக்கத்தினால் உடலில் மருத்துவரீதியாக கிட்டதட்ட 60 வகையான நோய்நிலைகள் ஏற்படுகின்றன. மட்டுமல்ல, 200க்கும் மேற்பட்ட உடல்உபாதைகளில் மது நேரிடையாகவோ மறைமுகமாகவோ முக்கிய பங்கு வகிக்கிறது. மிதமான அளவில் மது அருந்துவது இருதயத்திற்கு நல்லது என ஓரிரு மருத்துவ ஆராய்ச்சிகள் சொல்லுவதை மதுப்பழக்கத்தை நியாயப்படுத்த விரும்புவோர் மிகவும் பெரிதாக எடுத்துக் கொள்கின்றனர். அத்தகைய ஆராய்ச்சிகளில் அனைத்தும் இவ்வித சாதகமான முடிவுக்குள் வந்துவிடவில்லை. மட்டுமல்ல இத்தகைய நல்லபண்பு 45 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களுக்கு மட்டுமே பொருந்தும் என்ற பின்குறிப்பை வாசிக்கும் அளவுக்கு நமக்குப் பொறுமையில்லை. மதுப்பழக்கம் மெல்ல அடிமைப்படுத்தும் சாதனம் என்பதையும் அதிக அளவு ஆல்கஹால் பல உடல் உபாதைகளைக் கொண்டுவரும் என்பதை தற்காலிகமாக, குறிப்பாக ஆரம்பத்தில் உணரத் தவறி விடுகிறோம். மதுப்பழக்கம் உடையோரில் 20 சதவிகிதத்தினர் அளவை படிப்படியாக அதிகரித்து பின்னர் அதற்கு அடிமைப்படும் நிலைமைக்கு ஆகி விடுகின்றனர்.  

வளரிளம் பருவத்தினரும் இளைஞர்களும் இவ்விதம் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகும் வாய்ப்புகள் மருத்துவ ரீதியாக மிக அதிகம். காரணம் அவர்களின் உடல் இன்னும் வளர்ச்சியடைந்து கொண்டிருப்பது தான். சமீபத்தில், தான் அமர்ந்து படிக்கும் பள்ளிக்கூட பெஞ்சை உடைத்து மரக்கடையில் விற்று டாஸ்மாக் கடையில் மது குடித்த பிளஸ் 2 மாணவர்கள் பற்றிய செய்தி நாளிதழ்களில் வந்தன. 14 வயதுக்குள் மது குடிக்கத் தொடங்குவோர் ஏறக்குறைய அனைவருமே போதைக்கு அடிமையாகிவிடுவதாகவும், 21 வயதுக்குப் பிறகு மது அருந்தத் தொடங்குவோரில் 9 சதவீதம் பேர் மட்டுமே போதைக்கு அடிமையாகி விடுவதாகவும் இளைஞர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. மட்டுமல்ல, மெல்ல மதுவுக்கு அடிமையாவதினால் படிப்படியாக இவர்களின் உடல், மனம், மூளை பல உருமாற்றங்களைப் இறுதியில் உருப்படாமல் போய்விடுகிறது. (நீதிமொழிகள் 23:29-35). 

மதுப்பழக்கம் என்றவொரு காரணியினால் ஒருவர் தனது குடும்பப் பொருளாதார மற்றும் சமுதாய அந்தஸ்தில் உயர்வு கண்டதாக சரித்திரம் இல்லை. அதுபோலவே அத்தகைய பழக்கம் உடலுக்கு நல்லது என அறிவுப்பூர்வமாக  வாதிட இயலாது. மது ஒரு இருபுறமும் கருக்குள்ள பட்டையம். முதலில் நல்லது போன்ற உணர்வினைத் தூண்டிவிட்டு, பின்னர் மீள்வது கடினம் என்ற நிலைக்கு அடிமைப்படுத்தும் வலிமை கொண்டது. 


மதுவின் சமூக விளைவுகள்:

டாஸ்மாக் கடைகள் திறந்துவிடப்பட்டதால், கள்ளச் சாராய சாவுகள் குறைந்து விட்டதாக புள்ளிவிபரங்கள் சொல்லிக் கொண்டாலும், மது அருந்துவோரின் எண்ணிக்கையோ பன்மடங்காக பெருகி விட்டதை மறுப்பதற்கில்லை; மாத்திரமல்ல, மேலும், குடி போதையில் திருட்டு, தற்கொலை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு என பல்வேறு குற்றச் செயல்களில்  ஈடுபடுவோரும், வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கி உயிரிழப்போரும் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். நாட்டில் 59% சதவிகித விபத்துக்கள் மது அருந்துவதாலேயே ஏற்படுகின்றன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்ட விபத்துக்கள் அடுத்தவரின் குடிப்பழக்கத்தினால் ஏறப்டுகிறது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. எனவே ’குடி’மக்கள் எக்கேடும் கெட்டுப்போகட்டும் என சும்மா விட்டுவிட முடியாது. நாட்டில் சட்டம், ஒழுங்கு தாராளமாக மீறப்படுகிறது. மதுஅருந்துவதால், வேலைசெய்பவர்களின் திறன் வெகுவாகக் குறைந்து தனிமனித வருமானம் மட்டுமல்ல, நாட்டின் உற்பத்தியும் 20% வரை குறைகிறது.

டாஸ்மாக்கின் சமூக அக்கறை:

பள்ளி மற்றும் சமய வழிபாட்டுத் தலங்களுக்கு  அருகில் டாஸ்மாக் கடைகள் கூடாது என்பது விதி. டாஸ்மாக் விற்பனைக்கு விடுமுறை விடும் நாட்கள் பட்டியலில், சில பெரியவர்களின் பிறந்து நாட்களும் சில சமய திருநாட்களும் உள்ளடடக்கம். இவையெல்லாம் உண்மையான சமூக அக்கறையினால், என்பதைவிட சமூக எதிர்ப்புகளை சமாளிக்கவே. டாஸ்மாக் விடுமுறை நாட்கள் பட்டியலில் கிறிஸ்துமஸ் இடம்பெறவில்லை என்பதோ, டாஸ்மாக்கின் உச்சகட்ட விற்பனை கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நாட்களில் தான் என்பதோ நம்மை வருத்தப்படுத்த வேண்டிய அவசியமில்லை. மதுப்பழக்கத்தை கிறிஸ்தவம் அங்கிகரிக்கவில்லை என்பது ஊரறிந்த உண்மை. 

மது அருந்துவோரை தாழ்வாகக் கருதிய சமுதாயத்தில், டாஸ்மாக் அமைப்பின் மூலம் அரசாங்கமே மதுவிற்பனையை ஏற்று நடத்திவதால், இவர்களின் சமுதாய அந்தஸ்து உயர்ந்து விட்டதாக கருதுகின்றனர். எப்படியெனில், ஒருகாலத்தில், மது அருந்துவதை சொல்லிக் கொள்ள வெட்கப்படுபவர்கள், இன்று வெட்கத்தை விட்டு பட்டப்பகலில் நடுவீதிக்கு வந்து பாட்டிலை வாங்கி சட்டைப் பாக்கெட்டிலேயே வைத்துக் கொண்டு ஊரை வலம் செல்வதைப் பார்த்தால், இதனை வேறு எப்படி வருணிக்க முடியும்? 

டாஸ்மாக் நிறுவனத்தின் வருமானத்தைவிட, பொதுமக்களின் அமைதியான வாழ்வுதான் முக்கியம்; அரசின் வருவாயை அதிகரிப்பதற்காக, பொதுமக்கள் தங்கள் அமைதியான வாழ்வை விலையாகக் கொடுக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இருவருடங்களுக்கு முன் ஒரு வழக்கில் கருத்து தெரிவித்துள்ளதிலிருந்தே டாஸ்மாக்கின் உண்மையான சமூக அக்கறை புரிகிறது. 


வருமானமா? அவமனமா?

இன்று நாட்டுக்கு 15 சதவிகித வருமானம் டாஸ்மாக் கடைகள் மூலம் கிடைக்கிறது. 2003ம் ஆண்டில்  டாஸ்மாக் ஆரம்பிக்கப்பட்ட போது மூலம் சுமார் ரூ. 4 ஆயிரம் கோடியாக இருந்த தமிழ்நாட்டின் வருமானம், 2011-12ல் ரூ.18 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. இது ஆண்டுதோறும் முந்தைய ஆண்டைக்காட்டிலும் சராசரியாக 20 சதவிகிதம் என்ற அளவில் வளர்ச்சியினைக் பரிணாம வளர்ச்சியைக் கண்டுவருகிறது. இதன்மூலம் வரும்நாட்களில் நாட்டின் வருமானத்தில் 15% என்பதுவும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இதற்கு புதுரக மதுபான வகைகளின் வரவோ, விலை உயர்வோ காரணமல்ல, மது அருந்துவோர் எண்ணிக்கை குறிப்பாக இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதே ஆகும் என்கிறது ஒரு புள்ளிவிபரம். 

மதுக்கடைகளால் ஏற்படும் ஒரே பயன், அரசாங்கத்துக்கு கிடைக்கும் வருமானம் மட்டுமே. இத்தகைய வருமானத்தின் மூலம் தான் பல்லாயிரம் கோடி மதிப்பிலான நலத் (?) திட்டங்களைத் தொடங்க பணம் கிடைக்கிறது என சிலர் நியாயப்படுத்திக் கொள்கின்றனர். உண்மையை உரசிப்பார்த்தால், டாஸ்மாக் மூலமாக நாட்டுக்கு கிடைக்கும் மொத்த வருமானத்தைக் காட்டிலும் மதுப்பழக்கத்தினால் பாதிக்கப்படும் தனிமனித உடல்நலம், குடும்ப வருமானம், இதனால் விளையும் சமுதாய சீர்கேடுகள், அதற்கான நாட்டின் செலவிங்கள் இவற்றின் பணமதிப்பு மெத்தவே அதிகம்,  இதனை அண்டை மாநிலத்தில் நடத்திய ஆய்வு உறுதி செய்கிறது. 

மக்கள் நலனில் உண்மையான அக்கறை கொள்ளும் அரசாங்கம் அத்தகைய வருமானத்துக்கு மாற்று வழியைக் கண்டறிந்து அதன்மூலம் இத்தகைய திட்டங்களை நல்மனசாட்சியுடன் செய்ல்படுத்த திட்டங்களையும் வகுக்கலாம். குழந்தைகள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, குழந்தைகள் வருமானம் குடும்பத்துக்கு அவமானம் என அம்பலப்படுத்திக் கொள்ளும் நாம் டாஸ்மாக் வருமானம் தமிழ்நாட்டுக்கே அவமானம் என்பதை ஒத்துக் கொள்ள தயாரா?


மனமிருந்தால் மார்க்கமுண்டு!

பாலியல் தொழில் என்பது இழிவான ஒன்று என்பதை அனைவருமே ஒத்துக் கொள்வர். ஆனால், பாலியல் தொழிலை ஒழிக்க வேண்டும் என காரியங்களில் இறங்கும்போது, நடைமுறையில் பல சிக்கல்கள் எழுந்திட, சமூகம், பொருளாதாரம், வாழ்வாதரம் என பல பிரச்சினைகள் குறுக்கிட, இறுதியில், பாலியல் தொழிலை வரைமுறைப்படுத்தி சட்டமாக்கி விட்டாலென்ன என்ற கேள்விகள் இன்று பரவலாக மேலோங்க ஆரம்பித்து விட்டன. நாட்டில் ஊழல்கள் அனைத்து மட்டத்திலும் பரவாலாக பெருகிவிட்ட காரணத்தால், அதனை தவறில்லை என அங்கிகரித்து விடுவதினால், நாட்டில் எல்லாம் சரியாகிவிடுமா? அதுபோலவே தான் டாஸ்மாக்கையும் நியாயப்படுத்துவதில் நியாயமில்லை.  

சமுதாயத்தில், பல்வேறு தரப்பட்ட மக்களையும் திருப்திப்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகளில், உண்மையான சமுதாய அக்கறையுடன் தொலைநோக்குப் பார்வையுடன், நல்ல முடிவுகளை எடுத்தால் அதனை வருங்கால சந்ததி நிச்சயம் போற்றும்; நாட்டுக்கு வருமானம் முக்கியம் என்றால், ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தை நிலைநிறுத்துவதன் மூலம் நிச்சயம் பெருக்கிக் கொள்ள முடியும். மதுக்கடைகளை தன்கையில் எடுத்துக் கொண்ட அரசு மணல், கிரானைட் கல்குவாரிகளை தன் வசம் எடுத்துக் கொண்டு முறைப்படுத்தினாலே, அரசு கஜானாவில் மானமுள்ள வருமானம் அதிகாளவில் வந்துசேரும்.  

நாட்டில் மக்கள் தொகையை குறைத்திட, ஆண் மற்றும் பெண்களின் திருமண வயதை முறையே 21 மற்றும் 18 என உயர்த்தி சட்டமாகியது போலவே, மது அருந்துவோரின்  சட்டப் பூர்வமான அனுமதி வயதை 21 இலிருந்து 25 க்கு உயர்த்தி அதனை தீவிரமாக நடைமுறைப்படுத்தினாலும் கூட நாட்டில் ’குடி’மக்களின் தொகை கொஞ்சம் குறைந்திட வாய்ப்புண்டு. 

ஒருசில அரசியல் கட்சிகளும் பல்வேறு சமூகநல தொண்டு நிறுவனங்களும் தொடர்ந்து மதுவுக்கெதிரக குரல் எழுப்பிவரும் இன்றைய கால கட்டத்தில், டாஸ்மாக்கை ஒழித்துவிட இன்றைய தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக இப்போது ஊடகங்களில் வெளிவரும் இனிப்பான செய்தி வெறும் செய்தியாகவே மாறிவிடாமல் செயல் வடிவம் பெற்று நாடும் நாமும் தன்மானத்துடன் வாழவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

திராட்சை ரசம் ஒழுங்கீனத்தைத் தோற்றுவிக்கும்: போதை தரும் குடி அமளியைத் தோற்றுவிக்கும்: அவற்றில் நாட்டங்கொள்பவர் மடையரே. (நீதிமொழிகள் 20:1 - கத்தோலிக்க மொழிபெயர்ப்பு)


(இது உன்னத சிறகுகள் ஜூலை- செப்டெம்பர் 2012ல் வெளிவந்த எனது கட்டுரை)

Saturday, June 02, 2012

வளாகத்தில் உறவுகள்

கல்லூரி வாழ்க்கையில் இன்னுமொரு கல்வியாண்டு பிறந்து விட்டது. உங்களில் சிலருக்கு இது தான் முதல் கல்வியாண்டாக இருக்கலாம். விரும்பிய அல்லது எதிர்பாராதவொரு துறையினுள் நுழைந்திருக்கலாம். பெற்றோர் மற்றும் உற்றாரின் அறிவுரைகள் பல உங்கள் காதினுள் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும். இதுவே இறுதி கல்வியாண்டாக இருப்பவர்களுக்கோ, இந்த கல்வியாண்டிலாவது உருப்படியாக உழைத்து வெற்றிகரமாக வளாகத்தைவிட்டு வெளியேறிட வேண்டும் என்ற எண்ணம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். இடைப்பட்ட நிலையிலுள்ளோர் இதைக்குறித்து அதிக அக்கறை கொண்டிராமல் இருக்கவும் வாய்ப்புண்டு. இதற்கெல்லாம் முக்கிய காரணம் என்னவெனில், வளாகங்களில் நம்மை எதிர்நோக்கும் சவால்கள் தான். அவைகளில் முக்கியானவைகளில் ஒன்று வளாகத்தில் உறவுகள். 

உறவுகள் பலவிதம்:

வீடு, பள்ளி, நண்பர்கள் என ஒரு குறிப்பிட்ட வட்டத்திலிருந்து கல்லூரி, விடுதி என சூழ்நிலைகள் மாறும் போது நண்பர்கள் வட்டமும் புதிய பரிணாமம் பெறுகிறது. பெற்றோரின் கண்காணிப்பிலிருந்து முற்றிலும் விடுபட்ட பூரண சுதந்திரம் கொண்ட உறவு நிலைக்கு அது மாறி விடுகிறது. நண்பர்கள் மட்டுமல்ல, சக மாணவர்கள், எதிர்பால் நணபர்கள், ஆசிரியர் வட்டம், சமுதாயம் என வளாகத்தில் உறவுகள் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. இருப்பினும் இவற்றில் சக மாணவர்கள் உறவு அதிலும் குறிப்பாக நண்பர்கள் வட்டமே நமது வளாக வாழக்கையின் தரத்தினை நிர்ணயிப்பதில் முதலிடத்தைப் பிடிக்கிறது. 

உருவாக்கும் உறவுகள்:

நல்ல மாணவர்களையே நண்பர்களாகக் கொண்டிருக்க வேண்டும் என்பது தான் அனைவரது எதிர்பார்ப்புமே. ஆனால் ஒருவருக்கு நண்பர்கள் எப்படி அமைகிறார்கள்? வகுப்பறையில் அருகருகே அமர்ந்திருப்பதாலோ, அடிக்கடி பார்க்க நேர்வதாலோ, விடுதியில் ஒரே அறையில் தங்கும் சூழ்நிலையினாலோ, ஒருவரோரு ஒருவர் நெருங்கி பழக கிடைக்கும் வாய்ப்பு மூலமோ ஒருவருக்கு இன்னொருவர் நண்பராகி விடுகிறார். இதுபோக ஒரே ஊர்க்காரர், சாதிக்காரர் என பல்வேறு அம்சங்களின் அடிப்படையிலும் தாமாக விரும்பி சிலரை தங்கள் நண்பர்கள் வட்டத்தினுள் இணைத்துக் கொள்வாரும் உண்டு.  ஆனால், இந்த விஷயத்தில் பொதுவாக யாருமே அதிகம் யோசிப்பதில்லை. சூழ்நிலைகளின் மூலம் தற்செயலாக அமைவது தான் நண்பர்கள். ஆனால் அவர்களே வளாகத்தில் நமது போக்கை நிர்ணயிப்பவர்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது. 

கல்லூரி வாழ்க்கையில் மற்றவர்களிடமிருந்து, குறிப்பாக நண்பர்களிடமிருந்து அறிந்தோ அறியாமலோ சில பல பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொள்கிறோம். பூவோடு சேர்ந்த நாறும் மணப்பதுபோல நாம் நல்ல நண்பர்களுடன் இணைந்து நல்லபண்புகளை பெற்றுக் கொண்டால் அது நல்லதுதான். சாதி, இன, மத வேறுபாடுகளை மனதிற்கொண்டு குறிப்பிட்ட நபருடன் மட்டுமே பழகி, ’அரசியல்’ பண்ணும் கலாச்சாரம் நிறைந்த வளாகத்தில், விசுவாச மாணவன் வளாக அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவருடனும் சகஜமாக பழகும் போது மட்டுமே வாழ்வில் ஒரு தரமான முதிர்ச்சி ஏற்படும். ஆனாலும் தனது நண்பர்கள் வட்டத்தினுள் யாரை மட்டுமே கொண்டிருக்க வேண்டுமென்பதில் சற்று சிந்தித்து செயல்பட வேண்டும்.  இதில் சரியான கண்ணோட்டத்துடன் கவனமாய் இல்லாவிடில் அது நாரோடு சேர்ந்த பூவும் நாறுவது போல என்ற புதுக்கதையாகி விடும். 

நல்ல நண்பர்களை கண்டறிவது எப்படி?

ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை என்பார்கள். சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான் என்று நீதிமொழிகள் 17:17 கூறுகிறது, இன்பத்திலும் துன்பத்திலும் சுயநல நோக்கமின்றி அடுத்தவரிடம் அக்கறையுடன் நடந்து கொள்பவனே உண்மையான நண்பன். ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை (யோவான் 15:13). யோனத்தான் தன் உயிரைச் சிநேகித்ததுபோல அவனைச் சிநேகித்தான் என I சாமுவேல் 20:17ல் காண்கிறோம். போட்டிப் பொறாமைகள் நிறைந்த இன்றைய உலகில் இவ்வித உண்மை நண்பர்களை வளாகங்களில் கண்டறிவது கடினமான ஒன்றாயினும் அந்த முயற்சி அவசியமான ஒரு பயிற்சியாகும்.

உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை… ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான் (யாக்கோபு 4:4). எனவே உலகத்துக்குச் சிநேகிதனாயிக்க விரும்பும் நம் நண்பர்களுடன் உள்ள உறவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதற்காக அவர்களுடன் இருந்துவரும் நட்பை (Freiendship) அதிரடியாக முறிக்க அவசியமில்லை; ஆனால் அந்த நட்புறவை உரமூட்டி வளர்த்து அதில் ஐக்கியமாகிவிடாமல் (Fellowship) கவனமாக இருக்க வேண்டும் (1 கொரி. 5: 9,10). மட்டுமல்ல அவர்களுடன் உள்ள நெருக்கத்தைக் குறைத்து அனைவருடனும் சகஜமாக பழகும் சதாரண உறவுநிலை அளவுக்கு அந்த நட்புறவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். 

எதிர்பால் நண்பர்கள் அவசியம் தானா?

நண்பர்கள் என்றால் ஒரே பாலினத்திற்குள் தான் இருக்க வேண்டுமா?… ஏன் எதிர்பாலருடன் இருக்க இயலாதா? இப்படி ’கேள்விகள் எழுந்தாலே எதோ அங்கு ஒரு விபரீதம் இருக்கிறது’ என்பதை புரிந்து கொள்ள இயலாத சிறுபிள்ளைகள் அல்ல நாம் என்பது நமக்கே தெரியும் ஆனாலும் நம்மில் சிலர் இதில் விதண்டாவாதம் செய்கிறோம். அது ஒன்றும் சக மாணவர்கள் மீதுள்ள சமுதாய அக்கறையில் அல்ல; நமது பரிதாப நிலைக்கு பாதுகாப்பு அளிக்கவே (ரோமர் 1: 32). 

கல்லூரி வாழ்க்கையில் எதிர்பாலருடன் அறிமுகமாகும் வாய்ப்பு தவிர்க்க இயலாதது. இருப்பினும் நாம் இதில் கவனமுடன் இருந்து எதிர்பாலருடன் நெருங்கிப் பழகுவதை தவிக்க வேண்டும். எதிர்பாலரை தொட்டுப் பேசுதல், தனிமையில் சந்தித்தல் தவிர்க்கப்பட வேண்டும். எதிர்பாலரிடம் படிப்பு மற்றும் ஊழியம் போன்ற பிற நல்ல காரியங்களுக்காகவே பழகுவதாயினும் அவைகளெல்லாம் ஒரேபாலரிமும் சாத்தியமாகையால் இது தவிர்க்கப்பட வேண்டும். எதிபாலர் நட்புறவு படிக்கும் பருவத்தில் நமது பெற்றோர் மற்றும் இறைவனின் எதிர்பார்ப்புகளையெல்லாம் தாண்டி எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தக் கூடும்.  

நல்ல நண்பராக இருப்பது எப்படி?

உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும் (கலா. 5:14). நாம் நண்பர்களிடம் என்னென்ன எதிர்பார்ப்புகளுடன் பழகுகிறோமோ, அந்த காரியங்களில் மற்றவர்களுக்கு உற்ற நண்பனாக இருக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. கெட்ட நண்பர்களின் சகவாசத்தால் சீரழிந்து, அதிலிருந்து வெளிவர முயற்சித்தும் முடியாத நிலைமையில் இருக்கும் ஒருகூட்ட மாணவர்கள் வளாகத்தில் எப்போதுமே உண்டு. அவர்களுடன் சற்று நெருங்கிப் பழகி அவர்களை நம் நண்பர்களாக்கிக் கொள்வதன் மூலம் நமது நறுமணத்தை வீசச் செய்திடலாம். 

உன்னத உறவு:

வளாகத்தில் உள்ள நண்பர்களுடன் உறவுநிலை சரிதானா இல்லையா என்பதை உறுதிப்படுத்துவது தேவனுடன் உள்ள நமது தனிப்பட்ட உறவு. வேதவாசிப்பு, ஜெபம் மற்றும் சாட்சி பகர்தல் மூலம் அவருடன் நெருங்கிய உன்னத உறவு நிலையில் காணப்படுவோமானால், நண்பர்கள் உறவு சரியான விதத்தில் அமைந்து விடும். அப்போது தான் கூடா நட்புகள் குறித்த தெளிவு பிறக்கும்; மற்றவர்களுக்கு உற்ற நண்பர்களாய் விளங்கிட வேண்டிய அவசியத்தைக் குறித்த உணர்வும் அதற்கான உற்சாகமும் பெருகும். 

நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள் என்றார் இயேசு (யோவான் 15:14). இவ்விதம் கல்லூரி வளாகத்தில் முதலில் இயேசுவின் சிநேகிதர்களாக இருந்து, வளாகத்தில் நல்ல நண்பர்களைக் கண்டுகொண்டு, பின்னர் மற்றவர்களுக்கும் பிரயோஜனமுள்ள நண்பர்களாகத் திகழ்ந்திட வாழ்த்துக்கள். 

(இது ‘தரிசனச் சுடர் - ஜூன் 2012ல் வெளியான எனது கட்டுரை)

Tuesday, May 15, 2012

வாழ்வா? சாவா? ... முடிவெடுக்கும் தைரியசாலிகளா நீங்கள்?


எனது முதுநிலை பட்டப்படிப்பின் போது எனக்கு சி.எம்.சி. மருத்துவமனையின் மயக்க மருந்து துறையில் ஒருமாத கால பயிற்சி இருந்தது. அப்போது, நான் கண்ட ஒரு அறுவை சிகிச்சை என்னை வெகுவாக கவலையடையச் செய்தது. திடகாத்திரமான உடல்வாகு உடைய 23 வயது இளைஞன் ஒருவனின் வலது காலை அதன் முழங்கால் மூட்டுக்கு மேலே வெட்டி எடுத்து விடுவது தான் (Above Knee Amputation) அந்த அறுவை சிகிச்சை.

அந்த இளைஞனுக்கு அப்படி என்ன பிரச்சினை வந்து விட்டது. வலது முழங்கால் மூட்டில் சிறிய வீக்கம் மற்றும் வலி. வலி காரணமாக மருத்துவர்களிடம் வந்த அவனுக்கு இப்போது மூட்டுவலியைக் காட்டிலும் பெரிய வலி ஒன்று வந்து சேர்ந்தது. அது என்னவெனில், அந்த வீக்கம் மற்றும் வலிக்கு காரணம் அந்த எலும்பில் தோன்றியுள்ள ஒரு சிறிய கேன்சர் கட்டி வளர்ச்சி எந்த மருந்து மாத்திரைக்கும் அடங்காத ஒன்று (). அறுவை சிகிச்சை மூலம் அதையும் அதன் சுற்று வட்டாரத்திலுள்ள நல்ல பகுதிகளையும் அகற்றிவிடுவதே ஒரே வழி என்பது தான் இப்போது மிகப்பெரிய வலி.

வேறுவழியே இன்றி அவ்விதம் அறுவை சிகிச்சை செய்ய அவன் ஒப்புக் கொண்டதால், அன்றைய தினம் அந்த அறுவை சிகிச்சை நடந்தது. மயக்க மருந்துக்கு அவனை தயார் செய்யும் போது, அவனது காலை நன்றாக உற்று நோக்கினேன். அப்படி ஒன்று பெரிதான பிரச்சினை அதில் இருப்பதாக வெளிப்புறமாக தெரியவில்லை. ஆனால் Biopsy Report சொல்லும் விதமாக அறுவை சிகிச்சை செய்யாவிடில் அவன் சில மாதங்களில் இறந்து போவது உறுதி. அறுவை சிகிச்சையின் ஒரு கட்டத்தில் வெட்டப்பட்ட அந்த காலை அப்படியே தூக்கி அதற்குரிய குப்பைத் தொட்டியில் (Bio Medical Disposable Bag) போடும் போது அந்த காட்சி மிகவும் பரிதாபமாக இருந்தது. 

இயேசு கிறிஸ்து இப்படியாக சொல்லியுள்ளார்: “உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு காலுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்” (மத்தேயு 18:8; மாற்கு 9:45).  இந்த வசனத்தை யோசிக்கும் போதெல்லாம், அவியாத அக்கினியின் கொடுமையை வர்ணிப்பதற்காக ஒரு எடுத்துக்காட்டாக தான் இதனை சொல்லியிருப்பார் என நான் நினைத்துக் கொள்வதுண்டு. ஆனால், அது உவமையாக அல்ல; உண்மையாகவே சொல்லப்பட்ட வார்த்தை என்பதை இந்த நிகழ்ச்சி எனக்கு ஞாபகப்படுத்தியது.

இரண்டு காலுடையவனாய் சில மாதங்களில் மரிப்பதைக் காட்டிலும் சப்பாணியாய் பல வருடங்கள் இந்த உலகில் வாழ்வது நல்லது அவனுக்கும் அவனது பெற்றோருக்கும் மனதில் பட்டதினால், அந்த அறுவை சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டனர். ஐயோ, இளம் வயது தானே… இப்போது தானே படித்து முடித்திருக்கிறான்… இனிமேல் தான் வேலைக்கு போக வேண்டும் … பின்னர் திருமணத்திற்கு பெண் பார்க்க வேண்டும். ஒரு கால் இல்லாதவனுக்கு எப்படி பெண் கிடைக்கும் என்றெல்லாம் அவர்கள் மனம் பாடுபட்டிருக்கும்…. ஆனாலும் துணிந்து இந்த முடிவை எடுத்தனர்; ஜீவனைக் காத்துக் கொண்டனர். 

அந்த இளைஞன் சாதாரண வலிதானே, சிறிய வீக்கம் தானே என நினைத்துக் கொண்டு சில நாட்கள் அருகிலுள்ள சாதாரண மருத்துவரிடம் போய் காண்பித்துக் கொண்டிருந்திருக்கிறான். அதற்கென சிறப்பு மருத்துவரிடம் வந்து சேர்ந்தபோதோ, நிலைமையை உணர்ந்து கொண்டு மிகப்பெரிய முடிவை எடுக்க நேர்ந்தது. 

அவ்விதமே,  நாமும் இந்த உலக வாழ்க்கையில் பலவிதமான பிரச்சினைகளின் வழியாக கடந்து வரும் போது முதலில் நண்பர்கள், பின்னர் உறவினர்கள், பெரியவர்கள், தலைவர்கள் என ஒவ்வொருவரிடமாக சென்று ஆலோசனை செய்கிறோம். சாதாரண மருத்துவரைப் போன்று அவர்கள் தரும் ஆலோசனைகள் கூட சில வேளையில் சிறிய அளவில் பலனைத் தரலாம். ஆனால் இறுதியில் நம்மையே படைத்த இறைவன், அவரது ஒரே குமாரன் இயேசு கிறிஸ்துவிடம் ஆலோசிக்கும் போது அவரால் மட்டுமே ஒரு தீர்க்கமான பதிலை கொடுக்க முடியும். அது பல வேளைகளில் கடினமானது போன்று தோன்றும். ஆனால் அது பலவேளைகளில் கடினமானதே அல்ல. என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார் இயேசு (மத்தேயு 11:30). கடினமானதாக தோன்றுவதற்கு உண்மையான காரணம் இந்த உலகம், மாமிசம் மற்றும் அதின் மீது உள்ள இச்சை தான். அதிலிருந்து விடுபட இறைவனின் ஒத்தாசை அவசியம். 

விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனான போது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, அநித்தியமான பாவ சந்தோஷங்களை அநுபவிப்பதைப் பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு, இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான் (எபி. 11:24-26). பின்னாட்களில் அவன் பிரபல தலைவன் ஆனான் என்பது சரித்திரம். 

இந்த உலக வாழ்க்கை தான் எல்லாமுமே என நினைத்துக் கொண்டிருந்தால், பாவ சோதனைகளை வெல்ல முடியாது. மறு உலக வாழ்வு பற்றிய சிந்தனையும் இந்த உலகிலே மறுபிறப்பின் அனுபவமுமே நம்மை பாவ சோதனைகளினின்று காக்கும். இன்னும் பாவங்களில் நிலைத்திருப்பது வாழ்வா சாவா பிரச்சினை என்பதை மனதில் கொண்டு அதில் ஒரு தீர்க்கமான முடிவெடுக்கும் தைரியம் உங்களுக்கு உண்டா? 

வாழ்த்துக்கள்.    

“உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு காலுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்” (மாற்கு 9:45).





Sunday, March 04, 2012

(என்) குழந்தைக்கு பெயர் வைப்பது (வைத்தது) எப்படி?

முன்பெல்லாம் கஞ்சிக்கும் வழியில்லாத பரம ஏழைகள் கூட அஞ்சி ஆறு என குழந்தைகளைப் பெற்றெடுத்த காலம் போய், இப்போது பரவலாக எல்லோருமே ஒன்றிரண்டுடன் முடித்துக் கொள்வது வழக்கமாகிவிட்டது.  குழந்தைகள் எண்ணிக்கை குறைந்திட்டாலும் அப்படிப்பட்ட மதிப்புமிகு குழந்தைகளுக்கு பெயர் வைப்பது  என்பது எளிதான காரியம் அல்ல.

நம் குழந்தைகளுக்கு நாம் ஒரு குறிப்பிட்ட எதிர்பார்ப்புடன் தான் பெயரிடுகிறோம். பெயரிடும் வண்ணம் வரும்நாட்களில் அந்த குழந்தை உருவெடுக்கிறதோ என்னமோ, பொதுவாக குழந்தையின் பெயரை வைத்து அவரது பெற்றோர்களின் எண்ணங்களை, பண்புகளை மதிப்பிட முடியும் என்பது மட்டும் உண்மையான விஷயம்.

நான் இரட்சிப்பின் அனுபவத்திற்குள் வருவதற்கு முன் எனது அப்பாவிடம் ‘உங்களுக்கு வேறே பெயரே கிடைக்கவில்லையா?’ என கடிந்து கொண்டதுண்டு. அவரும் சங்கடப்படாமல் ;நீ இயேசுவின் பன்னிரு சீடர்களில் ஒருவனான பேதுரு போன்று வரவேண்டும்’ என்று தான் வைத்தேன் என கூலாக சொல்லுவார். அப்போது நான் சொல்வேன்: ‘அப்படிண்ணா எனக்கு பீட்டர்-ணு வச்சிருக்க வேண்டியது தானே’ . அதற்கும் அவர் சொல்லும் நியாயமான பதில், ’நான் என்ன ஆங்கிலமா படித்தேன்; A B C D கூட தெரியாத எனக்கு தெரிந்ததெல்லாம் தமிழ் வேதாகமம் ஒன்று தான்’. இப்போது என்னை யாரும் பீட்டர் என சொல்லுவதைவிட பேதுரு என சொல்லுவதையே பெருமையாக நினைக்கிறேன். பன்னிருவரில் ஒருவனான பேதுரு போன்று வரவும் முயற்சிக்கிறேன்.

சரி... இப்போது நான் எனது குழந்தைக்கு பெயர் வைத்தது எப்படி என சொல்லிட விரும்புகிறேன். 

கருவாக இருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என சொல்ல மருத்துவ துறையினருக்கு அனுமதியில்லாத காரணத்தினால், எனது மனைவிக்கு ஸ்கேன் செய்த மருத்துவர் எங்கள் உறவுக்காரராய் இருப்பினும் அதனை சொல்லவில்லை; நாங்களும் பதிலை எதிர்பார்க்கவில்லை. அவர் சொல்லாததினால் இது பெண் குழந்தையாக இருக்கக் கூடும் என நானும் என் மனைவியும் பேசிக்கொண்டோம். மட்டுமல்ல, எங்கள் எதிர்பார்ப்பும் ஒரு பென் குழந்தை தான். எனவே, எனது மனைவியின் அம்மா ‘எலிசபெத்’, எனது அம்மா ‘கிரேஸ்’ இரண்டையும் இணைத்து, “எலிசபெத் கிரேஸ்” என பெயரிடுவதாக முடிவு செய்திருந்தோம்.

பிறந்ததோ ஆண் குழந்தை. எனவே, என்ன பெயரிடலாம் என விவாதிக்க ஆரம்பித்தோம்.  ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. ஏதாவது மிஷனரி பெயரை இடலாம் என எண்ணி, திருநெல்வேலி சி.எஸ்.ஐ. டயோசிசன் புத்தகச்சாலை சென்று  நண்பர் சுவிஷேச ஜெபக்குழு-வின் வெளியீடான ‘மறக்க முடியா மா மனிதர்கள்’ என்ற நூலை வாங்கினேன். புத்தகம் முழுவதையும் ஒரே மூச்சில் வாசித்து முடித்து அந்த நபர்களின் பெயர்களில் விருப்பமானவற்றை Short list பண்ணிக் கொண்டு, மனைவியிடம் விவாதித்தேன். அவளுக்கு Stephen (தமிழில் - ஸ்தேவன்) என்ற பெயர் இணைந்து வரும்படி இருக்கவேண்டும் என அவள் விருப்பத்தை கூறினாள்.

Short list பண்ணியிருந்த பட்டியலில் இருந்த ஹட்சன் இறுதி செய்யப்பட்டதற்கு இரண்டு காரணம் உண்டு. ஒன்று அவர் சீனாவுக்கு சென்ற முதல் மருத்துவ மிஷனரி; இரண்டாவது எனது அப்பா பெயர் தேவதாசன் என்பதால், இது சன் என முடிவதில் எனக்கு ஒரு திருப்தி.  எனவே இறுதியில் சொல்வழக்குக்கு வசதியாக “ஸ்டீவ் ஹட்சன் - STEVE HUDSON”  என வைத்துக் கொண்டோம்.


முதல் நூற்றாண்டின் இரத்தசாட்சி ஸ்தேவான் போன்று, ஹட்சன் டெய்லர் போன்று அவன் ஒரு மிஷனரியாக வரவேண்டும் என்பது எங்கள் ஆசை.  அது போன்று ஒருகூட்ட மிஷனரிகளை தட்டி எழுப்பவேண்டும் என்பது எனது கனவு.

எனக்கு மிகவும் பிடித்த மறைந்த தேவமனிதர் டாக்டர். ஜஸ்டின் பிரபாகரன் அவர் கடைசியாக பாடிய ’முதல் இரத்த சாட்சி யார்?’ என்ற அவரது இறுதிப் பாடலை அடிக்கடி கேட்டுதான்  எனக்கு அவ்வித எண்ணம். அந்த பாடலை பதிவிறக்கம் செய்து கேட்க இங்கே கிளிக் செய்யவும்: http://www.saavn.com/s/song/tamil/Idimuzhakka-Geethangal/Muthal-Ratha-Saatchi/OiIsVA1XDnA