Wednesday, June 14, 2017

உதிரம் கொடுப்போம்; அதை இன்றே கொடுப்போம்


’நல்ல சமாரியன்’ என்ற வார்த்தை வேதாகமத்தில் எங்கும் காணப்படவில்லை; ஆனால் அவனைக் கேள்விப்படாத இந்த சொற்றொடரை பயன்படுத்தாத கிறிஸ்தவர்கள் எவருமில்லை எனலாம். கள்ளர் கையில் அகப்பட்டு குற்றுயிராக்கப்பட்ட வழிப்போக்கனைக் கண்டு மற்றவர்கள் போல தானும் பக்கமாய் விலகிச் செல்லாமல், தன் நேரம், திறமை, பணத்தினை பக்குவமாய் தானம் செய்த இந்த சமாரியன் சரித்திரத்தில் நீங்கா இடம்பெற்று விட்டான் (லூக்கா 10:29-37). விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியுடன் போட்டிப் பொறாமைகளும் பெருகிவிட்ட இந்தக் காலகட்டத்தில், தானங்கள் செய்வோருக்கென்று எப்போதுமே ஒரு  தனி மரியாதை உண்டு.

தானங்கள் பலவிதங்களில் இருந்தாலும் அவற்றில் தலைசிறந்த தானம் இரத்ததானமே எனலாம். ஏனெனில் அதுமட்டுமே எல்லோராரும் எப்போது வேண்டுமானாலும் மற்றவர்களுக்கு வழங்கப்படக்கூடிய எளிதான ஒன்று. ஆனால் அது குறித்த ஒருவரின் சரியான புரிதலும் ஆர்வமும் மட்டுமே அதற்கு தூண்டுகோலாக அமைகிறது.

இரத்ததானம் - ஒரு அவசியத்தேவை ஏன்?

”சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது; இரத்தம் ஜீவனுக்குச் சமானம்” என பரிசுத்த வேதாகமம் கூறுகிறது (லேவி.17:14). இரத்தம் மனித உடலில் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அதற்கு மாற்று எதுவும் எதுவும் இல்லை. எனவே அவசர மற்றும் அவசியத் தேவைகளில், ஒருவரிடமிருந்து மற்றொருவர் பெறும் இரத்தமாற்று (Blood Transfusion) மூலம் மட்டுமே இது சரிசெய்து கொள்ளப்பட முடியும். ஒவ்வொரு இரண்டு விநாடிகளிலும் உலகில் யாரோ ஒருவருக்கு இரத்தமாற்று தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இரத்தமாற்று என்பது ஏதோ விபத்து மற்றும் அவசர நேரங்களில் மட்டும் செய்யப்படும் மருத்துவ சிகிச்சை முறை அல்ல; புற்றுநோய் மற்றும் இரத்த சம்பந்தமான வியாதியிலுள்ளோருக்கு அது வழக்கமாகவே தேவைப்படுகிற ஒன்று. செஞ்சிலுவை சங்கங்களில் உலகளாவிய அமைப்பின் கணக்கெடுப்பின்படி, உலகில் மூன்றில் ஒரு இரத்தமாற்று புற்றுநோய் மற்றும் இரத்த சம்பந்தமான வியாதியிலுள்ளவர்களுக்கும் வெறும் இரண்டு சதவிகித இரத்தம் மட்டுமே சாலைப்போக்குவரத்து மற்றும் இதர விபத்துகளில் சிக்கியவர்களுக்கு செய்யப்படுகிறது. நம் நாட்டில் ஒரு ஆண்டிற்கு சுமார் 4 கோடி யூனிட் (ஒரு யூனிட் என்பது சராசரியாக 350 மிலி) இரத்தம் தேவைப்படுகிறது; ஆனால் கிடைப்பது வெறும் 40 லட்சம் யூனிட்கள் மட்டுமே.

மேலும் தானமாக பெறப்பட்ட இரத்தத்தை மூன்று மாதங்களுக்குள் உபயோகித்தாக வேண்டும். அதனை  எவ்வளவு குறைந்த இடைவெளிக்குள் தேவையிலுள்ள ஒருவருக்கு பயன்படுத்திக் கொள்கிறோமே அவ்வளவு அது பிரயோஜனமானதாக் இருக்கும். எனவே அவைகளை முன்கூட்டியே தாராளமாக சேமித்து வைக்க இயலாது. அவ்வப்போது எழும்  இரத்ததேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்து கொள்ள, இரத்தத்தை தானமாக வழங்க முன்வரும் தன்னார்வலர்களைத் தன் தொடர்பில் வைத்திருக்கும் இரத்ததான அமைப்புகளின் சேவையும் ஒரு அவசியத் தேவையாகி விட்டது.

தன்னார்வ இரத்ததானமே தலைசிறந்த ஒன்று

ஒருவருக்கு ஏற்படும் அவசர மற்றும் அவசிய இரத்தத் தேவையை அவர் மூன்று வழிகளில் நிறைவு செய்துகொள்ளலாம். 1) பணம் கொடுத்து இரத்த வங்கிகளில் ஏற்கனவே இருக்கும் இரத்ததினை பெறுவது; 2) உறவினர் / குடும்பத்தினரிடமிருந்து அந்த நேரத்தில் பெறுவது; 3) தன்னார்வலர்கள் மூலம் இரத்ததை தானமாக பெறுவது. முதலில், பணம் கொடுத்து இரத்தவங்கிகளில் வாங்கிக் கொள்வது எல்லாருக்கும் சுலபமாக வாய்ப்பதில்லை. அங்கேயும் இது எளிதில் கிடைக்கும் விஷயம் அல்ல. தானாக தானம் செய்ய முன்வந்த அல்லது குறைந்த பணத்திற்கு தன் இரத்தத்தை விற்க வந்த ஒருவரால் தான் இது கிடைக்கிறது. இங்கு பணம் என்ற காரியம் உள்ளே வருவதால் இந்த இரத்தத்தின் சுத்தம் மற்றும் பாதுகாப்புக்கு இங்கு உத்தரவாதமில்லை.

இரண்டாவதாக, நெருங்கிய உறவினர் அல்லது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பெறுதல் ஒரு பாதுகாப்பான வழிமுறை தான்.  ஆனால், இங்கு ஒரு அவசரத் தேவை என்று வந்தவுடன் மட்டுமே இந்த உறவுகளை நாடிச் செல்வதால், எல்லோருக்கும் இது சாத்தியப்படுவதில்லை. அவசரத் தேவைகளில் மட்டுமல்லாமல் வழக்கமாகவே இரத்தம் பெறவேண்டிய சில உடல் உபாதைகளில் இருப்போர் எப்போதும் தங்கள் குடும்ப உறுப்பினரையே நம்பியிருக்கும் இந்த வழிமுறை போதாது.

மூன்றாவதாக, தாமாக முன்வந்து இரத்ததானம் செய்யும் முறை ஒரு சிறந்த முறையாக மட்டுமல்ல, செலவு குறைந்த பாதுகாப்பான மற்றும் நிலையான வழிமுறையாக இருக்க முடியும். ஏனெனில் இங்கு தாமாக முன்வருவோர் அப்படி ஒருதேவை வரும் எந்தநேரத்திலும் தன் இரத்தத்தை தானமாக தர எப்போதும் ஆயத்தமாக இருக்கிறார். இங்கு அவருக்கென்று ஊக்கத்தொகை எதுவும் கொடுக்கப்பட வேண்டுவதில்லை என்பதால், தேவையிலுள்ளோர் அந்த இரத்தத்தை பயன்படுத்தும் நிலைக்கு பக்குவப்படுத்த ஆகும் செலவு குறைவாக இருக்கிறது.

இந்த மூன்று முறைகளிலும் மூன்றாம் முறையே உலகில் பரந்த அளவில் நடைமுறையில் சாத்தியமான, காலாகாலமாக நிலைத்து நிற்கும் வழிமுறையாக கண்டறியப்பட்டுள்ளதால், தாமாக முன்வந்து இரத்ததானம் செய்யும் பழக்கத்தை ஊக்குவிக்க உலக சுகாதார நிறுவனம் கி.பி. 2004 முதல் வருடந்தோறும் ஜூன் 14 ல் உலக இரத்ததானம் செய்வோர் தினத்தை அனுசரித்து வருகிறது. இந்த 2017 வருடத்திற்கான அதன் மையக்கருத்து: ”உதிரம் கொடுப்போம்; அதை இன்றே கொடுப்போம்; அவ்வப்போதும் கொடுப்போம்” என்பதாகும். 

இரத்ததானம் செய்வோருக்கு வரும் நன்மைகள்

ஒருவர் இரத்ததானம் செய்வதால் அவருக்கு ஏற்படும் நன்மைகள் ஏராளம். முதலில் ஒரு மருத்துவக் குழுவினை சந்தித்து தம் உடலின் பொதுவான தகுதிகளை உறுதி செய்ய அது உதவுகிறது. ஒவ்வொரு முறையும் இரத்ததானம் செய்யும் போதும், எந்த பணமும் செலவும் செய்யாமல் ஒருவர் தமது உடல் ஆரோக்கியமாகவும், மஞ்சள் காமாலை, மலேரியா, எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள்  போன்றவை எதுவும் தமக்கு இல்லை என்பதை உறுதி செய்வதற்கும் ஒரு வாய்ப்பாக அமைகிறது. இறைக்கிற கிணறு தான் சுரக்கும் என்பர்; குறிப்பிட்ட இடைவெளியில் வழக்கமாக இரத்ததானம் செய்வதால் நமது உடலில் பழைய இரத்தம் வெளியேறி இயல்பாக உடலில் புதிய இரத்தம் சுரக்க வாய்ப்பாக அமைகிறது. வழக்கமாக  இரத்ததானம் செய்பவர்களுக்கு இரத்தத்திலுள்ள  கொழுப்புச்சத்துகள் குறைவதுடன் இரத்த அழுத்தமும் குறைந்து, இதனால் இருதய மாரடைப்பு நோய்களும் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கிறிஸ்தவர்களாக நாம் ஏன் இதனைச் செய்ய வேண்டும்?

இரத்ததானம் செய்வது ஒரு உயிர்தானம் செய்வதற்கு சமமானது. மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது என லேவி. 17:11 ல் பார்க்கிறோம்.  ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை என்றார் இயேசு கிறிஸ்து (யோவான் 15:13).  எனவே கிறிஸ்தவர்களாகிய நாம் தன்னார்வமாக இரத்ததானம் செய்வதில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும். தேவனுடைய கிருபையினால் நாம் நல்ல உடல்நிலையில் இருக்கும் போதே தேவையுலுள்ள மற்றவர்களுக்காக இரத்ததானம் செய்ய முன்வர வேண்டும். ஏனெனில், ‘நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே’ (நீதி 3:27) என வேதாகமம் கூறுகிறது.

நாட்டில் பல்வேறு சமூக அரசியல் அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் இரத்ததானத்தை மையமாகக் கொண்டு ஏற்கனவே திட்டங்களை செவ்வனே செயல்படுத்திவரும் வேளையில் கிறிஸ்தவர்களாக நாம் ஒருங்கிணைந்து இந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன என நம்மில் பலருக்கு மனதில் கேள்விகள் எழும்பாமல் இல்லை. அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்தியருக்கு எழுதின தன் நிருபத்தில், “நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்” (கலா. 6:9,10.) என குறிப்பிடுகிறார். கிறிஸ்தவர்களாக நாம் தன்னார்வ இரத்ததானம் என்னும் நன்மை செய்வதில் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கவும், அது அனைவருக்கும் குறிப்பாக நம் கிறிஸ்தவ விசுவாசத்தில் இருப்பவர்களுக்கு தக்க நேரத்தில் உதவியாக அமைந்திடவும், கிறிஸ்தவர்களிடையே இரத்த தானத்தை ஊக்குவிக்கும் ”நல்ல சமாரியன்” அமைப்பு உதவும் என்பதில் எந்த ஐயமும் வேண்டியதில்லை.

18 வயது நிரம்பிய, 50 கிலோவுக்கு குறையாத எடை கொண்ட ஆண், பெண் இருபாலருமே இரத்ததானம் செய்ய முன்வரலாம். மற்றபடிக்கு, தானம் செய்யும் தகுதியும் உடற்பக்குவமும் தங்களுக்கு உள்ளதா இல்லையா என்பதை இரத்த வங்கி சோதனைகள் முடிவுசெய்து கொள்ளும். எனவே, தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிற (பிலி 2:13) தேவன் தாமே நீங்கள் இந்த தருணத்தில் சரியான தீர்மானங்கள் எடுத்து செயல்பட உங்களுக்கு உதவி செய்வாராக.

.
[“நல்ல சமாரியன்” உடன் இணைந்து செயல்பட விரும்புபவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம்]

Sunday, May 21, 2017

ஆவியின் கனி – நற்குணம்

நல்லவரும், நன்மை செய்கிறவருமாயிருக்கிற தேவனுடைய நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். ஆவியின் கனி வரிசையில் நன்மைசெய்ய மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே தயை (நீதி 19:22) என நாம் கடந்த மாதம் தியானித்தோம். அவ்விதம் நன்மை செய்ய ஒருவருக்கு உள்ளே இருக்கவேண்டிய உள்ளான குணமே நற்குணம். அதைக்குறித்து இப்போது தியானிப்போம். நற்குணம் என்பது ஒருவன் நல்லவனாக இருக்கிற குணம். அது தேவனுடைய குணம். தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லை என இயேசுவும் கூறியுள்ளார். ஆனால் நாம் அவரில் நிலைத்திருக்கும் போது அவருடைய அன்பில் நிறைந்திருக்கும் போது இந்த உள்ளான குணம் நமக்குள்ளும் வளரும்.

நற்குணம் என்ற வார்த்தைக்கு ஆங்கில வேதாகமங்களில் ‘Goodness’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் அந்த வார்த்தை நற்குணம் என்ற வார்த்தையை மட்டுமல்ல, தேவனுடையை நல்லுள்ளம் மற்றும் அவரது நற்செயல்களை குறிக்கும் வண்ணம் கிட்டதட்ட 50 இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நற்குணம் என்ற வார்த்தையோ தமிழில் 7 இடங்களில் மட்டுமே வருகிறது. நற்குணம் என்ற ஆவியின் கனியை குறிக்க கிரேக்க மொழியில் பயன்படுத்தபடும் ‘agathosune’ என்ற வார்த்தை ‘அடுத்தவர்களின் நன்மைக்காக ஒருவரின் உள்ளான இருதயத்திலும்  வாழ்க்கையிலும் காணப்படும் உத்தமம்’ என பொருள்படுகிறது. 

ஒருவரில் காணப்படும் நற்குணம் அடுத்தவருக்கு எப்போதுமே நன்மை செய்யவே நாடும். நன்மையான காரியங்கள் என கூறும் போது, பரிசுத்த வேதாகமத்தில் நற்காரியங்கள், நற்கிரியை, நற்கனி, நற்பொருள், நற்சாட்சி, நற்பலன், நற்செய்தி, நற்போதகம், நற்புத்தி போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன். இவற்றுள் நற்குணம், நற்கிரியை, நற்செய்தி என்ற மூன்று காரியங்களுக்குள் மிகவும் நெருங்கிய தொடர்பு உண்டு. தேவனுடைய நற்குணம் அவரது நற்கிரியைகளில் வெளிப்பட்டபோது தான் அது நற்செய்தியாக மக்களுக்கு அறிவிக்கப்பட்டது (லூக்கா 2:10-14).

கிறிஸ்தவர்களாகிய நாம் மற்றவர்களுக்கு அறிவிக்கும் நற்செய்தி நற்பலன்களைக் கொடுக்கவேண்டுமெனில், நம்மில் நற்கிரியைகள் காணப்பட வேண்டும். நற்காரியங்கள் செய்யும் ஒருவனை நல்லவன் என எல்லாரும் எப்போதும் சொல்லிவிட முடியாது. நற்காரியங்கள் சில செய்தாலாவது தங்களின் பாவத்திற்கு பரிகாரம் கிடைத்துவிடாதா என்ற எண்ணத்தில் அனைவருமே ஏதோவொரு கட்டத்தில் ஒருசிலருக்காவது நற்காரியங்களை செய்துவிடுகின்றனர். ஆனால் நற்கிரியை என்பதோ ஒருவர் வாழ்வில் அனுதினமும் வெளிப்படுகிற ஒரு காரியம். அது உள்ளான மனிதனின் வெளிப்படையான வெளிப்பாடு. உள்ளான மனிதனில் நற்குணம் பெருகிவரும் போது வெளியில் அது நற்கிரியைகளாக அனுதினமும் வழிந்தோடும்.

’மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது’ என்றார் இயேசு கிறிஸ்து (மத்தேயு 5:16). நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம் (எபேசியர் 2:10). சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார் (ரோமர் 2:7). இவ்விதம் நற்கிரியைகளை நடப்பிக்க நம்மில் நற்குணம் பெருகுவது அவசியமாக இருக்கிறது.

நற்குணம் என்பது அனைவருக்கும் இருக்க வேண்டிய உள்ளான பண்பாக இருப்பினும் அது குறிப்பாக பெண்களுக்கு இருக்க வேண்டிய அல்லது அவர்களிடம் குறிப்பாக எதிர்பார்க்கப்படுகிற காரியமாக இருக்கிறது. நீதிமொழிகள் 12:4 கூறுகிறது, ‘குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள்’. மேலும் நீதிமொழிகள் 31:10 ல் ’குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது’ என்றும் காண்கிறோம். பெண்களுக்கான துகுதியுள்ள அலங்கரிப்பைப் குறித்து குறிப்பிடும் போது அப்போஸ்தலனாகிய பேதுருவும், ‘அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது’  என 1 பேதுரு 3:4 ல் குறிப்பிடுகிறார்.

இந்த நற்குணம் நம்மில் பெருகிட நாம் செய்ய வேண்டியதென்ன? அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:11 ல் வாசிக்கிறோம், ‘அந்தப் (பெரோயா) பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப் பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்’. நாம் தேவனுடைய வசனங்களை மனவிருப்பத்துடன் தினமும் வாசித்து தியானித்து ஆராய்ந்து அறிந்து அதின்படி நடக்க நம்மை தினமும் அர்ப்பணிக்கும் போது நம்மில் ஆவியின் கனியாகிய நற்குணம் பெருகி அது நம் கிரியைகளில் வெளிப்படும். ஏனென்றால், ‘வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது’ (2 தீமோ. 3:16,17).


நற்குணம் என்பது நாமாக நம்மில் நாமே பெருக்கிக் கொள்ள முடியும் காரியம் அல்ல. அது உள்ளான குணம். அது தேவனுடைய குணம். நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது என யாக்கோபு 1:17ல் வாசிக்கிறோம். அவருடைய ஆவியினாலே நாம் உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்பட முடியும் (எபே. 3:16). அது ஒரு நாள் அனுபவம் அல்ல. ’எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது’ என்பது ஆதிவிசுவாசிகளின் அனுபவம் (2 கொரி. 4:16). இந்த அனுபவங்களுக்கு நம்மையும் அர்ப்பணிப்போம்.

ஆமென்.


[இது பாலைவனச் சத்தம் – மே 2017 இதழில் வெளியான எனது கட்டுரை]


Sunday, April 23, 2017

ஆவியின் கனி – தயவு

எல்லார் மேலும் தயவுள்ள நம் கர்த்தருடைய நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்.  நாம் தொடர்ந்து தியானித்து வரும் ஆவியின் கனியில், தயவு என்பது மையப்பகுதியாக ஐந்தாவதாக இருக்கும் அம்சமாக காணப்படுகிறது. தயவு என்பதற்கு பெரும்பாலான ஆங்கில வேதாகமங்களில் Kindness (இரக்கம்) என்ற வார்த்தையும் Gentleness (மென்மை) என்ற வார்த்தையும் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு இணையான கிரேக்க வார்த்தைக்கு ‘இருதயத்தில் உருவாகி செயலில் வெளிப்படும் இரக்கம்’ என பொருள்.

நாம் ஒருவரிடம் ஒன்றை செய்யும்படி எதிர்பார்த்து கேட்கும் போது, ‘தயவு செய்து’ என்ற வார்த்தையை பயன்படுத்துகிறோம். அதை அவரிடமிருந்து எதிர்பார்ப்பதற்கு நமக்கு ஒருவேளை தகுதியும் உரிமையும் இருந்தாலும் கூட, அதனை மறுப்பு எதுவும் இருந்துவிடாமல் உறுதிசெய்து கொள்வதற்காக ’தயவு செய்து’ என்ற வார்த்தையை, நாம் இறங்கி வந்து தாராளமாக பயன்படுத்துகிறோம். ஆனால் தயவு என்பது என்ன? நன்மைசெய்ய மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே தயை என நீதி 19:22 ல் பார்க்கிறோம். அடுத்தவருக்கு நன்மை பயக்கும் பொருட்டு முழுமனதுடன் செய்யப்படும் செயலை தயை எனலாம்.

தயவு என்பது நம் திரியேக தேவனின் இயல்புகளில் ஒன்று. எனவே தான் அவை நம்மிலும் வெளிப்பட அவர் நம்மை எதிர்பார்க்கிறார். முதலில் நாம் இரட்சிக்கப்பட்டதே முற்றிலும் தேவனுடைய தயவினால் தான். ’நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது, நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்’ (தீத்து 3:4,5). நாம் இதற்கு எவ்வளவும் தகுதியானவர்கள் அல்ல (தீத்து 3:3). நாம் இரட்சிக்கப்பட்டது அவருடைய சுத்த கிருபையே. 'கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு' என எபேசியர் 2:8 ல் வாசிக்கிறோம். 

கிருபை என்பதற்கு தகுதியில்லாவதனுக்கு காட்டப்படும் இரக்கம் என ஒரு வரையறை உண்டு.  தயவோ பல நேரங்களில் தகுதியை எதிர்பார்க்கும் (ஆதி 21:23, 2 சாமுவேல் 9:1, லூக்கா 7:4). மட்டுமல்ல, பதிலீடாக ஒன்றைக் கொடுத்தும் ஒருவர் தயையை பெற முடியும். (ஆதி. 34:11). தயை செய்தல் பிரதிபலனாக தயையை எதிர்பார்க்கும் (யோசுவா 2:12) ஆனால் தயவு என்பது தகுதியில்லாதவனுக்கும் கிடைக்கும் (ஆதி. 32:10). தேவனால் மட்டுமே கூடும் உச்சபட்ச தயவை கிருபை எனலாம். ஆனால் தயவு செய்வது என்பது மனிதனாலும் கூடும்.

தயை செய்வது ஒன்றும் தாழ்வான காரியமல்ல. பொன் வெள்ளியைப்பார்க்கிலும் தயையே நலம் (நீதி 22:1). அதனால் வரும் பலன்களோ மிகவும் அதிகம் என்பதை பின்வரும் இந்த வசனங்களில் இருந்து தெளிவாக அறிகிறோம். ’தயையுள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மை செய்து கொள்கிறான்’ (நீதி 11:17). ’தயையும் சத்தியமும் ராஜாவைக் காக்கும்; தயையினாலே தன் சிங்காசனத்தை நிற்கப்பண்ணுவான்’ (நீதி 20:18). ’நீதியையும் தயையையும் பின்பற்றுகிறவன் ஜீவனையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்’ (நீதி 21:21). தேவனுடைய தயவுள்ள கரம் நம்மீது இருக்கும் போது மனிதர்கள் கண்னில் தயவு கிடைத்து நமது காரியங்கள் வெற்றியாய் முடிகிறது (நெகே. 2:8)

நம் கிறிஸ்தவ வாழ்க்கையில் ஆவியின் முதல் கனியாகிய அன்பு பெருகும் போது தயவும் வெளிப்படும் (1 கொரி 13:4). ஆவியின் கனியாகிய தயவு நமது வாழ்க்கையில் நிறைவாய் வழிந்தோடுவதற்கு ஆதாரமாக அன்பும், அடையாளமாக மன்னிக்கும் சுபாவமும் நம்மில் பெருகவேண்டும். 'ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்' (கொலோ. 3:12,13). 'ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்’ (எபே. 4:32). ஏசாயா 55:7ன் படி கர்த்தர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்.

பலனை எதிர்பார்த்து மட்டுமே நாம் தயவு காட்டக் கூடாது. இருப்பினும் தயை செய்பவனுக்கு அதிகம் தயை செய்யப்படும். ’கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்’ (சங்145:9); இருப்பினும் சங்கீதம் 18:25ன் படி கர்த்தர் தயவுள்ளவனுக்கு இன்னும் தயவுள்ளவராக இருக்கிறார். ‘இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்’ (மத். 5:7) என இயேசுவும் தனது மலைப்பிரசங்கத்தில் கூறியுள்ளார். ’தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும், உன்னிடத்திலே தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருப்பாயானால் உனக்குத் தயவுகிடைக்கும்; நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டுபோவாய்’ (ரோமர் 11:22). 

ஆனால் பலனை எதிர்பார்த்து மட்டுமே தயை செய்தால் அது அன்பின் வெளிப்பாடு அல்ல; அது சுயநலத்தின் வெளிப்பாடு. மட்டுமல்ல, தயை செய்வதில் பாரபடசமும் இல்லாமல் இருக்கவேண்டும். உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால்,  உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மைசெய்தால், அதனால், என்ன பிரயோஜனம்? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே என இயேசு கிறிஸ்து கூறியுள்ளார். ’உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள், அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள், அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மைசெய்கிறாரே’ (லூக்கா 6:35). 

உபதேசங்களைக் குறித்த வாக்குவாதங்களினால் அல்ல, உண்மைக் கிறிஸ்வர்களின் தயவு நிறைந்த நடவடிக்கைகளினாலேயே  அநேகர் சபைகளுக்குள் இழுக்கப்பட்டுள்ளனர் என்கிறார் வில்லியம் பார்க்ளே என்னும் வேத அறிஞர். இன்று நமது கனிதரும் கிறிஸ்தவ வாழ்க்கை எப்படி இருக்கிறது? தேவ ​​​​​​​தயையை பெற்றுக் கொண்ட நாம் பிரதிபலனாக மற்றவர்களிடம் தயையை காண்பிக்கிறோமா? மற்றவர்களின் மீது தேவ தயவுக்காக ஜெபிக்கிறோமா? (ரூத். 1:8). மற்றவர்களை நாம்  தாராளமாக ஆசீர்வதிக்கிறோமா? (1 சாமு. 23:21). தயவு என்னும் இந்த ஆவிக்குரிய கனி நம்மில் பெருகி, மற்றவர்களை அவரண்டை நடத்திட நம்மை அர்ப்பணிப்போமாக. ஆமென்.


[இது பாலைவனச் சத்தம் – ஏப்ரல் 2017 இதழில் வெளியான எனது கட்டுரை]

Tuesday, April 11, 2017

My 10 Years of Journey as a Blogger

இப்படியொரு பதிவை எழுதும் அளவிற்கு நான் ஒன்றும் பெரிய எழுத்தாளன் அல்ல. இருப்பினும் இறைவன் இயேசு எனக்கு அருளிய நற்கொடைகளை மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் உக்கிராணத்துவக் கடமையில் கடந்த 10 வருடங்களாக நான் கடந்து வந்த பாதையினை, ஏப்ரல் 10, 2007 ல் முதல் பதிவுடன் தொடங்கிய எனது பிளாக் இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவுசெய்வதை முன்னிட்டு, இந்த கட்டுரை வழியாக  வாசக நண்பர்களுக்குச் சுட்டிக்காட்டுவதில் உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சி தான்

வசதி வாய்ப்புகள் இல்லாத ஒரு கிராமத்துப் பின்னணியில் பிறந்து வளர்ந்த எனக்கு இன்று இருக்கும் வசதி மற்றும் வாய்ப்புக்கள் இவையெல்லாம் நினைத்துப் பார்த்தாலே மலைக்கும் அளவிற்கு பெரிய வித்தியாசங்கள் உண்டு. இவையெல்லாம் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிற, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிற (சங்கீதம் 113:7) நம் கர்த்தராலே ஆயிற்று.

எனது சிறுவயது கிராமத்துப் பின்னணியில் எங்கள் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி கூட கிடையாது (எனக்கு திருமணமாகும் வரையிலும் இல்லை); செய்திதாளும் வாங்கும் பொருளாதார நிலைமை இல்லை. சிறுவயதில் தினமும் நான் எங்கள் உறவினரின் மளிகைக்கடையில் சாமான் வாங்கச் செல்லும் போது, பெரியவர்கள் அங்கே கூடிநின்று ஒரே செய்தித்தாளை பங்குவைத்து படித்துக்கொண்டிருப்பது வழக்கம். அந்த  பெரியவர்களுக்கிடையில் நானும் பங்கு போட்டுக் கொண்டு, என் கையில் கிடைத்த அளவில் அன்றாடம் செய்திதாளை படித்து விடுவது உண்டு. சிறுவயதில் எனக்கு இருந்த இந்த வாசிப்பு ஆர்வத்தை அன்று கிண்டலடித்த பெரியவர்கள் பலர் எங்கள் கிராமத்தில் உண்டு.
 
பள்ளி நாட்களில் கலை இலக்கிய நிகழ்வுகளில் நான் எப்படியாவது கலந்து கொண்டு எனது கூச்ச சுபாவத்தை களைய வேண்டும் என எனது இரண்டாவது அண்ணன் எடுத்த முயற்சிகள் பலவும் தோற்றுப் போய், ஒரே ஒரு முறை ஐந்தாம் வகுப்பின் போது பள்ளி ஆண்டுவிழாவின் ஒரு நாடகத்தில் இந்து பூசாரியாக நடித்தது மட்டும் இன்றும் நினைவிற்கு வருகிறது.

வாழ்க்கையில் எப்படியாவது படித்து முன்னுக்கு வரவேண்டும் என்ற உத்வேகத்தை என் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து கற்றுக் கொண்டதாலும், என் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோரின் ஒத்துழைப்பினாலும் கர்த்தரின் அநாதி திட்டம் மற்றும் கிருபையினாலும் எனது பொறியாளர் கனவையும் தாண்டி இன்று மருத்துவராக விளங்கிட முடிந்திருக்கிறது.

மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்தும் எனக்கென்று தனிப்பட்ட திறமை தாலந்துகள் இருப்பதாக நான் உணரவில்லை. ’தேவன் எவர் ஒருவருக்கும் எல்லா தாலங்துகளையும் கொடுத்து விடுவதில்லை; எவர் ஒருவருக்கும் ஒரு தாலந்தையாவது கொடுக்காமலும் இல்லை; அந்த தாலந்து எது என்பதை கண்டுபிடித்து அவருடைய நாம மகிமைக்காய்  பயன்படுத்த வேண்டும்என்ற உண்மையையும் உணர்வையும் கல்லூரி நாட்களில் எனக்கு ஆவிக்குரிய வளர்ச்சிக்கு பெரிதும் உதவிய இந்திய நற்செய்தி மாணவர் மன்றம் (EU) மூலம் அடைந்து கொண்டேன்.

அவைகளைக்  கண்டுபிடித்து நிறைவேற்றும் பணியில் நடைமுறையிலும் அதே இயக்கம் தான் எனக்கு உறுதுணையாக இருந்தது. அவற்றுள் ஒன்று தான் எழுதும் தாலந்து. அந்த இயக்கத்தின் மாதாந்திரப் பத்திரிக்கையில் முதன் முதலாக எனது சவாலான சாட்சியை எழுத அதன் ஊழியர் திரு. ராஜபாலன் அவர்கள் என்னை ஊக்குவித்தார். எனது சாட்சியை ஒரு தாளில் எழுதிக்கொடுத்து, அதனை இதழில் பதிப்பாகும் அளவிற்கு திருத்தித் தரும்படி அவரிடம் கொடுத்தால், அவர் அங்கும் இங்குமாக வார்த்தைகளை வெட்டி, ஒட்டி, குத்திக்குதறி திருத்தி எழுதித் தந்து இப்போது இதனை பத்திரிக்கைக்கு அனுப்பி வை என்றார். அப்போது எனது முகம் சுருங்கிப் போனதை உணர்ந்து கொண்ட அவர் எனக்கு பக்குவமாக எடுத்துக் கூறி உற்சாகப்படுத்தி என்னை சமாதானப்படுத்தினார்.

அந்தக் கட்டுரை (தரிசனச் சுடர், நவம்பர் 1995 ல் எனது முதல் கட்டுரை) வெளிவந்த போதோ அதனை வாசித்த பலர் எனது சாட்சியையும் எழுத்து நடையையும் கண்டு என்னைப் பாராட்டி மகிழ்ந்தனர். எனக்கோ உள்ளூர, அது எனது எழுத்து அல்லவே என்ற எண்ணமே மேலோங்கிக் கொண்டிருந்தது. தொடர்ந்து எனக்கு வந்த வாய்ப்புக்களை நான் ஜெபத்துடன் பயன்படுத்திக் கொள்ளவே, நான் (நானாகவே) எழுதிய கட்டுரைகளெல்லாம் அவ்வப்போது அந்த அந்த இதழில் வெளிவந்த வண்ணம் இருந்தன.

கல்லூரி இறுதி நாட்களில் அந்த இயக்கத்தின் வருடாந்திர கூடுகை ஒன்றில், புதிதாய் ஒருவர் தன்னை அறிமுகம் செய்து கொண்டபோது, நானும் பேதுரு தான்; நீங்கள் தான் தரிசுனச்சுடர் பேதுருவா என்றார். ஆம் என்றேன். உங்களை இப்போது தான் முதல் முறையாகப் பார்க்கிறேன். எனது ஆவிக்குரிய வாழ்க்கையில் உங்கள் எழுத்துக்கள் பல எனக்கு உற்சாகமாய்  அமைந்திருக்கின்றன; எனவே நான் இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் எடுக்கும் போது எனது இந்து பெயருடன் பேதுரு என இணைத்துக் கொண்டேன் என உணர்ச்சிப் பூர்வமாக கூறினார். ஆண்டவருக்கே மகிமை உண்டாகட்டும். அன்றிலிருந்து எழுதுவது ஆண்டவர் எனக்கு அருளிய தாலந்து; அதனை அவருக்காக முறையாக பயன்படுத்த வேண்டும் என்ற முடிவுக்குள் வந்தேன்.

தொடர்ந்து அவ்வப்போது அந்த பத்திரிக்கையில் எழுதிவந்தேன்பட்ட மேற்படிப்பு வேலூரில் படித்துக் கொண்டிருக்கும் போது, Peter Daniel என்னும் ஒரு அண்ணனுடன் இணைந்துவளாகத்தில் தொடரும் தரிசனம்வளாக ஜெபக்குழுக்களுக்கான நடைமுறைக் கையேடுஎன்ற புத்தகத்தை நானும் அவரும் முறையே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி முடித்தோம். அவை 2004 ல் முறையே UESI-TN மற்றும் UESI நிறுவனத்தின் வெளியீடுகளாக வந்தன. அந்த இயக்கத்தில் நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கொய்னோனியா மாநாட்டில் 2004 ல் – Literature Ministry என்ற செமினார் நடத்தும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டதை என் எழுத்துக்கு கிடைத்த அங்கிகாரமாக கருதி தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

2007 ல் உன்னத சிறகுகள் என்ற பத்திரிக்கையில்யோகா - ஒரு கிறிஸ்தவ மருத்துவரின் கண்ணோட்டம்என்ற தலைப்பில் நான் கட்டுரை எழுதியபோது, அது எனது எழுத்துப்பணியை வேறு தளத்திற்கு கொண்டு சென்றது. இந்த கட்டுரை டாக்டர், புஷ்பராஜ் அவர்களின் ஜாமக்காரன் பத்திரிக்கையின் மறுபதிப்பாகியதும், அதன் பகுதி தமிழ்க்கிறிஸ்தவர் பக்கங்கள் என்னும் தளத்தில் முகப்பில் (http://www.tamilchristian.com/index.php/hot-topics/yoga-in-tamil)   Hot Topics வரிசையில் இன்றும் இடம்பெற்றிருப்பதும் எனது எழுத்து முயற்சிக்கு கிடைத்த அங்கிகாரமாகவே கருதுகிறேன்.

2006 வரை நான் அவ்வப்போது எழுதி வெளிவந்த கட்டுரைகளை நான் அதுவரையிலும் நான் ஆவணப்படுத்தவில்லை. எனவே இனிவரும் எழுத்துக்களையாகிலும் முறைப்படுத்தலாமே என்ற என்ணத்தில் மிகவும் சாதாரணமாக ஒரு பிளாக்கை ஆரம்பித்து அங்கு என் எழுத்துக்களை சேர்க்க ஆரம்பித்தேன். அந்த கால கட்டத்தில் பிரபலமாக புழக்கத்திலிருந்த தமிழ்க்கிறிஸ்தவர்கள் தளம் (http://www.tamilchristians.com/ - துரதிருஷ்டவசமாக, தற்போது இது பயன்பாட்டில் இல்லை) மற்றும் அங்கு கிடைத்த நட்புகள் இதற்கு தூண்டுகோலாக அமைந்தன. இந்த பத்தாண்டுகளில் ஒரு ஆண்டிலும் கூட இடைவெளி இல்லாமல் பொத்தம் 65 பதிவுகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 27 கட்டுரைகள் பத்திரிக்கைகளில் வெளிவந்தவை. இந்த பத்தாண்டுகளில் மட்டும் பத்திரிக்கைகளில் வெளிவந்தும் இங்கு இடம்பெறாத கட்டுரைகள் கிட்டதட்ட 10 வரை விடுபட்டிருக்கும். இடையில் வந்த முகநூலின் தாக்கம் இங்கு பிளாக்கில் முறையாக எழுதவேண்டிய அவசியம் இல்லாமல் ஆக்கிவிட்டது. இருப்பினும் பிளாக்குக்கு என்று ஒரு தேவை தொடர்ந்து இருப்பதாகவே எனக்கு தென்படுகிறது.

இந்த அளவிற்கு எழுத எனக்கு வாய்ப்புகளை அருளிய தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். இந்த பத்தாண்டுகளில் எனக்கு இருந்த ஒரு மோசமான பழக்கம் என்னவென்றால், இதுவரை எந்தவொரு பத்திரிக்கைக்கும் கூட, பிரசுரம் ஆகவேண்டும் எனபதற்காக நானாக எனது கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவில்லைவெளியான கட்டுரைகள் அனைத்துமே, அந்தந்த பத்திரிக்கை குழுவினால் என்னிடம் கேட்டு வாங்கப்பட்ட கட்டுரைகள் அல்லது என்னை அவர்கள் உற்சாகப்படுத்தி, அதனால் எழுதிய கட்டுரைகள் மட்டுமே.

எனவே, காலத்தின் கோலத்திற்கேற்ப, தேவைகளை உணர்ந்து அவசியமான கட்டுரைகளை நானாக எழுத வேண்டும் என்ற உணர்வு இந்த பத்தாண்டு நிறைவு தினத்தில் என்னுள் அதிகமாய் பெருகி வருகிறது. எனது Ph.D இறுதியாண்டுக்கான பணிச்சுமைகள் அதிகமாக இருப்பதால், இந்த வருடம் எனது பிளாக் பதிவுகளில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாது இருப்பினும், வரும்காலங்களில் இவைகளை முறைப்படுத்தி தேவமகிமைக்காய் தொடர்ந்து எழுத விரும்புகிறேன். தங்களின் மேலான ஜெபம், ஆலோசனை மற்றும் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

Sunday, March 19, 2017

ஆவியின் கனி – நீடிய பொறுமை

கனியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையில் ஆவிக்குரிய கனியின் ஒவ்வொரு அம்சங்களையும் நாம் சிந்தித்து வருகிறோம். இந்த மாதத்தில் ஆவியின் கனியாகிய நீடிய பொறுமை குறித்து காண்போம். ’பொறுத்தார் பூமியாழ்வார்’ எனவும் ’பொறுமைக்கும் எல்லை உண்டு’ எனவும் உலகவழக்கில் பலர் சொல்ல, நாம் கேள்விப்பட்டதுண்டு. எல்லையில்லாத பொறுமை, அதாவது தொடர்ச்சியாக நிலைத்து நிற்கும் பொறுமை தான் நீடியபொறுமை. கடினமான சூழ்நிலைகளில் உறுதிப்பாட்டுடன் தன்நிலையை தக்கவைத்துக் கொள்ளுதல் (long suffering) நீண்ட நேரம் நிதானத்துடன் நடந்துகொள்ளும் நிலை (long temper) என்ற இருவேறு காரியங்களுக்கும் பொறுமை என்ற ஒரே சொல்லே பயன்படுத்தப்படுகிறது.
பலரும் பலவிஷயங்களில் பொறுமையிழக்கும் போது நாம் பொறுமையுடன் இருந்தால் நம்மில் ஏதோ ஒரு வெறுமை இருப்பதாக நினைக்க வேண்டியதில்லை. மாறாக, பொறுமையிழப்பது தான் நம் கிறிஸ்தவ வாழ்வில் ஆவியானவர் செயல்படாத வெறுமையைக் காண்பிக்கிறது. மேலும், நம்மை பூரணராக்குவதே இந்த பொறுமை தான். ’நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது’ (யாக்கோபு 1:4 ). ’பெருமையுள்ளவனைப் பார்க்கிலும் பொறுமையுள்ளவன்  உத்தமன்’ (பிரசங்கி 7:8). பொறுமையாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள் (யாக்கோபு 5:11).

பொறுமை ஒரு நல்ல பண்பு என்பதைக் காட்டிலும் அது ஒரு கிறிஸ்தவப் பண்பு என்பது தான் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் நமது தேவன், அவர் நீடிய பொறுமையுள்ள தேவன் (சங்கீதம் 86:15, 2 தெச 3:5). நாம் முதலில் இரட்சிக்கப் பட்டு அவருடைய பிள்ளைகளாக மாறியதே அவருடைய பொறுமையினால் தான் (1 தீமோ 1:16). நமது அனுதின வாழ்க்கையில் ஏற்படும் நமது மீறுதல்களிலும் அவர் பொறுமையுள்ளவராகவே இருக்கிறார் (ஏசாயா 48:9). நீடிய பொறுமையுள்ளவராக இருப்பதினால் தேவன் அநியாயங்களை சகித்து நீதியுள்ளவர்களுக்கு அநியாயஞ் செய்பவரல்ல. ’அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?’ (லூக்கா 18:7).

ஒருவரின் பொறுமை உபத்திரவத்தில் வெளிப்படுவது மட்டுமல்ல, பொறுமையை விருத்தியடையச் செய்வதே உபத்திரவங்கள் தான். ஒரு பொறுமைசாலியினால் மட்டுமே கடினமான துன்பமான சூழ்நிலைகளிலும் முறுமுறுக்காமல் தாங்கிக் கொள்ள முடியும். அடுத்தவர் மீதே தவறுகள் காணப்பட்டாலும் நீதியுள்ள நியாதிபதி பார்த்துக் கொள்வார் என நினைக்கும் பக்குவம் உள்ளவர்கள் மட்டுமே அதற்காக கோபப்படாமலும் புகார் கொடுக்காமலும் மாறாக மன்னித்து மறக்கும் அனுபவத்தை நடைமுறைப் படுத்த முடியும். இந்த நீடிய பொறுமை அது ஆவியின் கனி. பரிசுத்த ஆவியானர் நமது வாழ்க்கையில் செயல்பட முழுவதும் விட்டுக் கொடுக்கும் போது தான் இந்த கனி நம் வாழ்க்கையில் வெளிப்படும்.

இவ்வுலக வாழ்க்கையில் இயேசுவும் கூட தனது பொறுமையை இழந்திருக்கிறார். ஆனால் அது நம்மைப் போன்று சிறுசிறு காரியங்களுக்காக அல்ல. விசுவாசக் குறைச்சலால் பிசாசின் பிடியில் அகப்பட்டவர்களை விடுவிக்க முயற்சி செய்யாமல் கடமைக்கு காலத்தைக் கடத்தின தன் சீடர்களையும் (மத்தேயு 17:17, லூக்கா 9:41), பிதாவின் வீட்டை வியாபார வீடாக்கினவர்களையும் (யோவான் 2:13-17) அவர் பொறுமையிழந்து கடினத்துடன் நடத்த வேண்டியதாயிற்று. நாமும் பல வேளைகளில் பொறுமை இழக்கிறோம். ஆனாலும், தேவன் நமது பொறுமையை அறிந்திருக்கிறார் (வெளி. 2:2,3,19). எனவே, அந்த நிலைகளில் நம்மை நாமே நிதானித்து அறிந்து நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.  ஒருமுறை பொறுமையிழந்தாலும் நீடியபொறுமை என்ற நிலையில் இருந்து நாம் தவற வேண்டியதுள்ளது. எனவே நீடிய பொறுமையில் நிலைத்திருக்க பரிசுத்த ஆவியானவரின் ஆளுகை நம் வாழ்வில் தொடர்ச்சியாக இருக்க வேண்டும். நமது நீடிய பொறுமை அவரது வருகை வரையும் நிலைத்திருப்பதாக இருக்க வேண்டும் (யாக்கோபு 5:7a).

குறிப்பாக நமக்கு எந்தெந்த காரியங்களில் பொறுமை வேண்டும்? முதலாவதாக, நமது ஜெபத்தில் பொறுமை வேண்டும். தாவீது கூறுகிறார், ‘கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்’’(சங்கீதம் 40:1). ’நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கப்பண்ணலாம்‘ (நீதி 25:15). எனவே முதலில் ஜெபத்தில் பொறுமை தேவை. இரண்டாவதாக, வேதவசனங்களை கேட்கிற நாம் அவைகள் நம் வாழ்வில் ஏற்ற பலன்களைக் கொடுக்க பொறுமையுடன் செயல்பட வேண்டும். ’நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்’ (லூக்கா 8:15). இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான் (யாக்கோபு 5:7b) என்ற வசனத்திற்கேற்ப, ஆவிக்குரிய வாழ்க்கையில் பலனை எதிர்பார்த்து செய்து கொண்டிருக்கும் அனைத்து காரியங்களிலும் உரிய பலனை அடையும் வரை பொறுமையுடன் செயல்பட வேண்டும். மூன்றாவதாக, நமக்கு வரும் உபத்திவங்களில் பொறுமையாய் இருக்க வேண்டும் (ரோமர் 12:12). 

பொறுமை நமது வாழ்வில் பெருக இவை நமக்கு அவசியமாகின்றன. 1) வேத வசனம்:  ’தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது’ (ரோமர் 15:4).  2) தேவ கிருபை: ரோமர் 15:6 கூறுகிறது, ‘பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக’. 3) ஒருவருக்கொருவர் ஜெபம்: சந்தோஷத்தோடே கூடிய எல்லாப் பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு, மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக வேண்டுதல்செய்கிறோம்’ (கொலோ. 1:11). 4) நல்ல முன்மாதிரிகள்: ’நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களுமாயிருந்து, உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்’ (எபிரெயர் 6:11,12) என்கிறார் அப்போஸ்தலனாகிய பவுல்.


கிறிஸ்துவின் பொறுமைக்கு உங்கள் உடன்பங்காளனுமாயிருக்கிற யோவான் (வெளி. 1:9), பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெற்றுக்கொண்ட ஆபிரகாம் (எபிரெயர் 6:15), தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, பேழையை ஆயத்தம்பண்ணிக் கொண்டிருந்து நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா (I பேதுரு 3:20, 2 பேதுரு 2:5), பொறுமைசாலியான யோபு (யாக்கோபு 5:11) இவர்களெல்லாம் நமது கனிதரும் கிறிஸ்தவ வாழ்க்கையில் நமக்கு நீடியபொறுமையை புகட்டும் நல்ல முன்மாதிரிகள்.  இவர்களைப் பின்பற்றி, நமது விசுவாச ஓட்டத்தை பொறுமையோடே ஓடி முடிக்க தேவன் கிருபை தருவாராக.

ஆமென்.


[இது பாலைவனச் சத்தம் - மார்ச் 2017 இதழில் வெளியான எனது கட்டுரை]