Sunday, November 06, 2016

பொல்லாங்கனை ஜெயித்ததினால் எழுதுகிறேன்

கிறிஸ்துவில் பிரியமான சகோதர சகோதரிகளுக்கு நம் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அப்போஸ்தலனாகிய யோவான், தான் எழுதிய நிரூபத்தின் நோக்கங்களை மூன்று விதமான மக்களுக்கும் வெவ்வேறாக குறிப்பிட்டத்தையும் அவற்றில் பிள்ளைகளுக்கும் பிதாக்களுக்கும் எழுதியவற்றையும் கடந்த இதழில் விரிவாக தியானித்தோம். வாலிபர்களுக்கு அவர் எழுத்தும் நோக்கத்தினை இந்த இதழில் காண்போம். 
வாலிபர்களுக்கு அவர் எழுதுவதென்ன? ’பொல்லாங்கனை ஜெயித்ததினால் எழுதுகிறேன்’ என்கிறார் (1 யோவான் 2:13b). இரண்டாம் முறையும் அதையே தான், ஆனால் மூன்று படிநிலைகளில் கூறுகிறார். பலவானாய் இருக்கிறதினாலும், தேவ வசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும் உங்களுக்கு எழுதுகிறேன் (1 யோவான் 2:14b) என்கிறார். ஆவிக்குரிய நிலையில் துடிப்பான வாலிபர்களாக இருக்க வேண்டுமெனில், முதலில் இரட்சிப்பு என்ற பிள்ளைகளின் அனுபவம் அடிப்படைத் தேவை. அதைத்தொடந்து வாலிபர்களாய் விளங்கிட நாம்  பொல்லாங்கனை ஜெயிக்க வேண்டும். பொல்லாங்கனை ஜெயிப்பது எப்படி? அவைகளில் உள்ள படிநிலைகளை இங்கு காண்போம். 
பலவான்களாய் இருப்பதினால்:
வாலிபர்கள் இயல்பாகவே பலம் பொருந்தியவர்களாக இருப்பதினால், அவர்களால் எதிராளிகளை எளிதில் மேற்கொள்ள முடியும். வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள் (சங்கீதம் 127:5) என்பது அவர்களுக்கு இரட்டை பலத்தைத் தருகிறது. ஆனால், ஆவிக்குரிய போராட்டத்தில் வாலவயதினர் பலப்படவேண்டியது உடல் ரீதியாக அல்ல; ஆவிக்குரிய நிலையில். கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள் என்கிறார் பவுல் (எபேசியர் 6:10). சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார் என்கிறார் ஏசாயா தீர்க்கத்தரிசி (ஏசாயா 40:29).
உடல் ரீதியான பெலனுக்கு தினமும் நல்ல சத்தான உணவு, உடற்பயிற்சி மற்றும் முறையான ஓய்வு தேவை. அதுபோன்றே ஆவிக்குரிய பெலனுக்கு தினமும் ஆவிக்குரிய வசன உணவூட்டம், கர்த்தரிடத்தில் காத்திருக்கும் ஜெபம் மற்றும் உற்சாகமான ஊழியம் போன்ற பயிற்சிகள் தேவை. ஆவிக்குரிய போராட்டத்தில், தன் சொந்த பலனை நம்பி களம் இறங்குபவர்கள் தோற்றுப் போவது உறுதி. இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள் (ஏசாயா 40:30,31).
வேதவசனம் நிலைத்திருப்பதினால்:
யோவான் 15:4-10 வசனங்களில் விசுவாசிகள் தன்னில் நிலைத்திருப்பதைக் குறித்து இயேசு விபரமாக கூறுகிறார். என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள் (யோவான் 15:4). ஆதியிலே வார்த்தையாக தேவனிடத்தில் இருந்தது, பின்னர் மாம்சத்தில் வெளிப்பட்டவர் தான் இயேசு கிறிஸ்து. எனவே வேத வசனம் நம்மில் நிலைத்திருப்பது என்றால், இயேசு நம்மிலும் நாம் அவரிலும் நிலைத்திருப்பது தான்.  
அப்படி நாம் அவரில் நிலைத்திருக்க வேண்டுமெனில், நாம் அவரது கற்பனைகளுக்குக் கீழ்பப்டிய வேண்டும்.  நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள் என்றார் இயேசு (யோவான் 15:10). நாம் அவரது கற்பனைகளைக் கைக்கொள்ள வேண்டுமென்றால், அவைகளை தினமும் வாசிக்க வேண்டும், நேசிக்க வேண்டும், தியானிக்க வேண்டும், முக்கிய வசனங்களை மனப்பாடம் செய்ய வேண்டும், அவைகளை கடைபிடிக்க வேண்டும்.  அப்போது தான் வாலிபர்களாக பொல்லாங்கனை ஜெயிக்க முடியும். 
பொல்லாங்கனை ஜெயித்ததினால்:
உலகத்தில் நாம் நமது பெற்றோர்களால் பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் இயேசுகிறிஸ்துவை நம் இருதயத்தில்  விசுவாசித்து அவரை நம் பாவபரிகர இரட்சகராக ஏற்றுக் கொள்ளும் போது நாம் தேவனுடைய பிள்ளைகளாகிறோம்; அதாவது, நாம் தேவனால் பிறந்தவர்களாகிறோம் (யோவான் 1:12,13). தேவனாலுண்டாயிருந்தவர்கள் பொல்லாங்கனை ஜெயிக்கமுடியும் என்பது வாக்குத்தத்தம். தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம்; தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான் (I யோவான் 5:18). யோவான் அப்போஸ்தலன் மேலும் கூறுகிறார், நீங்கள் தேவனாலுண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர் (1 யோவான் 4:4). உங்களில் ’இருக்கிறவர்’ பெரியவர். அதாவது நம்மில் தேவ ஆவியானவர் அவருடைய ஆளுமை செயல்பாடுகள் தொடர்ந்து இருந்துகொண்டிருக்கும் போது மட்டுமே நாம் பொல்லாங்கனை ஜெயிக்க முடியும்.

ஆவிக்குரிய வாழ்க்கையில் வாலிபராய் இருக்கும் நாம் பொல்லாங்கனை ஜெயிக்க வேண்டும்; பொல்லாங்கனை ஜெயிக்க நாம் கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படவேண்டும். அவருடைய வசனத்தில் நிலைத்திருக்கும் போது தான் அந்த பலம் நமக்குக் கிடைக்கும். எனவே அவருடைய வசனத்தை நாம் முறையாக வாசிப்போம்; நேசிப்போம்; தியானிப்போம்; அவைகளை முறையாக கடைபிடிப்போம். அப்படி அவரது கற்பனைகளை நாம் கடைபிடிக்கும் போது இயேசுவும் நம்மில் நிலைத்திருப்பார்; நாம் பொல்லாங்கனை எளிதில் ஜெயிக்கலாம்.

இந்தவிதம் பொல்லாங்கனை ஜெயிக்கும் அனுபவத்திற்குள் ஆண்டவர் நம்மை வழிநடத்துவாராக. ஆமென். 


[பாலைவனச் சத்தம் - அக்டோபர் 2016 இதழில் வெளியான எனது கட்டுரை] 

Saturday, October 22, 2016

இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன் [1 யோவான் 2:12-14]


ஆதியிலே வார்த்தையாய் தேவனிடத்தில் இருந்து, பின் மாம்சமாகி பாடுபட்டு பரமேறி இன்றும் நம்மிடையே வாசம் செய்யும் நாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

       புதிய ஏற்பாட்டின் 27 புத்தகங்களில் பெரும்பாலும் அவை யாரால், யாருக்காக, எதற்காக எழுதப்பட்டது என நேரடிக் குறிப்புகள் உண்டு. பொதுவாகவே ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டால், அதன் ஆசிரியர் முன்னுரை எழுதியிருப்பார்; அல்லது எழுத்தில் பிரபலமான வேறு எவராவது அறிமுகவுரை எழுதியிருப்பார். அவற்றை வாசிக்கும் போது அந்த புத்தகம் எதற்காக என நமக்குத் தெரியவரும். சில நேரங்களில் ’புத்தகத்தைப் பற்றி’ என அந்த புத்தகத்தின் கடைசி வெளிப்பக்க அட்டையில் இருக்கும். அவைகளை வாசித்தறிந்து, அது பிரயோஜனமான ஒன்று என மனதில் பட்டால் மட்டுமே அந்த புத்தகத்தை நாம் வாங்குவோம்; படிப்போம்.

        பரிசுத்த வேதாகமம் முழுவதுமே முதலிலிருந்து கடைசி வரையும் திரியேக தேவனைக் குறித்து சொல்வதோடு மட்டுமல்லாமல், குறிப்பாக அது தன்னைக் குறித்தும் சொல்லுகிறது. வார்த்தையாகிய இயேசுவே மனிதனாய் உலகத்தில் வந்தது தான் அதன் மையச் செய்தி. பரிசுத்த வேதாகமத்தின் மகத்துவங்கள், இவற்றை வாசிப்பதால் தியானிப்பதினால் கைக்கொள்ளுவதினால் என்ன பயன் என பல்வேறு இடங்களில் தனக்குத் தானே அது சொல்லிக் கொள்கிறது. பொதுவாக புத்தகங்களில் முகவுரை மட்டும் தான் புத்தகத்தைப் பற்றி இருக்கும் பின்பு முழுவதும் அதன் உள்விஷயங்கள் இருக்கும். பரிசுத்த வேதாகமத்தில் மட்டும் தான் ஆரம்பமுதல் இறுதிவரையும் பரிசுத்த வேதாகமத்தைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது.

             அந்த விதமாக அப்போஸ்தலனாகிய யோவான், தான் எழுதிய மூன்று நிரூபங்களிலும் யாருக்கு அல்லது எதற்காக என்ற குறிப்புகள் ஆரம்பத்திலேயே இருந்தாலும் [1 யோவான் 1:4, 2 யோவான் 3,5,12, 3 யோவான் 1, 9, 13] இந்த 1 யோவான் 2:12-14 பகுதியில் தனது நிருபத்தின் இடையில் எழுதியது மட்டுமல்லாமல் நிருபத்தின் இறுதிப் பகுதியிலும் (1 யோவான் 5:13) தான் எழுதும் நோக்கத்தை தெரிவிக்கிறார். தனது நிரூபங்களில் மொத்தம் 21 முறை தான் எழுதுவதைக் குறித்து எழுதியுள்ளார். இந்த 1 யோவான் 2:12-14 பகுதியில், அப்போஸ்தலனாகிய யோவான், மூன்று விதமான மக்களுக்கு இதனை எழுதுகிறார். முதலாவது பிள்ளைகள், பின்னர் பிதாக்கள், இடையில் வாலிபர்கள். பரிசுத்த வேதாகமமும் அப்படியே எல்லா வயதினருக்கும் பொதுவானது. சிறுபிள்ளைகளுக்கு நன்னெறிகளைப் புகட்டும் புத்தகமாக மட்டுமல்ல, அது வாலிபர்களுக்கு வழியைக் காட்டும்; பெரியவர்களுக்கும் நல் ஆலோசனைகளைக் கொடுக்கும்.

 இந்த பகுதியில் அப்போஸ்தலனாகிய யோவான் மூன்று பிரிவினர்களில் ஒவ்வொருவருக்கும் இரண்டிரண்டு காரணங்களுக்காக இவற்றை எழுதுவதாக கூறுகிறார். பிள்ளைகளே, அவருடைய நாமத்தினிமித்தம் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன் (வச. 12). பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். வாலிபரே, பொல்லாங்கனை நீங்கள் ஜெயித்ததினால் உங்களுக்கு எழுதுகிறேன். பிள்ளைகளே நீங்கள் பிதாவை அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன் (வச. 13). பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதியிருக்கிறேன். வாலிபரே, நீங்கள் பலவான்களாயிருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன் (வச. 14).

பிள்ளைகள்:
               

    பிள்ளைகளுக்கு எழுதுவதன் நோக்கம், பிதாவை அறிந்திருக்கிறதினால் மற்றும் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறதினால். பிதாவாகிய தேவனை அறிந்து, அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொள்ளும் போது நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு நாம் அவருடைய பிள்ளைகள் ஆகிறோம். பாவங்கள் மன்னிக்கப் பட்டிருக்கும் இரட்சிப்பின் அனுபவம் என்பது ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒரு பிள்ளை அனுபவம். இது அடிப்படையான மற்றும் ஆரம்ப அனுபவம். இதிலேயெ நாம் திருப்தியடைந்து இருந்துவிடக் கூடாது. பிள்ளைகள் பெரியவர்களாக வளர வேண்டும்; ஆவிக்குரிய நிலையில் இன்னும் நாம் முன்னேறிச் செல்லவேண்டும்.

பிதாக்கள்:  
               
      பிதாக்களுக்கு எழுதுவதன் நோக்கத்தில் ஆதிமுதல் இருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் என இருமுறையும் அதையே குறிப்பிடுகிறார். ஆதிமுதல் இருக்கிற திரியேக தேவனை அறிந்திருத்தல் ஆவிக்குரிய நிலையில் பிதாக்களின் அனுபவம். தேவனை நான் முழுமையாய் அறிந்து கொண்டேன் என எவருமே கூற முடியாது. அப்படி ஒரு பூரணம் வரும்போது அவர் நம்மை தம்மிடமாய் எடுத்துக் கொள்வார். அவரைப் பற்றிய பூரண அறிவு என்பது ஆவிக்குரிய வாழ்க்கையில் நாட்கள் செல்லச் செல்லத் தான் வரும். நாம் அனைவருமே அந்த நிலைமைக்கு நேராய் சென்று கொண்டிருக்கிறோம். ஆதிமுதல் இருக்கிறவரை அறிவதற்கும் அவரைப் பற்றி அறிவதற்கும் வித்தியாசம் உண்டு.

         நம் அனைவருக்குமே நமது பிரதமர் மற்றும் முதல்வரைத் தெரியும். அவர்களுக்கு நம்மைத் தெரியுமா? தெரியாது. நாம் தெரிந்திருப்பதெல்லாம் அவர்களைப் பற்றி தான்; அவர்களை அல்ல. அவர்களுக்கோ தனிப்பட்ட முறையில் நம்மையும் தெரியாது; நம்மைப் பற்றியும் தெரியாது. நாம் அவர்களைப் பற்றி அறிந்திருப்பதெல்லாம் கேள்விப்படும் செய்திகள், வாசிக்கும் புத்தகங்கள் மூலம் மட்டுமே. அவர்களை நாமும் அவர்கள் நம்மையும் அறிந்திருக்க வேண்டுமெனில் அவர்களுடன் நெருங்கிப் பழகியிருக்க வேண்டும்; அன்றாடம் தொடர்பில் இருக்க வேண்டும். அதுபோலவே நாமும் ஆதிமுதல் இருக்கிறவரை அறிந்திருக்கிற வேண்டுமென்றால், வாரவாரம் சபைகளில் செய்திகளைக் கேட்டால் மட்டும் போதாது; வேதாகமத்தை வாசித்தால் மட்டும் போதாது. அவருடன் ஜெபத்தில் பேச வேண்டும்; அன்றாடம் உறவாட வேண்டும். நாமும் தேவனும் இருவருமே இருவழித்தொடர்பில் தொடர்ந்து, அவருடன் நாம் ஐக்கியத்தில் நிலைகொண்டிருக்கும் போது தான், நாம் அவரை முழுமையாக அறிய முடியும்; ஆவிக்குரிய வாழ்க்கையில் முன்னேறி பிதாக்கள் என்ற முதிர்ச்சி நிலையை அடைய முடியும்.

வாலிபர்களுக்கு எழுதும் காரியங்களை அடுத்த இதழில் காணலாம்.

[பாலைவனச் சத்தம் - செப்டெம்பர் 2016 இதழில் வெளியான எனது கட்டுரை]





Saturday, October 01, 2016

காண்கிறதினால் … கேட்கிறதினால் …

முன்னெப்போதும் இருந்திராத அளவுக்கு வளர்ந்துள்ள தகவல் பரிமாற்ற ஊடகங்களின் பரிணாம வளர்ச்சியை உற்றுநோக்கும் போது நமக்கு வியப்பாக இருப்பதுடன் இது எங்கே போய் முடியுமோ என்று ஒருவித பயமும் நம்மைத் தொற்றிக் கொள்கிறது. இது குறித்து 2600 வருடங்களுக்கு முன்னரே முன்னறிவிக்கப்பட்டிருப்பது (தானி. 12:4) இது கடைசிக்காலம் என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது.  தகவல் பரிமாற்ற ஊடகம் 15ம் நூற்றாண்டில் அச்சு வடிவமும் பின்னர் படிப்படியாக ரேடியோ, தொலைபேசி, தொலைக்காட்சி, சினிமா என ஒலி ஒளி வடிவம்  பெற்று, தற்போது இவையனைத்தும் இண்டர்நெட் மூலம் ஒருன்கிணைந்து கையடக்க செல்போன் மூலம் நம் பாக்கெட்டிற்குள்ளேயே வந்துவிட்டன. மேலும் தற்போது சமூக வலைத்தொடர்புகள் தளங்கள் மூலம் இவை அனைவரையும் எளிதில் சென்றடைகின்றன.

இது போன்ற வளர்ச்சி, சமுதாயத்தில் கண்கூடான பல முன்னேற்றங்களுடன் தனிநபர்  வாழ்க்கையிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், அதிக ஞானத்திலே அதிக சலிப்புண்டு; அறிவுபெருத்தவன் நோவுபெருத்தவன் (பிர. 1:18). இவற்றை ஏற்கனவே ஞானியாய் இருந்து தன் வாழ்க்கை அனுபவத்தின் மூலம் நமக்கு போதிக்கும் சாலமோனின் பிரசங்கி புத்தகத்தின் முகவுரை (பிரசங்கி 1:8-11) மற்றும் முடிவுரைப் பகுதி (பிரசங்கி 12: 12-14) பகுதிகளிலிருந்து இங்கே நாம் ஆராயலாம்.

1) காண்கிறதினால் கண்: [Visual Media] – 1:8a

ஐம்புலன்களில் பார்வையே பிரதானம். ஒளியுடன் ஒலியும் கூடிவரும்போது அது ஒருவரை வெகுவாகக் கவர்ந்துவிடுகிறது. இருப்பினும் காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை, கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை (பிர. 1:8) என்பது சாலமோனின் அனுபவம். பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; அதுபோல மனுஷனுடைய கண்களும் திருப்தியாகிறதில்லை (நீதி. 27:20) என்பதும் அவரது கூற்று. கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும்; உன் கண் கெட்டதாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும். ஆகையால் உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு (நீ காண்பவைகளைக் குறித்து) எச்சரிக்கையாயிரு (லூக்கா 11:34,35) என்றார் இயேசு. எனவே ஊடக பயன்பாட்டில் தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன் (சங். 101:3) என்பது நமது தீர்மானமாக இருக்க வேண்டும்.

2) கேட்கிறதினால் செவி:  [Audio Media] – 1:8b
உலகில் இசைக்கு மயங்காத உயிரியே இல்லை என்பர். நாம் ரசிக்கும் இசையுடன் கூடிய பாடல்கள் எந்த விதத்திலும் துன்மார்க்கத்திற்கு ஏதுவாக நம்மை நடத்தாமல், புத்திமதிகள் நிறைந்து பக்தியில் பெருகிட உதவுபவையாக இருக்க வேண்டும் (கொலோ 3:16).   தொலைபேசி பயன்பாட்டிற்கான செலவுகள் தற்சமயம் வெகுவாக குறைந்து விட்டமையால் அவசியமின்றி நாம் பயன்படுத்தலாகாது. அதில் நாம் செலவிடும் நேரமும் ஒரு பொன்னான செலவினமே. மட்டுமல்லாமல், சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது (நீதி. 10:19) என்ற வசனத்தை மனதிற்கொண்டு, சொல்லவந்த விஷயத்தை பகிர்ந்து சுருக்கமாக உரையாடலை முடித்துக் கொள்வது நல்லது. அதிலும் எதிர்பாலருடன் பேசும்போது கவனம் தேவை. மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும் (1 கொரி 15:33).

3) புத்தகங்களுக்கு முடிவில்லை: [Print Media] – 12:12
வாசிப்புப் பழக்கம் ஒரு நல்ல விஷயம் என்பது மறுப்பதற்கில்லை. அதே வேளையில் அநேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை என்ற உண்மையை உணர்ந்து கொள்ளும் போது தான் நமக்கு இருக்கும் குறுகிய காலத்தை மிகவும் பிரயோஜனமாக பயன்படுத்த முடியும். நம் வாழ்க்கையில் இதுவரையும் பாடப்புத்தகங்கள் உட்பட பலநூறு புத்தகங்களைப் படித்துவிட்ட நாம் பரிசுத்த வேதாகமத்தை ஒருமுறையாவது முழுமையாக படித்திருக்கிறோமா? ’இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார் (யோவா. 20:30), இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன் (யோவா. 21:25)’ என்கிறார் அவரது முதன்மைச் சீடர். அப்படியானால், இருக்கும் வாசிப்பு ஆர்வத்தில், எழுதப்பட்ட வேதாகமத்தை எவ்வளவு அருமையாய் கருதி நாம் படிக்க வேண்டும். 

4) நூதனம் எதுவுமில்லை: [Sharing / Forwarding] – 1:9-11
தகவல் பரிமாற்றங்கள் பரவலாகி விட்ட பின்னர், முன்பு சாமானியரின் கையில் கிடைப்பதற்கரிய தகவல்களெல்லாம் இப்போது மிகவும் எளிதாக கிடைத்துவிடுகின்றன. தகவல் ஒன்றைக் கண்டவுடன் அது நமக்கு நூதனமாக தெரிவதால், மற்றவர்களுக்கும் தெரியட்டுமே ஏன்ற நல்லெண்ணத்தில் அவற்றை பகிர்ந்து கடத்துகிறோம். ஆனால், உண்மையில் அவற்றில் நூதனம் எதுவுமில்லை. முன் நடந்ததே இப்பொழுதும் நடக்கிறது; இனி நடக்கப்போகிறதும் முன்னமே நடந்தது (பிர. 3:15). எனவே பரபரப்பு செய்திகளை அடுத்தவருக்கு பகிர்ந்து கடத்துவதிலும் பரமனின் நற்செய்தியை ஞானமாய் கடத்துவதில் நாம் கவனம் செலுத்தலாம்.

5) நியாயத்தீர்ப்பு நிச்சயம்: [Accountable Responsibility] 12:13,14
ஊடக பயன்பாட்டில் நமது ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார். ஊடகங்கள் யாவும் அடிப்படையில் நடுநிலையான தொடர்பு சாதனங்கள்; அவை தன்னகத்தே நன்மையாகோ தீமையாகவோ இருப்பதில்லை. அதை பயன்படுத்தி ஒருவர் கடத்தும் தகவல்களின் தன்மையின் மூலம் தான் அது நல்ல அல்லது தீமையான சாதனமாக மாறுகிறது. கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று முன்னறிவிக்கப்பட்டவைகளின் (2 தீமோ 3:1-5) நிறைவேறுதலுக்கு உறுதுணையாக இன்றைய தகவல் பரிமாற்ற ஊடகங்கள் இருந்துவருகின்றன. அதற்காக நாம் அவற்றை ஓரங்கட்டி விடாமல் நமது நேரம், பொருள், திறமை தாலந்துகளைப் பயன்படுத்தி நித்தியஜீவனுக்கான மீட்பின் நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவித்திட, ஊடகங்களை முறையாக கையாள நாம் கவனம் செலுத்தலாம். ஏனெனில், நன்மையானதைச் செய்தால் நமக்கு நியாயத்தீர்ப்பில் பலன் கிடைக்கும்.


ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் 
தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள். (1 கொரி. 10:31).

[இது தரிசனச்சுடர் அக்டோபர் 2016 ல் வெளிவந்துள்ள  ஊடக பயன்பாடுகள் குறித்த
எனது வேத ஆராய்ச்சிக் கட்டுரை]

Sunday, August 07, 2016

FRIENDSHIP DAY SPECIAL BIBLE VERSES

IMPORTANCE OF FRIENDSHIP:

Ecclesiastes 4:9-10
Two are better than one because they have a good return for their labor. For if either of them falls, the one will lift up his companion. But woe to the one who falls when there is not another to lift him up.

Proverbs 27:17
Iron sharpens iron, So one man sharpens another.

Proverbs 27:9
Oil and perfume make the heart glad, So a man's counsel is sweet to his friend.

Proverbs 20:6
Many a man proclaims his own loyalty, But who can find a trustworthy man?

Proverbs 27:5-6
Better is open rebuke Than love that is concealed. Faithful are the wounds of a friend, But deceitful are the kisses of an enemy.


HOW TO CHOOSE FRIENDS:

Proverbs 12:26
The righteous is a guide to his neighbor, But the way of the wicked leads them astray.

Proverbs 13:20
He who walks with wise men will be wise, But the companion of fools will suffer harm.

Proverbs 22:24-25
Do not associate with a man given to anger; Or go with a hot-tempered man, Or you will learn his ways And find a snare for yourself.

1 Corinthians 15:33
Do not be deceived: "Bad company corrupts good morals."


HOW TO TREAT FRIENDS:

Proverbs 16:28
A perverse man spreads strife, And a slanderer separates intimate friends.

Proverbs 17:9
He who conceals a transgression seeks love, But he who repeats a matter separates intimate friends.

Proverbs 17:17
A friend loves at all times, And a brother is born for adversity.

Proverbs 18:24
A man of too many friends comes to ruin, But there is a friend who sticks closer than a brother.

1 Corinthians 10:24
Let no one seek his own good, but that of his neighbor.

John 15:13
"Greater love has no one than this, that one lay down his life for his friends.


Jesus: You are my friends if you do what I command. John 15:14.

Saturday, May 07, 2016

நம்பிக்கைக்கு உரிய கர்த்தர்

கிறிஸ்துவில் மிகவும் பிரியமுள்ள சகோதர சகோதரிகளே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்களுக்கு என் வாழ்த்துதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு மாத இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் கர்த்தருடைய வார்த்தையை வாசிக்கப்பட்ட சங்கீத பகுதியிலிருந்து உங்கள் மத்தியில் பகிர்ந்து கொள்ளும் படியாக தேவன் எனக்குக் கொடுத்த இந்த வாய்ப்புக்காக அவருக்கு நன்றி செலுத்துகிறேன்.

சங்கீதம் 146 ஐ ஒரு மாதத்திற்கு முன்னர் எனது தியான வேளையில் தியானித்துக் கொண்டிருக்கும் போது நான் கற்றுக் கொண்ட ஆவிக்குரிய காரியங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்தநாள் ஆராதனை திருவிருந்து ஆராதனையாக இருப்பதால், இந்த சங்கீத பகுதிமூலம் மட்டுமே நமக்கு இந்த வாரத்திற்குரிய ஆவிக்குரிய உணவை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. எனவே கவனமுடன் ஆண்டவருடைய வார்த்தையைக் கற்றுக்கொள்ள நமது சிந்தையை அர்ப்பணிப்போம்.

இந்த சங்கீதத்தை நமது சிந்தனைக்காக மூன்று பகுதிகளாக பிரித்துக் கொள்ளலாம்.

1. கர்த்தரை துதித்தல் (வச. 1, 2)
2. கர்த்தரை நம்புதல் (வச. 3-5)
3. கர்த்தர் நம்பிக்கைகுரியவர் (வச. 6-10)

1. கர்த்தரை துதித்தல் (வச 1, 2):

இங்கே சங்கீதக்காரன் கர்த்தரைத் துதிப்பது குறித்து விபரமாக அறிகிறோம். என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி என தனக்குத்தானே சொல்லிக்கொண்ட அவன், நான் உயிரோடிருக்குமட்டும் கர்த்தரைத் துதிப்பேன், நான் உள்ளளவும்என் தேவனைக் கீர்த்தனம் பண்ணுவேன் என்கிறான். உயிரோடிருக்குமட்டும்… உள்ளவும் என்ற வார்த்தைகள் எவ்வளவு காலம் வரையும் கர்த்தரைத் துதிப்பது என்பதைக் குறிக்கிறது. உயிரோடு இருக்கும் மட்டும், உயிர் உள்ளளவும். உயிர் பிரிந்த பின்னர் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள் என்று சங். 115: 17ல் சொல்லப்பட்டிருக்கிறது.

உயிரோடு உள்ளமட்டும் என்பது ஆங்கிலத்தில், as long as I live என கூறப்படுகிறது. அது as long as I live comfortably, as long as I live happily, as long as I live in prosperity என எந்தவொரு நிபந்தனையுடனும் கூடியதாக இல்லை. உயிரோடிருக்குமட்டும்… உள்ளவும் என்ற வார்த்தைகள் எவ்வளவு காலம் என்பது மட்டுமே; நிபந்தனைகளுடன் கூடிய செயல்பாடு அல்ல. உள்ளளவும் என்ற வாத்தையுமே உயிர் உள்ள அளவு கால அளவைத் தான் குறிக்கிறது. வசதி வாய்ப்புகள் உள்ளளவும், கார், வீடு பங்களா உள்ளளவும் என்ற நிபந்தனைகள் எதையும் அவன் விதித்துக் கொள்ளவில்லை. கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும் என்ற அவனுடைய வார்த்தை (சங். 34:1) இந்த ஆவிக்குரிய கருத்தை மேலும் உறுதி செய்கிறது.

2. கர்த்தரை நம்புதல் (வச. 3-5):

இந்த சங்கீதக்காரனால் எப்படி எக்காலத்திலும், உயிரோடிருக்குமட்டும் தேவனைத் துதிக்க முடிகிறது? காரணம் அவன் தேவனாகிய கர்த்தர் மேல் தன் நம்பிக்கையை வைத்திருந்தான். மட்டுமல்ல, பிரபுக்களையும் இரட்சிக்க திராணியில்லாத மனுபுத்திரரையும் நம்பாதேயுங்கள் எனவும் அறிவுரையும் கூறுகிறான் (வச. 3). ஏன் நாம் அவர்களை நம்பக் கூடாது?

முதலாவதாக,
அவர்கள் இரட்சிக்க (உதவி செய்ய) திராணியில்லாதவர்கள்.

இரண்டாவதாக,
அவனுடைய ஆவி பிரியும். அதாவது அவன் திடீரென ஒருநாள் இறந்து போவான். அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான். அதாவது, இறந்து மண்ணோடு மண்ணாக மட்கி மறக்கப்பட்டே போவான்.

மூன்றாவதாக,
அவன் இறக்கும் அந்த நாளில் அவன் நம்மைக் குறித்து, நமக்காக வைத்திருந்த யோசனைகள், திட்டங்களெல்லாம் அழிந்து போகும். 
ஆனால், யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான் (வச. 5). கர்த்தரை சந்தேகமே இல்லாமல் நம்புவதற்கு என்னென்ன காரணங்கள் என்பது பின்வரும் வசனங்களில் குறிப்பிடப்படுகிறது.

3. கர்த்தர் நம்பிக்கைக்கு உரியவர் (வச. 6-10):

முதலாவதாக, தேவனே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அதிலுள்ள யாவையும் உண்டாக்கினவர். பிரபுக்கள், பொறுப்பிலுள்ள மனுஷர்கள் தங்கள் திறமையாலோ அடுத்தவர் கருணையாலோ அல்லது தேவனுடைய கிருபையாலோ அந்த பொறுப்புக்கு வந்தவர்கள். தேவனோ அனைத்தையும் படைத்தவர் (வச. 6). எனவே அனைத்திற்கும் அதிபதி.

இரண்டாவதாக,
மனுபுத்திரரின் பொறுப்புகள் பதவிகள் திடீரென மாறிப் போகலாம்; அவன் ஆவி ஒருநாள் பிரியும். கர்த்தர் சதாகாலங்களிலும் அரசாள்கிறார். நாம் நம்பின மனுபுத்திரர் நம் கண்முன்னே, அதாவது நமது தலைமுறையிலேயே திடீரென இறந்துபோவர். தேவனோ தலைமுறை தலைமுறையாய் ராஜரீகம் பண்னுகிறார் (வச. 10).

மூன்றாவதாக,
அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர் (வச. 6). மனுபுத்திரர் இடையிலே வாக்குமாறலாம் அல்லது அவன் இறக்கும் நாளிலே அவன் நம்மிடம் கொடுத்திருந்த வாக்குறுதிகள், நமக்காக வைத்திருந்த திட்டங்களெல்லாம் அழிந்து போகும். கர்த்தரோ  உண்மையைக் காக்கிறவர்; சொன்ன வாக்கு மாறாதவர்.

ஒருவர்மீது நமக்கு நம்பிக்கை திடீரென வந்துவிடுவதில்லை. முன் அனுபவம், கண்கூடாக நாம் கண்டறிந்த காரியங்கள், இவை தான் மேற்கொண்டும் அவரை நம்பும்படிச் செய்கிறது. தேவனும் அவ்விதமே தனது பண்புகள் செயல்பாடுகள் மூலம் தனது நம்பகத்தன்மைக்கு இன்னும் நம்பிக்கையூட்டுகிறார். வசனங்கள் 7-9 ன் படி, அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்; கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார்குருடரின் கண்களைத் திறக்கிறார்; மடங்கடிக்கப்பட்டவர்களைத் தூக்கிவிடுகிறார்; நீதிமான்களை சிநேகிக்கிறார்; பரதேசிகளைக் காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்.

இது தேர்தல் காலம். தமிழ்நாடு, கேரளாவில் இந்த மாதம் சட்டமன்றத் தேர்தல்கள் நடக்க இருக்கின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கைகளில் அள்ளி வழங்குகின்றனர். அவர்களை எப்படி நம்புவது? ஆளும் கட்சியாக இருந்தாலும் ஆண்ட கட்சிகளாக இருந்தாலும் தங்கள் ஐந்தாண்டு காலத்தில் என்ன செய்தார்கள் செய்ய தவறினார்கள் என்பதை வைத்து தான் மேற்கொண்டு வாக்குறுதிகளை நிறைவேற்றும் நம்பிக்கைக்கு உரியவர்களா இல்லையா என நாம் தீர்மானிக்க முடியும். அதுபோலவே, ஒடுக்கப்பட்டவர்கள், பசியாயிருக்கிறவர்கள், கட்டுண்டவர்கள், குருடர், மடங்கடிக்கப்பட்டவர்கள், பரதேசிகள், திக்கற்ற பிள்ளைகள் மற்றும் விதவைகள் என வாழ்க்கையில் நம்பிக்கையற்றவர்களுக்கு ஒரு நம்பிக்கையாக இருப்பதன் மூலம் தேவன் நமக்கும் நம்பத்தகுந்தவர் என்ற நம்பிக்கை மேலும் வலுவடைகிறது.

குறிப்பாக துன்மார்க்கரின் வழியைக் கவிழ்த்துப் போடுகிறார் என்பது அவருடைய முக்கியமான ஒரு பண்பு. தேர்தல் காலங்களில் அனைத்து கூட்டணியினரும் அள்ளிவீசும் வாக்குறுதிகளையும் உற்றுப் பார்க்கும்போது, யார் ஆட்சிக்கு வந்தாலும் பிரச்சினையே இல்லை; நல்லது தானே நடக்கப் போகிறது என நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் அவர்கள் செய்யும் நலத்திட்டங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு ஊழலற்ற நேர்மையான அரசாக இருந்தால் மட்டுமே அதன்மீது மக்களின் நம்பிக்கை இன்னும் பெருகும். அந்த பண்பினை தேவன் தன்னகத்தே கொண்டிருக்கிறார். நீதிமான்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார் (வச. 8); துன்மார்க்கரின் வழியையோ கவிழ்த்துப் போடுகிறார் (வச. 9).


எனவே, உலகத்தில் உள்ள எந்த மனுஷனையும் அதிகாரியையும் அரசாங்கங்களையும் காட்டிலும் தேவன் நிச்சயம் நம்பப்படத்தக்கவர். யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான் (வச. 5). இந்த பாக்கியமான அனுபவத்துக்கு நம்மை தைரியமாய் அர்ப்பணிப்போம். கர்த்தருடைய ஆசீர்வாதங்களைப் பெற்று அனுபவிப்போம். ஆமென். 


[இது நான் 06.05.2016 அன்று PCI Church Kuwait ல் தமிழில் பகிந்து கொண்ட சங்கீதப் பகுதி. செய்தி மலையாளத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டது]

Thursday, March 31, 2016

அப்படியானால், நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமான ஹெப்ரோன் IPC (Tamil) பஹரைன் சபையினருக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எனது வாழ்த்துதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாளில் நாங்கள் குடும்பமாக பஹரைன் நாட்டில் எங்கள் உறவினர்களையும், பார்க்க வேண்டிய சில இடங்களையும் சுற்றிப் பார்க்க வந்த இடத்தில், ஆண்டவருடைய செய்தியை உங்களிடத்தில் பகிர்ந்து கொள்ளும் படியாக, ஆண்டவர் கொடுத்த இந்த வாய்ப்புக்காக நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறேன். இந்த நாளில் செய்தி அளிக்கும்படியாக எனக்கு மூன்று வாரங்களுக்கு முன்னரே அழைப்பு கொடுக்கப்பட்டிருப்பினும், மூன்று நாட்களுக்கு முன்னர் வரையும் நான் இன்றைய செய்தியை இறுதி செய்யவில்லை. என்ன செய்தியை பகிரவேண்டும் என நான் ஜெபித்து ஆயத்தப்பட்ட போது, இந்த வாரத்தில் எனது தியானத்தில் இருந்த ஒரு கதாபாத்திரம் மூலம் தேவ செய்தியை பகிர்ந்து கொள்ள முடிவு செய்தேன். அந்த கதாபாத்திரம் தான் யோவான் ஸ்நானகன்.    


யோவான் ஸ்நானகனுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் பிறப்பு முதல் இறப்பு வரை அத்தனை ஒற்றுமைகள் உண்டு. இருவரும் உறவினர்கள்; இருவருக்கும் ஆறு மாதங்கள் தான் வயது இடைவெளி; இருவரின் பிறப்பும் முன்னறிவிக்கப் பட்டது. ஒருவருக்கு அவருடைய அப்பாவுக்கு; இன்னொருவருக்கு அவருடைய அம்மாவுக்கு. அந்த இருவருமே சந்தேகப்பட்டனர். இருவருக்கும் தேவதூதன் அடையாளம் மூலம் சந்தேகத்தை நிவிர்த்தி செய்தான். இருவருக்குமே பெயர் முன்னறிவிக்கப்பட்டது; இருவருக்குமே அவ்விதமே பெயரிட்டனர். இருவருமே ’மனந்திரும்புங்கள்; பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது’ என்று ஒரே பிரசங்கத்தையே செய்தனர். இருவரும் ஒருவரையொருவர் உயர்த்தி பேசினர். இவர் தான் அவரோ, அவர் தான் இவரோ என இருவரையும் குறித்து மற்றவர்களுக்கு சந்தேகமே எழுந்தது. அந்த அளவுக்கு இருவரும் வல்லமையான ஊழியம் செய்தனர். இருவருமே தங்கள் பிரசங்கத்தினால் தான் மரணத்தை தழுவ நேர்ந்தது. இருவரையும் மரணத்துக்கு ஒப்புக்கொடுத்தவர்களும் இவ்விருவரும் குற்றமில்லாதவர்கள் என்பதை ஒத்துக் கொண்டனர். இருப்பினும் இவ்விருவரும் தங்கள் சொந்த உயிருக்கு அஞ்சி இவர்களை மரணத்துக்கு ஒப்புக் கொடுத்தனர். யோவான் சிரச்சேதம் செய்யப்பட்டு மரித்து அடக்கம் பண்ணப்பட்டார். இயேசுவோ சிலுவையில் அறையப்பட்டு மரித்து அடக்கம்பண்ணப்பட்டு, மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார். இன்றைக்கும் ஜீவிக்கிறார். இதனையே இன்று (25.03.2016 வெள்ளிக்கிழமை) உலகம் முழுவதிலும் புனித வெள்ளியாக நினைவு கூறுகிறார்கள்.

இன்று எனது செய்தியின் மையம் யோவான் ஸ்நானகன் அல்ல; அவனுடைய பிரசங்கத்தினிடையே திரும்பத் திரும்ப எழுப்பப்பட்ட ஒரு கேள்வியை மையமாகக் கொண்டது. அந்த கேள்வி யாதெனில், “அப்படியானால், நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” இது பாவத்தைக் குறித்து உணர்வடைந்தவர்கள் சிலர் யோவான் ஸ்னானகனிடம் கேட்ட கேள்வி. இது அவரிடம் மூன்று விதமான மக்கள் தனித்தனியாக கேட்ட கேள்வி, அதாவது மூன்று தடவை கேட்கப்பட்டது. இதுபோன்று ’நான் / நாங்கள் என்ன செய்ய வேண்டும்’ என்ற கேள்வி இன்னும் ஐந்து இடங்களில் வேதாகமத்தில் இடம் பெற்றுள்ளது. மொத்தம் எட்டு இடங்களில் எழுப்பப்பட்டும் இந்த கேள்வியின் பின்னணி ஐந்து இடங்களில் ஒரே விதமாக இருக்கிறது. மற்ற மூன்று இடங்களில் அந்த கேள்விகளின் பின்னணி மற்றும் (உள்)நோக்கம் வித்தியாசமாக இருப்பதால், அந்த ஐந்து கேள்விகளின் பின்னணி, அந்த கேள்விகளுக்காக பதில்கள், அதன் பின் விளைவுகள் குறித்து மட்டும் நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
  
வேதாகமத்தின் மையச்செய்தியே “மனந்திரும்புதல்” தான். இதைத் தான் யோவான் தனது செய்தியாகக் கொண்டிருந்தான் (மத். 3:2). இயேசு கிறிஸ்துவின் முதல் செய்தியும் அதுவாகவே இருந்தது (மத். 4:17). இயேசு கிறிஸ்துவின் பன்னிரு சீடர்களும் புறப்பட்டுப் போய் அவ்விதமே பிரசங்கம் செய்தனர் (மத். 6:12). அந்த பிரசங்கம் செய்த இவர்கள், எந்த ஒரு இடத்திலும் பூசி மொழுகி வழமையாக பேசவில்லை. யோவான் ஸ்நானகன் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படிக்குப் புறப்பட்டுவந்த திரளான ஜனங்களை நோக்கி: விரியன்பாம்புக்குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகை காட்டினவன் யார்? என்று தயக்கமில்லாமல் கேட்டான் (லூக்கா 3:7). இயேசுவும் தனது பிரசங்கத்தில் சர்ப்பங்களே, விரியன்பாம்பு குட்டிகளே என்று சாடத் தயங்கவில்லை. அந்த விதமான பிரசங்கத்தில் தான் வல்லமை புறப்பட்டு வந்தது. அநேகர் மனமாற்றம் அடைந்தனர்.

நாங்கள் என்ன செய்ய வேண்டும்? இந்த கேள்விகளின் பின்னணி, இவற்றிற்கான பதில்கள், இதன் பின்விளைவுகளை சற்று விபரமாக ஆராய்வோம். முதலில் அந்த வேதபகுதிகளை நாம் வாசித்து விடுவோம். அதற்கு முன்னர் நான் ஒருசில கேள்விகளை உங்கள் மத்தியில் எழுப்ப விரும்புகிறேன். இங்கு கூடியிருக்கும் உங்களிடம் நீங்கள் கிறிஸ்தவரா என கேட்டால், அதிலென்ன சந்தேகம், பலவருடங்களாக சபையாக கூடி வருகிறோமே என்பீர்கள். அவ்விதமே, நீங்கள் இரட்சிக்கப் பட்டிருக்கிறீர்களா என்றால், உங்களில் சிலர் தலையைச் சொறிந்து கொண்டும், சிலர் சற்று தைரியத்துடன்… நீங்கள் எதை mean பண்ணுகிறீர்கள் என கேள்விகேட்கவும் ஆரம்பிப்பீர்கள். ஏனென்றால், அதைக் குறித்த தெளிவு நம்மில் அநேகருக்கு இல்லை; பலரும் பலவிதமாக அதனைப் புரிந்து கொண்டிருக்கிறோம். சிலருக்கு அது ஒரு நாள் அனுபவம்; பலருக்கு அது நெடுகாலம் கடந்து ஒருகட்டத்தில் இரட்சிப்பின் நிச்சயம் பெறுகின்ற அனுபவமாக இருக்கிறது. இந்த கேள்வியையே, நீங்கள் திருமணம் ஆனவரா என்று கேட்டால், எந்த தயக்கமும் இல்லாமல் உரிய பதிலைச் சொல்லுவோம். சிலருக்கு அது கண்டதும் காதலாக இருக்கலாம்; பலருக்கு தாங்களோ, பெற்றோரோ பல வருடங்கள் யோசித்து எடுத்த முடிவாக இருக்கலாம். எதுவாயினும், திருமணம் என்ற நிகழ்ச்சியில், அதிலும் குறிப்பாக அரசாங்க சட்டதிட்டங்களுக்குட்பட்டு, திருமணப் பதிவேட்டில் பெரியவர்கள் முன்னிலையில் இருவரும் கையெடுத்திடும் நிகழ்வில் அது உறுதி செய்யப்படுகிறது. அவ்விதமே, இரட்சிப்பின் அனுபவமும் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியில் உறுதி செய்யப்படுகிறது. அதனை இன்று நாம் புரிந்து கொள்ள இருக்கிறோம்.

இப்போது நமது தியானத்திற்கான வேதபகுதிகளை வாசிப்போம். லூக்கா 3:6-14; அப்போஸ்தலர் 2:37-41; மற்றும் அப்போஸ்தலர் 16:25-33.

முதல் மூன்று கேள்விகளின் பின்னணி (லூக்கா 6:6-9):

வசனம் 6. அவன் யோர்தான் நதிக்கு அருகான தேசமெங்கும் போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கித்தான். வசனம் 7b. வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகை காட்டினவன் யார்? வசனம் 8a. மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; வசனம் 9. இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்றான்.

முதல் மூன்று கேள்விகளின் பதில்கள் (லூக்கா 3:10-14):

முதல் கேள்வி: லூக்கா 3:10-11. அப்பொழுது ஜனங்கள் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன் என்றான்.

அப்படியானால் நாங்கள் என்ன செய்ய வேண்டும்? எப்படியானால்?.... பின்னணியைப் பார்த்தோமானால், முக்கிய வார்த்தைகள் பாவமன்னிப்பு, மனந்திரும்புதல், கோபாக்கினைக்கு தப்புதல், மனந்திரும்புதலுக்கேற்ற கனி, கோடாரி ஆகியவை. பாவத்தைக் குறித்த உணர்வடைத்து விடுதலையடைய விரும்பியவர்களே இந்த கேள்வியைக் கேட்டனர். பதில் என்னவாய் இருந்தது? இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன். 



நாமெல்லாரும் தசமபாகம் பற்றி பேசுகிறோம். அது குறித்து வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா? [ஆம், மல்கியாவில்…என்று கூட்டத்திலிருந்து ஒரு பதில்]. ஆம். அது மல்கியாவோடு முடிவு பெற்றது. நாட்டின் நிர்வாகத் தேவைகளுக்கான பணத்திற்காக வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை வரியாக நாம் செலுத்துவது போன்றே, பழைய ஏற்பாட்டுக் காலத்தில் யூதர்களுக்கு ஒரு நியமமாக கூறப்பட்டது. புதிய ஏற்பாட்டில் அது கூறப்படுவதே இல்லை. அப்படியானால், ஆண்டவருக்காக கொடுக்க வேண்டாமா? கண்டிப்பாக கொடுக்க வேண்டும். அப்படியானால், எவ்வளவு? யோவான் ஸ்நானகனுடைய கூற்றுப்படி ஐம்பது சதவிகிதம்! ஒத்துக் கொள்ள முடிகிறதா? அதனால் தான் அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார் என்கிறார் பவுல் (II கொரிந்தியர் 9:7). கோல்கேட் பற்பசை முதலாளி தனது வருமானத்தில் 90 சதவிகிதத்தை ஆண்டவருடைய பணிக்காக கொடுப்பதாக கூறுகின்றனர். எப்படி அவரால் முடிகிறது? அவருக்கெல்லாம் அந்த 10 சதவிகித வருமானமே அவருடைய தேவைகளுக்கெல்லாம் மிகவும் அதிகமான ஒன்று. இருப்பினும் அவ்விதம் கொடுக்கும் எண்ணம் அவருக்கு எப்படி வந்திருக்கும்? இந்த முதலாம் கேள்வி பதிலை ஆராயும் போது அதற்கான பதில் கிடைக்கும். 

இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன். இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; அதாவது இரண்டில் ஒன்றை இல்லாதவனுக்குக் கொடுத்துவிட வேண்டும். நமக்கு இருக்கும் உடைகளில் இருபதில் ஒன்றை கொடுப்பதில் எந்த தயக்கமும் இல்லை. இரண்டில் ஒன்று என்னும் போது மட்டும் ஏன் தயக்கம் வருகிறது? பண்டிகை நாட்களை முன்னிட்டு நாம் எடுக்கும் உடைகளில் இரண்டில் ஒன்றை தானமாகக் கொடுக்கவேண்டும் என்பது ஒருவேளை கட்டளையாக அல்லது நடைமுறையாக இருந்தால், நம்மில் எத்தனை பேர் நான்கைந்து உடைகள் எடுப்போம்? அதாவது நான்கைந்து உடைகளை மற்றவர்களுக்கு மனதாரக் கொடுப்போம்? நமக்கென்று எடுப்பதினால் தானே கொடுக்க வேண்டியிருக்கிறதென்று எண்னி, நாமும் அதிக உடைகள் எடுப்பதில்லை; மற்றவர்களுக்கும் கொடுப்பதில்லை. ஆனால், எப்போது இது மறுவிதமாக நடக்கும்? அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக (பிலி. 4:2) என்ற வசனத்தை மனதிற்கொண்டால் மாத்திரமே இது சாத்தியமாகும். அதாவது சுயத்துக்கு சாகும்போது மட்டுமே இது சாத்தியமாகும். அது தான் உண்மையான மனந்திரும்புதல். அந்த மனந்திரும்புதலின் கனி இவ்விதம் செயல்களில் வெளிப்பட வேண்டும் என்பது தான் யோவான்ஸ்நானகனின் ஆலோசனை. அதுவே கோல்கேட் பற்பசை முதலாளியின் செயலிலும் வெளிப்பட்டிருக்க வேண்டும்.

இரண்டாம் கேள்வி: லூக்கா 3:12-13. ஆயக்காரரும் ஞானஸ்நானம் பெறவந்து, அவனை நோக்கி: போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: உங்களுக்கு கட்டளையிட்டிருக்கிறதற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான்.

ஆயக்காரர் என்போர் ரோம ஆட்சியில் ரோமர்களுக்காக வரிவசூல் செய்யும் யூதர்கள். எனவே அவர்களை யூத வெகுஜனங்கள் மதிப்பதில்லை. ஆயக்காரரில் இருவிதமாக இருந்திருக்கின்றனர். ஒருவிதத்தினர் விதிக்கப்ப்பட்டதற்கும் அதிகமான வரியை வசூலித்து தனது வருவாயைப் பெருக்கிக் கொண்டவர்கள்; மற்றொரு விதத்தினர் விதிக்கப்ப்பட்டதற்கும் அதிகமான வரியை மக்களிடம் வசூலித்து அரசாங்கத்துக்கு செலுத்தி ஆட்சியாளர்களிடத்தில் தங்களுக்கு நற்பெயரைத் தேடிக் கொண்டவர்கள். லூக்கா 19:8,9 ன் படி, சகேயு கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்று சொல்லும் போது, இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே என்றார். அதாவது அதிகப்படியாக வசூல்செய்யும் வாய்ப்பு நிலையில் இருப்பவர்கள் தான் இந்த ஆயக்காரர்கள். எனவே தான் அப்படிப்பட்ட ஆயக்காரர்களிடம் உங்களுக்கு கட்டளையிட்டிருக்கிறதற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான் யோவான்ஸ்நானகன். சமூகத்தில் சர்ச்சைக்குரிய ஆயக்கார வேலையை விட்டுவிடும்படி அவன் அறிவுரை கூறவில்லை; மாறாக, கொடுக்கப்பட்ட வேலையை நேர்மையாக செய்துமுடிக்க அறிவுறுத்துகிறான்.

நம்மில் அநேகருக்கு மனந்திரும்புதலுக்கு தொழில் ஒரு தடையாக இருக்கிறது. இயேசுவை ஏற்றுக் கொண்டால், நான் எனது தொழிலை எப்படி செய்யமுடியும்? இந்தந்த தொழிலை செய்வோர் எப்படி மனந்திரும்பி வாழ முடியும் என சந்தேகம் கொள்கிறோம். நம்முடைய மனந்திரும்புதல் உண்மையான மனதார இருக்கும் போது, மேற்கொண்டு நாம் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும் என ஆண்டவர் நமக்குத் தெளிவாக நமது சூழலுக்கு ஏற்றவிதமாக சரியான ஆலோசனையைக் கொடுப்பார். முதலில் மனமாற்றம் நேர்மையாக இருத்தல் அவசியம்!

மூன்றாம் கேள்வி: லூக்கா 3:14. போர்ச்சேவகரும் அவனை நோக்கி: நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றான்.

ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் ... … … நான் இங்கு பஹரைன் வந்தபோது வெளியில் செல்லும் வேளையில் பாஸ்போட்டை கையில் எடுத்துக் கொள்ள வேண்டுமா என எனது உறவின சகோதரரிடம் கேட்டேன்; அதற்கு அவர், அதெல்லாம் இங்கு தேவையில்லை என்றார். அதுவே குவைத்தில் என்றால், குடியுரிமை அடையாள அட்டை கையில் இல்லாமல் வீதியில் அலைந்தால் நம்மை உடனே சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து விடுவர். அத்தனை அதிகாரம்; அத்தனை இடுக்கண். அப்படி செய்து என்ன அவர்கள் சாதித்து விட்டார்கள்? 

பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும் ... … … மாசக் கடைசியானால் கேஸ் நம்பர் தேறணுமே என்பதற்காக வாகனத்தில் செல்வோர் மீது ஏதாவது ஒரு வழக்கு பதிவது நம்மூர் போலீசாருக்கு வழக்கமாய் போய்விட்டது. இதுவெல்லாம் மனந்திரும்பிய விசுவாசியின் நடத்தைக்கு அழகல்ல.

உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் ... … … நம்மில் சிலருக்கு கிம்பளத்திலேயே வாழ்க்கையை ஓட்டிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது; சம்பளம் அப்படியே எந்த சேதாரமுமில்லாமல் வங்கிக் கணக்கில் தங்கி விடுகிறது. நாம் மனந்திரும்பியது உண்மையானால், இவ்வித வாழ்க்கை முறைக்கு இடமே இல்லை.  

முதல் மூன்று கேள்வி - பதில்களின் பின்விளைவுகள் (லூக்கா 3:15):

இவ்விதம் பதிலைக் கேட்டோர் எவரும் இது கடினமான உபதேசம் என பின்வாங்கிச் சென்றதாக தெரியவில்லை. திரளான ஜனங்கள் கூட்டம் கூட்டமாக மனந்திரும்பினர். அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டனர். ஸ்நானகன் என்பது அவனது அடைமொழி ஆயிற்று. இவன் தான் கிறிஸ்துவோ என்று யோவானைக் குறித்து ஜனங்களெல்லாரும் எண்ணம் கொள்ளும் விதமாக மிகுதியாக அறுவடையை கண்கூடாக கண்டனர்

நான்காம் கேள்வியின் பின்னணி (அப். 2:37):

அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில், பெந்தெகோஸ்தே நாளில், பெந்தெகோஸ்தே அனுபவம் விசித்திரமாய் தோன்றி பலரும் வேடிக்கை பார்க்க கூடி வந்திருக்க, பேதுரு அவர்களை நோக்கி வசனித்து அந்த நிகழ்வின் பின்னணியை முன்னிட்டு இயேசுவின் வாழ்க்கை, பாடு, மரணம், உயிர்த்தெழுதலைப் பிரசங்கித்தான். வசனம் 37. இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்.

நான்காம் கேள்வியின் பதில் அப். 2:38-40:
பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி; இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான். முக்கியமாக இரண்டு ஆலோசனைகள். ஒன்று ஞானஸ்நானம் பெறவேண்டும்; இரண்டு கிறிஸ்தவரென்ற முறையில் வேறுபாடான வாழ்க்கை வாழவேண்டும். வேறுபாடான வாழ்க்கை குறித்து பவுல் 1 கொரி. 5:9,10 ல் நடைமுறையாக விவரிக்கிறார்.

நான்காம் கேள்வி – பதிலின் பின்விளைவுகள் (அப். 2:41):
அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். ஒன்று ஞானஸ்நானம் பெற்றனர்; இரண்டு சபையில் அங்கத்தினராயினர்.

ஐந்தாம் கேள்வியின் பின்னணி (அப். 16:25-30):
குறிசொல்லும் ஆவியை துரத்தி விட்டபடியால், தங்கள் வருவாயை இழந்த எஜமானர்கள் பவுலையும் சீலாவையும் காவலில் அடைத்துவிடும் வேலைகளை கச்சிதமாக செய்துமுடித்திட, சிறைச்சாலையில் நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள். சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்றுசிறைச்சாலைக்காரன் நித்திரைதெளிந்து, சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருக்கிறதைக் கண்டு, கட்டுண்டவர்கள் ஓடிப்போனார்களென்று எண்ணி, பட்டயத்தை உருவித் தன்னைக் கொலைசெய்து கொள்ளப்போனான். பவுல் மிகுந்த சத்தமிட்டு; நீ உனக்குக் கெடுதி ஒன்றுஞ் செய்துகொள்ளாதே; நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கிறோம் என்றான். அப்பொழுது அவன் தீபங்களைக் கொண்டுவரச்சொல்லி, உள்ளே ஓடி, நடுநடுங்கி, பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பாக விழுந்து, அவர்களை வெளியே அழைத்துவந்து: ஆண்டவன்மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான்.          

ஐந்தாம் கேள்வியின் பதில் (அப். 16:31,32):
அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி, அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த யாவருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள். நீ விசுவாசித்தால், நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப் படுவீர்கள்; எப்படி இது சாத்தியம்? முதலில் விசுவாசிக்க வேண்டும்! அம்மா என்ன சொல்வார்கள்; அப்பா என்ன செய்வார்கள்; அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என கலங்கவோ தயங்கவோ வேண்டியதில்லை. அவர்களும் இயேசுவை ஒருநாள் விசுவாசிப்பார்கள் என்பதை விசுவாசிக்க வேண்டும். அந்த விசுவாசம் அந்த சிறைச்சாலைக்காரனுக்கு இருந்தபடியால் தான் இவர்கள் இருவரையும் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று இவர்களின் பிரசங்கத்தை வீட்டிலுள்ளவர்களும் கேட்கச் செய்தான்.

ஐந்தாம் கேள்வி – பதிலின் பின்விளைவுகள் (அப். 16:33):
மேலும் இராத்திரியில் அந்நேரத்திலேதானே அவன் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவனுடையவர்கள் அனைவரும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள். ஒன்று நர்செய்தி அறிவித்த ஊழியர்களுக்கு தன்னாலியன்ற உதவியைச் செய்தான்; இரண்டு தன் வீட்டாரோடு விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றான்.

இவைகளைக் கேட்டுக் கொண்டிருக்கும் சகோதர சகோதரிகளே, இந்த ஐந்து விதமாக ‘நாங்கள் என்ன செய்யவேண்டும்’ என்று கேள்வி கேட்டோரின் பின்னணி, அவற்றிற்கான பதில்கள் அவற்றின் பின்விளைவுகளை ஒருங்கே ஒப்பிட்டுப் பார்த்தால் நமக்கு ஒருசில சத்தியங்கள் தெளிவாகத் தெரியவருகின்றன. அவைகளை எடுத்துக் கூறி இந்த செய்தியை நிறைவு செய்ய விரும்புகிறேன்.   

இந்த ஐந்து கேள்விகளின் பின்னணியுமே பாவத்தைக் குறித்த ஒருவித குற்ற உணர்வு தான். பாவத்தைக் குறித்த உண்மையாக உணர்வு வரும்போது தான், அப்படியானால், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்ற நேர்மையான கேள்வி நமக்குள் எழும். நமது கேள்வியில் உண்மை இருக்கும் பட்சத்தில் தேவனும் நமக்கு நடைமுறையான பதிலை தருவார். அதனை ஏற்றுக் கொண்டு கீழ்ப்படிவது மனந்திரும்புதலின் அடுத்த கட்டம். அதுவே மனந்திரும்புதலின் வெளிப்படையான அடையாளமான ஞானஸ்நானம் எடுத்தல் என்ற சடங்காச்சாரமாகும்.

இதை ஏன் சடங்காச்சாரம் என்கிறேன்? இதனை நியமமாக கருதினால், நியமமாக கருதி நியாயமாக இதற்கு கீழ்ப்படியுங்கள்; அதுவே சடங்காச்சாரம் என கருதினால், ஒரு திருமண நிகழ்வில் அல்லது திருமண வாழ்க்கையில் அரசாங்க திருமணப் பதிவேட்டில் கணவன் மனைவி இருவரும் கையெழுத்திடும் சடங்காச்சாரம் முக்கியமோ அவ்விதமே உங்கள் மனந்திரும்புதல் உண்மையானால், இந்த சடங்காச்சாரத்தை முறையாக நிறைவேற்றிடுங்கள்; வாக்குவாதம் தேவையில்லை.    

இந்த கேள்வியைக் கேட்ட, ஐந்து கூட்டத்தினருமே, அவற்றிற்கான பதில்களுக்கு தங்களை ஒப்புக் கொடுத்து, இறுதியில் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டானர். ஞானஸ்நானம் இரட்சிப்பின் முடிவு அல்ல; அதுவே விசுவாச வாழ்க்கையின் தொடக்கம்; இரட்சிப்பு அனுபவத்தின் வெளிப்படையான அடையாளம். அது திருமண நிகழ்வில், இருவரும் கையெழுத்திடுவது போன்றது. சொல்லப் போனால், அதுவே (குடும்ப) வாழ்க்கையின் தொடக்கம்.

இவைகளை ஆராய்ந்த போது, எனக்கு ஒரு காரியம் ஆச்சரியமாகவும் இன்றைய கால கட்டத்தில் மனமடிவாகவும் இருக்கும் காரியமாக காணப்பட்டது. அது என்னவெனில், இந்த ஐந்து கூட்டத்தினரும் அந்த நாளிலே ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டனர்; ஒரு குடும்பத்தினர் இரவோடு இரவாக. ஆனால், இன்றைய நாட்களில் என்ன நடக்கிறது? இரட்சிக்கப் பட்டோம் என சொல்லிக் கொள்வோர் ஞானஸ்நானம் பெற எத்தனை காலங்களைக் கடத்துகிறோம்? எனக்கு உடனே ஞானஸ்நானம் கொடுங்கள் என்று நாமும் கேட்பதில்லை; கேட்டாலும் போதகர்கள் உடனே கொடுத்து விடுவதும் இல்லை. ஏன் இந்த நிலைமை? நமது இரட்சிப்பு குறித்து இருதரப்பினருக்குமே சந்தேகம்; அதனை உறுதி செய்து இறுதி செய்ய சிலகாலம் எடுக்கிறது. சிலவேளைகளில் அது பலவந்தம் பண்ணப்பட வேண்டியுள்ளது. 

அதற்கு என்ன காரணம்? நமது நற்செய்திக் கூட்டங்களில் விரியன் பாம்புக் குட்டிகளே என்று யோவான் ஸ்நானகன் போன்றோ, இயேசுகிறிஸ்து போன்றோ மக்களை அழைப்பதில்லை. மாறாக மக்களுக்கும் அரசுக்கும் பயந்து மேற்போக்காகவோ, பூசி மொழுகியோ நற்செய்தியை அறிவிக்கிறோம். நற்செய்தி என்றால், பாவத்தைக் குறித்த கண்டிப்பு, அதில் எழும் குற்ற உணர்வு, அதிலிருந்து இயேசு கிறிஸ்து தரும் விடுதலை, தொடர்ந்து அவர் தரும் பரிசுத்த வாழ்வு, இறுதியில் நித்தியஜீவன். இதை விட்டுவிட்டு, தலைவலி காய்ச்சல் முதல் கான்சர் வரையிலும் நோயிலிருந்து விடுதலை, பேயிலிருந்து விடுதலை, கடனிருந்து விடுதலை, வாழ்க்கை எல்லாமே இனி செழிப்பு என நாம் அறைகுறையான செய்தியை பகிர்வதால், நாம் எதிர்பார்க்கும் மனந்திரும்புதல் அங்கே ஏற்படுவதில்லை; மாறாக, ஏமாற்றம், விரக்தி தான் சிலருக்கு ஏற்படுகிறது. பாவத்தை குறித்த உணர்வு அடைவோருக்கும் யோவான் ஸ்நானகன் போன்று வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பிரசங்கிக்க முடிகிறதா? ‘மனந்திரும்புங்கள்; பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது’ என்பது தான் நமது செய்தியாகவும் இருக்க வேண்டும். 


இங்கு கூடியிருக்கும் நாம், ஜெபசிந்தையுடன் இன்று நமது வாழ்க்கையை ஆராயந்து பார்ப்போம். இரட்சிப்பின் நிச்சயம் நமக்கு உண்டா? அதனை உறுதி செய்யும் ஞானஸ்நான நியமத்தை நிறைவேற்றி விட்டோமா? மனந்திரும்புதலுக்கேற்ற கனி நம்மிடத்தில் காணப்படுகின்றனவா? நம்மை நாமே ஆராய்ந்து பார்த்து, அப்படியானல் நான் என்ன செய்யவேண்டும் என நமக்குள் கேள்வியை எழுப்பிக் கொண்டு, ஆவியானவர் தரும் உள் உணர்வுகளுக்கு நம்மை அர்ப்பணிப்போம்.


கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

[இது 25.03.2016 அன்று ஹெப்ரோன் IPC (Tamil) பஹரைன் சபையில் நான் கொடுத்த 60 நிமிட செய்தியின் எழுத்துவடிவம்]

.