Tuesday, December 27, 2016

ஆவியின் கனி - அன்பு

கனியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையின் அவசியம் குறித்து கடந்த இதழில் கண்டோம். ஆவியின் கனியின் ஒன்பது அம்சங்களையும் முறையாக நமது கிறிஸ்தவ வாழ்க்கையில் வெளிப்படுத்த வேண்டியது ஆவியானவரால் நடத்தப்படும் விசுவாசிகளின் கடமை. எந்தவொரு மரத்தின் வளர்ச்சி மற்றும் முதிர்ச்சியின் வெளிப்பாடே அதன் கனி என நாம் அறிவோம். வளர்ச்சி என்ற ஒரு நிலையை அது தொடர்ச்சியாக அடையும் போது கனி என்பது அதில் தானாக வருகிற ஒன்று. கனி ஒன்றை வரவழைத்து அதன் வளர்ச்சி மற்றும் முதிர்ச்சியை நிரூபிக்க வேண்டிய அவசியம் எந்த மரத்திற்கும் இல்லை. அதுபோலவே ஆவிக்குரிய கனியும் ஆவியினால் நடத்தப்படும் அவரது பிள்ளைகளின் வாழ்க்கையில் தானாக வெளிப்பட வேண்டிய ஒன்று. நமது பக்தியினாலோ சக்தியினாலோ நாம் முயன்று வெளிப்படுத்த வேண்டிய ஒன்று அல்ல.

இருப்பினும் நமது கிறிஸ்தவ வாழ்க்கையில் ஆவியின் கனி வெளிப்பட, நாம் செய்ய வேண்டிய கடமைகளும் உண்டு. அது யாதெனில், தேவனுடைய ஆவியினால் நடத்தப்பட நம்மை முழுமையாக ஒப்புக் கொடுப்பது ஒன்றேயாகும். நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம் (கலா. 5: 20). ஆவியின் கனியில் அன்பு என்னும் அம்சத்தை நம் வாழ்வில் வெளிப்படுத்துவது குறித்து இந்த இதழில் காண்போம்.

அன்பு என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் Love என்ற ஒரே ஒரு வார்த்தை இருப்பினும் அது பல்வேறு நிலைகளில் பல்வேறு விதமான காரியங்களைக் குறிக்கும்.   கிரேக்க மொழியில் அது ”அகாப்பே” (தியாகமான தெய்வீக அன்பு), ”பிலியோ” (சகோதர அன்பு), ”ஈராஸ்” (இருபாலருக்கிடையிலான காதல்) மற்றும் ”ஸ்டோர்ஜ்” (பெற்றோர் பிள்ளைகள் பாசம்) என்று அன்பினை நான்கு விதமாக குறிக்கிறது. எந்த நிலையிலும் மாறாத, உச்சநிலை அன்பு என்பது தேவன் நம்மீது பொழிந்த அகாப்பே அன்பாக இருப்பதால் வேதாகமம் அதைப் பற்றியே அதிகமாக போதிக்கிறது. மேலும், அகாப்பே அன்பை அனுபவிக்கும் ஒவ்வொருவரும் பிலியோ என்னும் சகோதர அன்பை மற்றவர்களிடம் வெளிக்காட்ட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது. இடைப்பட்ட நிலையில் உள்ள இரண்டுவகை அன்பு உட்பட அனைத்து வகையான அன்பையும் ஆவியின் கனியாகிய அன்பு என்ற அம்சத்தில் புரிந்து கொண்டு அவைகளை நாம் முறையாக செயல்படுத்த முடியும்.

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் கொடுக்கப்பட்ட பத்துக் கட்டளைகளில் 4 தேவனுடனும் 6 சக மனிதனுடனும் நமக்கு இருக்க வேண்டிய காரியங்களைக் கண்கூடாக காண்கிறோம் (யாத். 20:1-17). அவைகளையே சுருக்கமாக இரண்டு கற்பனைகளாக இயேசுகிறிஸ்து கூறும்போது 1 தேவனுடனும் 1 மனிதனுடனும் இருக்கவேண்டிய காரியமாக கூறுகிறார். ”உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே” (மத். 22:37-39, மாற்கு 12:30,31).  இவற்றில், அன்புகூருவது என்பது தான் மையமாக இருக்கிறது.
இதையே புதிய ஏற்பாட்டுக் காலத்தில் பவுல் ஒருபடி மேலே போய், ”உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்” என்கிறார் (ரோமர் 13:9, கலா 5:14). உலகப்பிரகாரமான மனிதர்களெல்லாம் பிறர்மீது சகோதர அன்பை (Brotherly Love) ஒரு மனிதாபிமான அன்பாக (Humanitarian Love) மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள். ஆனால், கிறிஸ்துவில் அன்புகூருகிறவர்கள் அதை ஒரு கட்டாயத்தின் பேரில் கடமைக்கான காரியமாக எடுத்துக் கொள்ளாமல், பரிசுத்த ஆவியினாலே நம் இருதயங்களில் ஊற்றப்பட்ட அன்பினை (ரோமர் 5:5) நாம் மற்றவர்களிடம் தாராளமாக வெளிப்படுத்த வேண்டும். அப்போது தான் அது ஆவியின் கனியாகிய அன்பாக வெளிப்படும். இல்லையெனில் அது வெறும் மனிதாபிமான அன்பு தான்.
மற்றவர்களிடத்தில் வெளிப்படுத்தபட வேண்டிய அன்பின் அளவுகோல் நாம் முதலில் நம்மில் எவ்வளவு அன்பு கூருகிறோமோ அந்த அளவு தான். அதே அளவுக்கு பிறனிடத்திலும் அன்புகூர வேண்டும். தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே (எபே. 5:29). இந்த கண்ணோட்டத்தில் இன்னுமொரு காரியத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். உலகத்தாரைக் காட்டிலும் தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகிறவர்கள் இன்னும் சற்று அதிகமாய் பிறனிடத்தில் அன்பு செலுத்த வேண்டும். ஏனெனில், அன்பின் இலக்கணமே தேவன் தான். ”அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்” (I யோவான் 3:16). மட்டுமல்ல, 1 கொரிந்தியர் 13ல் கூறப்பட்டுள்ள அன்பின் வரையறைகளுக்கு ஏற்ற எடுத்துக்காட்டாக தேவனுடைய அகாப்பே அன்பு விளங்குவதால் அதனை அனுபவித்த நாம் ஒவ்வொருவரும் அதை நம் வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும்.
”இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்பு கூருவான்” என்று இயேசு கிறிஸ்து ஒரு சூழ்நிலையில் கூறினார் (லூக்கா 7:47). நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டதெல்லாம் அவருடைய அநாதி அன்பு மற்றும் நம்மீது பாராட்டின அவரது கிருபை. ”அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம். … … தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூர வேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்” (I யோவான் 4:19, 21).


நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார் இயேசுகிறிஸ்து (யோவான் 13:35). எனவே அன்பு என்பது நம் கிறிஸ்தவ வாழ்க்கையின் அடையாளம். அந்த அன்பின் வெளிப்பாடாக பிறருக்கு நன்மை செய்வதிலே நாம் சோர்ந்து போகாமலிருக்க வேண்டும் (II தெச. 3:13). இதன் மூலம் அன்பு என்னும் பண்பினை நடைமுறைப்படுத்துவதில் உலகத்தாருக்கும் ஆவிக்குரியவர்களுக்கும் உள்ள பெரிய வித்தியாசத்தை உலகம் புரிந்து கொண்டு, அது தேவன் பக்கமாய் திரும்பிட, நாம் உறுதி கொள்ள வேண்டும். அதற்காக ஆவியானவராலே பிழைத்திருந்து, ஆவிக்கேற்றபடி நடக்க நம்மை நாமே அர்ப்பணிப்போமாக. ஆமென்.  

 [இது பாலைவனச் சத்தம் - டிசம்பர் 2016 இதழில் வெளியான எனது கட்டுரை]

Wednesday, November 23, 2016

கனியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை

கனியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை என்ற சொற்றொடரை விசுவாசிகள் நம்மில் பலரும் பரவலாக கேட்டிருக்கக் கூடும். மரம் செடி கொடிகளின் வாழ்க்கை சுழற்சியில், கனி கொடுப்பது என்பது அவற்றின் முக்கியமான  கட்டம். கனிகொடுப்பதில் தான் அவற்றின் பயன்பாடு பூரணமடைகிறது. அது மட்டுமல்லாமல், அடுத்த தலைமுறை உருவாகி வளரவும், பெரும்பாலான சூழ்நிலையில் இவற்றின் கனி சார்ந்த விதைகள் தான்  காரணமாக அமைகின்றன. எனவே அவற்றிற்கு கனி கொடுத்தல் என்பது அவசியமான ஒன்று. அதுபோலவே, நாமும் நமது கிறிஸ்தவ வாழ்க்கையில் கனி கொடுக்க எதிர்பார்க்கப் படுகிறோம்.

யோவான் சுவிசேஷம் 15ம் அதிகாரத்தில், தம்மில் நிலைத்திருப்பது குறித்து இயேசுகிறிஸ்து தன் சீடர்களுக்கு விளக்கும்போது பின்வருவனவற்றை தெளிவாகக் கூறுகிறார்: ”நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர் (வச.1); நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள் (வச. 5a). என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார் (வச. 2); ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான் (வச. 5b); நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள் (வச. 8); நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன் (வச. 16)”. இவற்றின் மூலம் நமது கிறிஸ்தவ வாழ்க்கையில் கனிகொடுப்பதின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்கிறோம்

பொதுவாகவே மரமென்றால் கனி கொடுக்கத்தான் செய்யும். ஆனால் அது நல்ல கனியால் அல்லது கெட்ட கனியா என்பது தான் காரியம் என்றார் இயேசுகிறிஸ்து (மத். 12:33). நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம் (நீதி. 11:30). அப்படியானால், நாம் எவ்வகையான கனியைக் கொடுக்க வேண்டும்?. கலாத்தியர் 5:22-23ன் படி, ’ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை’. ஆவியின் கனி என்பது ஒருமையில் குறிப்பதாக இருப்பினும் அதில் 9 வகையான காரியங்கள் குறிப்பிடப்படுகிறது. இது சுவைகளை ஆறு வகைப்படுத்துவது போல, ஆவிக்குரிய கனியையும் ஒன்பது அம்சங்களில் வர்ணிக்கிறது. மேலும், ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும் (எபே. 5:9) என்ற வசனத்தில் ஆவியின் கனியின் பல அம்சங்களும்சகல நற்குணத்தில்எனற ஒரே வார்த்தையில் அடக்கமாகிறது.

ஆவியின் கனியை தெளிவாக புரிந்து கொள்ள, நமக்கு ஒப்புமைக்காகத் தான் மாம்சத்தின் கிரியைகள் என  கலாத்தியர் 5:19-21 வரை கொடுக்கப்படுள்ளன. மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே. கிறிஸ்துவை அறியாதவர்கள் வாழ்க்கையில் மேற்கண்ட காரியங்கள் ஒன்று முதல் அனைத்துமே காணப்படக் கூடும். ஆனால், கிறிஸ்தவனுடைய வாழ்க்கையில் இவைகள் இருக்கலாகாது. இது சாத்தியமான ஒன்று.

எப்படியெனில்ஆவியின் கனி என்பது பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தினால் ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையில் வெளிப்படையாக ஏற்படும் பலன். இயேசுகிறிஸ்துவை இரட்சகராக ஒருவன் ஏற்றுக்கொள்ளும் போதே பரிசுத்த ஆவியானவர் அவனுடைய உள்ளத்தில் வந்துவிட்டாலும், அவருடைய தொடர்ச்சியான ஆளுகையின் விளைவாக அவனுடைய வாழ்க்கையில் தொடர் மாற்றங்கள் ஏற்படுகின்றன. தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார் (ரோமர் 8:29.) இவ்விதம் நம்மை கிறிஸ்துவின் சாயலில் உருவாக்குவதே பரிசுத்த ஆவியானவரின் பணி. இந்த ஆவியானவரின் ஆளுகைக்கு நம்மை அர்ப்பணிக்கும்போது நம்மில் ஆவியின் கனி வெளிப்படும்.

அதற்கு நாம் செய்ய வேண்டியவை என்ன? நமது கிறிஸ்தவ வாழ்க்கையில் நம் மாம்ச சிந்தைக்கும் ஆவிக்குரிய சிந்தைக்கும் நிரந்தர போராட்டம் உண்டு. மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது (கலா. 5:17). ஆனால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள் (கலா 5:16). மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா? (ரோமர் 6:16) என்கிறார் பவுல். ஒன்றை நாடி மற்றொன்றை அடைய வேண்டுமென்றால் ஒன்றை விட்டு விலகியோடித் தான் ஆக வேண்டும் என்பது தீமோத்தேயுவுக்கு பவுலின் ஆலோசனை (I தீமோ.6:11; II தீமோ. 2:22).

நம் வாழ்க்கையில் வெளிப்படும் கனி எந்த வகையானது என்பது நம் இருதயம் எதினால் நிறைந்திருக்கிறது என்பதைப் பொறுத்தது. இருதயத்தின் நிறைவை வாய் பேசும் (மத். 12:34). இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும் என்றார் இயேசுகிறிஸ்து (மத். 15:19). தினமும் வேதத்தை வாசித்து தியானித்து, தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, நமது மனம் தினமும் புதிதாக வேண்டும் (ரோமர் 12:2).  இவ்விதம்  கனி தரும் கிறிஸ்தவ வாழ்க்கையில் நமது தீர்மானமும் செயல்பாடும் முக்கிய பங்கை வகிக்கின்றன. எனவே, அவ்விதம் நல்ல தீர்மானங்களை எடுத்து செயல்படுத்துவோம்; கனியுள்ள வாழ்க்கை வாழ்வோம். தேவன் தாமே நம்மை அதற்கு பெலப்படுத்துவாராக.

 [இது பாலைவனச் சத்தம் - நவம்பர் 2016 இதழில் வெளியான எனது கட்டுரை]

Sunday, November 06, 2016

பொல்லாங்கனை ஜெயித்ததினால் எழுதுகிறேன்

கிறிஸ்துவில் பிரியமான சகோதர சகோதரிகளுக்கு நம் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அப்போஸ்தலனாகிய யோவான், தான் எழுதிய நிரூபத்தின் நோக்கங்களை மூன்று விதமான மக்களுக்கும் வெவ்வேறாக குறிப்பிட்டத்தையும் அவற்றில் பிள்ளைகளுக்கும் பிதாக்களுக்கும் எழுதியவற்றையும் கடந்த இதழில் விரிவாக தியானித்தோம். வாலிபர்களுக்கு அவர் எழுத்தும் நோக்கத்தினை இந்த இதழில் காண்போம். 
வாலிபர்களுக்கு அவர் எழுதுவதென்ன? ’பொல்லாங்கனை ஜெயித்ததினால் எழுதுகிறேன்’ என்கிறார் (1 யோவான் 2:13b). இரண்டாம் முறையும் அதையே தான், ஆனால் மூன்று படிநிலைகளில் கூறுகிறார். பலவானாய் இருக்கிறதினாலும், தேவ வசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும் உங்களுக்கு எழுதுகிறேன் (1 யோவான் 2:14b) என்கிறார். ஆவிக்குரிய நிலையில் துடிப்பான வாலிபர்களாக இருக்க வேண்டுமெனில், முதலில் இரட்சிப்பு என்ற பிள்ளைகளின் அனுபவம் அடிப்படைத் தேவை. அதைத்தொடந்து வாலிபர்களாய் விளங்கிட நாம்  பொல்லாங்கனை ஜெயிக்க வேண்டும். பொல்லாங்கனை ஜெயிப்பது எப்படி? அவைகளில் உள்ள படிநிலைகளை இங்கு காண்போம். 
பலவான்களாய் இருப்பதினால்:
வாலிபர்கள் இயல்பாகவே பலம் பொருந்தியவர்களாக இருப்பதினால், அவர்களால் எதிராளிகளை எளிதில் மேற்கொள்ள முடியும். வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள் (சங்கீதம் 127:5) என்பது அவர்களுக்கு இரட்டை பலத்தைத் தருகிறது. ஆனால், ஆவிக்குரிய போராட்டத்தில் வாலவயதினர் பலப்படவேண்டியது உடல் ரீதியாக அல்ல; ஆவிக்குரிய நிலையில். கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள் என்கிறார் பவுல் (எபேசியர் 6:10). சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார் என்கிறார் ஏசாயா தீர்க்கத்தரிசி (ஏசாயா 40:29).
உடல் ரீதியான பெலனுக்கு தினமும் நல்ல சத்தான உணவு, உடற்பயிற்சி மற்றும் முறையான ஓய்வு தேவை. அதுபோன்றே ஆவிக்குரிய பெலனுக்கு தினமும் ஆவிக்குரிய வசன உணவூட்டம், கர்த்தரிடத்தில் காத்திருக்கும் ஜெபம் மற்றும் உற்சாகமான ஊழியம் போன்ற பயிற்சிகள் தேவை. ஆவிக்குரிய போராட்டத்தில், தன் சொந்த பலனை நம்பி களம் இறங்குபவர்கள் தோற்றுப் போவது உறுதி. இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள் (ஏசாயா 40:30,31).
வேதவசனம் நிலைத்திருப்பதினால்:
யோவான் 15:4-10 வசனங்களில் விசுவாசிகள் தன்னில் நிலைத்திருப்பதைக் குறித்து இயேசு விபரமாக கூறுகிறார். என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள் (யோவான் 15:4). ஆதியிலே வார்த்தையாக தேவனிடத்தில் இருந்தது, பின்னர் மாம்சத்தில் வெளிப்பட்டவர் தான் இயேசு கிறிஸ்து. எனவே வேத வசனம் நம்மில் நிலைத்திருப்பது என்றால், இயேசு நம்மிலும் நாம் அவரிலும் நிலைத்திருப்பது தான்.  
அப்படி நாம் அவரில் நிலைத்திருக்க வேண்டுமெனில், நாம் அவரது கற்பனைகளுக்குக் கீழ்பப்டிய வேண்டும்.  நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள் என்றார் இயேசு (யோவான் 15:10). நாம் அவரது கற்பனைகளைக் கைக்கொள்ள வேண்டுமென்றால், அவைகளை தினமும் வாசிக்க வேண்டும், நேசிக்க வேண்டும், தியானிக்க வேண்டும், முக்கிய வசனங்களை மனப்பாடம் செய்ய வேண்டும், அவைகளை கடைபிடிக்க வேண்டும்.  அப்போது தான் வாலிபர்களாக பொல்லாங்கனை ஜெயிக்க முடியும். 
பொல்லாங்கனை ஜெயித்ததினால்:
உலகத்தில் நாம் நமது பெற்றோர்களால் பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் இயேசுகிறிஸ்துவை நம் இருதயத்தில்  விசுவாசித்து அவரை நம் பாவபரிகர இரட்சகராக ஏற்றுக் கொள்ளும் போது நாம் தேவனுடைய பிள்ளைகளாகிறோம்; அதாவது, நாம் தேவனால் பிறந்தவர்களாகிறோம் (யோவான் 1:12,13). தேவனாலுண்டாயிருந்தவர்கள் பொல்லாங்கனை ஜெயிக்கமுடியும் என்பது வாக்குத்தத்தம். தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம்; தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான் (I யோவான் 5:18). யோவான் அப்போஸ்தலன் மேலும் கூறுகிறார், நீங்கள் தேவனாலுண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர் (1 யோவான் 4:4). உங்களில் ’இருக்கிறவர்’ பெரியவர். அதாவது நம்மில் தேவ ஆவியானவர் அவருடைய ஆளுமை செயல்பாடுகள் தொடர்ந்து இருந்துகொண்டிருக்கும் போது மட்டுமே நாம் பொல்லாங்கனை ஜெயிக்க முடியும்.

ஆவிக்குரிய வாழ்க்கையில் வாலிபராய் இருக்கும் நாம் பொல்லாங்கனை ஜெயிக்க வேண்டும்; பொல்லாங்கனை ஜெயிக்க நாம் கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படவேண்டும். அவருடைய வசனத்தில் நிலைத்திருக்கும் போது தான் அந்த பலம் நமக்குக் கிடைக்கும். எனவே அவருடைய வசனத்தை நாம் முறையாக வாசிப்போம்; நேசிப்போம்; தியானிப்போம்; அவைகளை முறையாக கடைபிடிப்போம். அப்படி அவரது கற்பனைகளை நாம் கடைபிடிக்கும் போது இயேசுவும் நம்மில் நிலைத்திருப்பார்; நாம் பொல்லாங்கனை எளிதில் ஜெயிக்கலாம்.

இந்தவிதம் பொல்லாங்கனை ஜெயிக்கும் அனுபவத்திற்குள் ஆண்டவர் நம்மை வழிநடத்துவாராக. ஆமென். 


[பாலைவனச் சத்தம் - அக்டோபர் 2016 இதழில் வெளியான எனது கட்டுரை] 

Saturday, October 22, 2016

இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன் [1 யோவான் 2:12-14]


ஆதியிலே வார்த்தையாய் தேவனிடத்தில் இருந்து, பின் மாம்சமாகி பாடுபட்டு பரமேறி இன்றும் நம்மிடையே வாசம் செய்யும் நாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

       புதிய ஏற்பாட்டின் 27 புத்தகங்களில் பெரும்பாலும் அவை யாரால், யாருக்காக, எதற்காக எழுதப்பட்டது என நேரடிக் குறிப்புகள் உண்டு. பொதுவாகவே ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டால், அதன் ஆசிரியர் முன்னுரை எழுதியிருப்பார்; அல்லது எழுத்தில் பிரபலமான வேறு எவராவது அறிமுகவுரை எழுதியிருப்பார். அவற்றை வாசிக்கும் போது அந்த புத்தகம் எதற்காக என நமக்குத் தெரியவரும். சில நேரங்களில் ’புத்தகத்தைப் பற்றி’ என அந்த புத்தகத்தின் கடைசி வெளிப்பக்க அட்டையில் இருக்கும். அவைகளை வாசித்தறிந்து, அது பிரயோஜனமான ஒன்று என மனதில் பட்டால் மட்டுமே அந்த புத்தகத்தை நாம் வாங்குவோம்; படிப்போம்.

        பரிசுத்த வேதாகமம் முழுவதுமே முதலிலிருந்து கடைசி வரையும் திரியேக தேவனைக் குறித்து சொல்வதோடு மட்டுமல்லாமல், குறிப்பாக அது தன்னைக் குறித்தும் சொல்லுகிறது. வார்த்தையாகிய இயேசுவே மனிதனாய் உலகத்தில் வந்தது தான் அதன் மையச் செய்தி. பரிசுத்த வேதாகமத்தின் மகத்துவங்கள், இவற்றை வாசிப்பதால் தியானிப்பதினால் கைக்கொள்ளுவதினால் என்ன பயன் என பல்வேறு இடங்களில் தனக்குத் தானே அது சொல்லிக் கொள்கிறது. பொதுவாக புத்தகங்களில் முகவுரை மட்டும் தான் புத்தகத்தைப் பற்றி இருக்கும் பின்பு முழுவதும் அதன் உள்விஷயங்கள் இருக்கும். பரிசுத்த வேதாகமத்தில் மட்டும் தான் ஆரம்பமுதல் இறுதிவரையும் பரிசுத்த வேதாகமத்தைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது.

             அந்த விதமாக அப்போஸ்தலனாகிய யோவான், தான் எழுதிய மூன்று நிரூபங்களிலும் யாருக்கு அல்லது எதற்காக என்ற குறிப்புகள் ஆரம்பத்திலேயே இருந்தாலும் [1 யோவான் 1:4, 2 யோவான் 3,5,12, 3 யோவான் 1, 9, 13] இந்த 1 யோவான் 2:12-14 பகுதியில் தனது நிருபத்தின் இடையில் எழுதியது மட்டுமல்லாமல் நிருபத்தின் இறுதிப் பகுதியிலும் (1 யோவான் 5:13) தான் எழுதும் நோக்கத்தை தெரிவிக்கிறார். தனது நிரூபங்களில் மொத்தம் 21 முறை தான் எழுதுவதைக் குறித்து எழுதியுள்ளார். இந்த 1 யோவான் 2:12-14 பகுதியில், அப்போஸ்தலனாகிய யோவான், மூன்று விதமான மக்களுக்கு இதனை எழுதுகிறார். முதலாவது பிள்ளைகள், பின்னர் பிதாக்கள், இடையில் வாலிபர்கள். பரிசுத்த வேதாகமமும் அப்படியே எல்லா வயதினருக்கும் பொதுவானது. சிறுபிள்ளைகளுக்கு நன்னெறிகளைப் புகட்டும் புத்தகமாக மட்டுமல்ல, அது வாலிபர்களுக்கு வழியைக் காட்டும்; பெரியவர்களுக்கும் நல் ஆலோசனைகளைக் கொடுக்கும்.

 இந்த பகுதியில் அப்போஸ்தலனாகிய யோவான் மூன்று பிரிவினர்களில் ஒவ்வொருவருக்கும் இரண்டிரண்டு காரணங்களுக்காக இவற்றை எழுதுவதாக கூறுகிறார். பிள்ளைகளே, அவருடைய நாமத்தினிமித்தம் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன் (வச. 12). பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். வாலிபரே, பொல்லாங்கனை நீங்கள் ஜெயித்ததினால் உங்களுக்கு எழுதுகிறேன். பிள்ளைகளே நீங்கள் பிதாவை அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன் (வச. 13). பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதியிருக்கிறேன். வாலிபரே, நீங்கள் பலவான்களாயிருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன் (வச. 14).

பிள்ளைகள்:
               

    பிள்ளைகளுக்கு எழுதுவதன் நோக்கம், பிதாவை அறிந்திருக்கிறதினால் மற்றும் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறதினால். பிதாவாகிய தேவனை அறிந்து, அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொள்ளும் போது நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு நாம் அவருடைய பிள்ளைகள் ஆகிறோம். பாவங்கள் மன்னிக்கப் பட்டிருக்கும் இரட்சிப்பின் அனுபவம் என்பது ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒரு பிள்ளை அனுபவம். இது அடிப்படையான மற்றும் ஆரம்ப அனுபவம். இதிலேயெ நாம் திருப்தியடைந்து இருந்துவிடக் கூடாது. பிள்ளைகள் பெரியவர்களாக வளர வேண்டும்; ஆவிக்குரிய நிலையில் இன்னும் நாம் முன்னேறிச் செல்லவேண்டும்.

பிதாக்கள்:  
               
      பிதாக்களுக்கு எழுதுவதன் நோக்கத்தில் ஆதிமுதல் இருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் என இருமுறையும் அதையே குறிப்பிடுகிறார். ஆதிமுதல் இருக்கிற திரியேக தேவனை அறிந்திருத்தல் ஆவிக்குரிய நிலையில் பிதாக்களின் அனுபவம். தேவனை நான் முழுமையாய் அறிந்து கொண்டேன் என எவருமே கூற முடியாது. அப்படி ஒரு பூரணம் வரும்போது அவர் நம்மை தம்மிடமாய் எடுத்துக் கொள்வார். அவரைப் பற்றிய பூரண அறிவு என்பது ஆவிக்குரிய வாழ்க்கையில் நாட்கள் செல்லச் செல்லத் தான் வரும். நாம் அனைவருமே அந்த நிலைமைக்கு நேராய் சென்று கொண்டிருக்கிறோம். ஆதிமுதல் இருக்கிறவரை அறிவதற்கும் அவரைப் பற்றி அறிவதற்கும் வித்தியாசம் உண்டு.

         நம் அனைவருக்குமே நமது பிரதமர் மற்றும் முதல்வரைத் தெரியும். அவர்களுக்கு நம்மைத் தெரியுமா? தெரியாது. நாம் தெரிந்திருப்பதெல்லாம் அவர்களைப் பற்றி தான்; அவர்களை அல்ல. அவர்களுக்கோ தனிப்பட்ட முறையில் நம்மையும் தெரியாது; நம்மைப் பற்றியும் தெரியாது. நாம் அவர்களைப் பற்றி அறிந்திருப்பதெல்லாம் கேள்விப்படும் செய்திகள், வாசிக்கும் புத்தகங்கள் மூலம் மட்டுமே. அவர்களை நாமும் அவர்கள் நம்மையும் அறிந்திருக்க வேண்டுமெனில் அவர்களுடன் நெருங்கிப் பழகியிருக்க வேண்டும்; அன்றாடம் தொடர்பில் இருக்க வேண்டும். அதுபோலவே நாமும் ஆதிமுதல் இருக்கிறவரை அறிந்திருக்கிற வேண்டுமென்றால், வாரவாரம் சபைகளில் செய்திகளைக் கேட்டால் மட்டும் போதாது; வேதாகமத்தை வாசித்தால் மட்டும் போதாது. அவருடன் ஜெபத்தில் பேச வேண்டும்; அன்றாடம் உறவாட வேண்டும். நாமும் தேவனும் இருவருமே இருவழித்தொடர்பில் தொடர்ந்து, அவருடன் நாம் ஐக்கியத்தில் நிலைகொண்டிருக்கும் போது தான், நாம் அவரை முழுமையாக அறிய முடியும்; ஆவிக்குரிய வாழ்க்கையில் முன்னேறி பிதாக்கள் என்ற முதிர்ச்சி நிலையை அடைய முடியும்.

வாலிபர்களுக்கு எழுதும் காரியங்களை அடுத்த இதழில் காணலாம்.

[பாலைவனச் சத்தம் - செப்டெம்பர் 2016 இதழில் வெளியான எனது கட்டுரை]





Saturday, October 01, 2016

காண்கிறதினால் … கேட்கிறதினால் …

முன்னெப்போதும் இருந்திராத அளவுக்கு வளர்ந்துள்ள தகவல் பரிமாற்ற ஊடகங்களின் பரிணாம வளர்ச்சியை உற்றுநோக்கும் போது நமக்கு வியப்பாக இருப்பதுடன் இது எங்கே போய் முடியுமோ என்று ஒருவித பயமும் நம்மைத் தொற்றிக் கொள்கிறது. இது குறித்து 2600 வருடங்களுக்கு முன்னரே முன்னறிவிக்கப்பட்டிருப்பது (தானி. 12:4) இது கடைசிக்காலம் என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது.  தகவல் பரிமாற்ற ஊடகம் 15ம் நூற்றாண்டில் அச்சு வடிவமும் பின்னர் படிப்படியாக ரேடியோ, தொலைபேசி, தொலைக்காட்சி, சினிமா என ஒலி ஒளி வடிவம்  பெற்று, தற்போது இவையனைத்தும் இண்டர்நெட் மூலம் ஒருன்கிணைந்து கையடக்க செல்போன் மூலம் நம் பாக்கெட்டிற்குள்ளேயே வந்துவிட்டன. மேலும் தற்போது சமூக வலைத்தொடர்புகள் தளங்கள் மூலம் இவை அனைவரையும் எளிதில் சென்றடைகின்றன.

இது போன்ற வளர்ச்சி, சமுதாயத்தில் கண்கூடான பல முன்னேற்றங்களுடன் தனிநபர்  வாழ்க்கையிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், அதிக ஞானத்திலே அதிக சலிப்புண்டு; அறிவுபெருத்தவன் நோவுபெருத்தவன் (பிர. 1:18). இவற்றை ஏற்கனவே ஞானியாய் இருந்து தன் வாழ்க்கை அனுபவத்தின் மூலம் நமக்கு போதிக்கும் சாலமோனின் பிரசங்கி புத்தகத்தின் முகவுரை (பிரசங்கி 1:8-11) மற்றும் முடிவுரைப் பகுதி (பிரசங்கி 12: 12-14) பகுதிகளிலிருந்து இங்கே நாம் ஆராயலாம்.

1) காண்கிறதினால் கண்: [Visual Media] – 1:8a

ஐம்புலன்களில் பார்வையே பிரதானம். ஒளியுடன் ஒலியும் கூடிவரும்போது அது ஒருவரை வெகுவாகக் கவர்ந்துவிடுகிறது. இருப்பினும் காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை, கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை (பிர. 1:8) என்பது சாலமோனின் அனுபவம். பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; அதுபோல மனுஷனுடைய கண்களும் திருப்தியாகிறதில்லை (நீதி. 27:20) என்பதும் அவரது கூற்று. கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும்; உன் கண் கெட்டதாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும். ஆகையால் உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு (நீ காண்பவைகளைக் குறித்து) எச்சரிக்கையாயிரு (லூக்கா 11:34,35) என்றார் இயேசு. எனவே ஊடக பயன்பாட்டில் தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன் (சங். 101:3) என்பது நமது தீர்மானமாக இருக்க வேண்டும்.

2) கேட்கிறதினால் செவி:  [Audio Media] – 1:8b
உலகில் இசைக்கு மயங்காத உயிரியே இல்லை என்பர். நாம் ரசிக்கும் இசையுடன் கூடிய பாடல்கள் எந்த விதத்திலும் துன்மார்க்கத்திற்கு ஏதுவாக நம்மை நடத்தாமல், புத்திமதிகள் நிறைந்து பக்தியில் பெருகிட உதவுபவையாக இருக்க வேண்டும் (கொலோ 3:16).   தொலைபேசி பயன்பாட்டிற்கான செலவுகள் தற்சமயம் வெகுவாக குறைந்து விட்டமையால் அவசியமின்றி நாம் பயன்படுத்தலாகாது. அதில் நாம் செலவிடும் நேரமும் ஒரு பொன்னான செலவினமே. மட்டுமல்லாமல், சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது (நீதி. 10:19) என்ற வசனத்தை மனதிற்கொண்டு, சொல்லவந்த விஷயத்தை பகிர்ந்து சுருக்கமாக உரையாடலை முடித்துக் கொள்வது நல்லது. அதிலும் எதிர்பாலருடன் பேசும்போது கவனம் தேவை. மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும் (1 கொரி 15:33).

3) புத்தகங்களுக்கு முடிவில்லை: [Print Media] – 12:12
வாசிப்புப் பழக்கம் ஒரு நல்ல விஷயம் என்பது மறுப்பதற்கில்லை. அதே வேளையில் அநேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை என்ற உண்மையை உணர்ந்து கொள்ளும் போது தான் நமக்கு இருக்கும் குறுகிய காலத்தை மிகவும் பிரயோஜனமாக பயன்படுத்த முடியும். நம் வாழ்க்கையில் இதுவரையும் பாடப்புத்தகங்கள் உட்பட பலநூறு புத்தகங்களைப் படித்துவிட்ட நாம் பரிசுத்த வேதாகமத்தை ஒருமுறையாவது முழுமையாக படித்திருக்கிறோமா? ’இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார் (யோவா. 20:30), இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன் (யோவா. 21:25)’ என்கிறார் அவரது முதன்மைச் சீடர். அப்படியானால், இருக்கும் வாசிப்பு ஆர்வத்தில், எழுதப்பட்ட வேதாகமத்தை எவ்வளவு அருமையாய் கருதி நாம் படிக்க வேண்டும். 

4) நூதனம் எதுவுமில்லை: [Sharing / Forwarding] – 1:9-11
தகவல் பரிமாற்றங்கள் பரவலாகி விட்ட பின்னர், முன்பு சாமானியரின் கையில் கிடைப்பதற்கரிய தகவல்களெல்லாம் இப்போது மிகவும் எளிதாக கிடைத்துவிடுகின்றன. தகவல் ஒன்றைக் கண்டவுடன் அது நமக்கு நூதனமாக தெரிவதால், மற்றவர்களுக்கும் தெரியட்டுமே ஏன்ற நல்லெண்ணத்தில் அவற்றை பகிர்ந்து கடத்துகிறோம். ஆனால், உண்மையில் அவற்றில் நூதனம் எதுவுமில்லை. முன் நடந்ததே இப்பொழுதும் நடக்கிறது; இனி நடக்கப்போகிறதும் முன்னமே நடந்தது (பிர. 3:15). எனவே பரபரப்பு செய்திகளை அடுத்தவருக்கு பகிர்ந்து கடத்துவதிலும் பரமனின் நற்செய்தியை ஞானமாய் கடத்துவதில் நாம் கவனம் செலுத்தலாம்.

5) நியாயத்தீர்ப்பு நிச்சயம்: [Accountable Responsibility] 12:13,14
ஊடக பயன்பாட்டில் நமது ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார். ஊடகங்கள் யாவும் அடிப்படையில் நடுநிலையான தொடர்பு சாதனங்கள்; அவை தன்னகத்தே நன்மையாகோ தீமையாகவோ இருப்பதில்லை. அதை பயன்படுத்தி ஒருவர் கடத்தும் தகவல்களின் தன்மையின் மூலம் தான் அது நல்ல அல்லது தீமையான சாதனமாக மாறுகிறது. கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று முன்னறிவிக்கப்பட்டவைகளின் (2 தீமோ 3:1-5) நிறைவேறுதலுக்கு உறுதுணையாக இன்றைய தகவல் பரிமாற்ற ஊடகங்கள் இருந்துவருகின்றன. அதற்காக நாம் அவற்றை ஓரங்கட்டி விடாமல் நமது நேரம், பொருள், திறமை தாலந்துகளைப் பயன்படுத்தி நித்தியஜீவனுக்கான மீட்பின் நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவித்திட, ஊடகங்களை முறையாக கையாள நாம் கவனம் செலுத்தலாம். ஏனெனில், நன்மையானதைச் செய்தால் நமக்கு நியாயத்தீர்ப்பில் பலன் கிடைக்கும்.


ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் 
தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள். (1 கொரி. 10:31).

[இது தரிசனச்சுடர் அக்டோபர் 2016 ல் வெளிவந்துள்ள  ஊடக பயன்பாடுகள் குறித்த
எனது வேத ஆராய்ச்சிக் கட்டுரை]

Sunday, August 07, 2016

FRIENDSHIP DAY SPECIAL BIBLE VERSES

IMPORTANCE OF FRIENDSHIP:

Ecclesiastes 4:9-10
Two are better than one because they have a good return for their labor. For if either of them falls, the one will lift up his companion. But woe to the one who falls when there is not another to lift him up.

Proverbs 27:17
Iron sharpens iron, So one man sharpens another.

Proverbs 27:9
Oil and perfume make the heart glad, So a man's counsel is sweet to his friend.

Proverbs 20:6
Many a man proclaims his own loyalty, But who can find a trustworthy man?

Proverbs 27:5-6
Better is open rebuke Than love that is concealed. Faithful are the wounds of a friend, But deceitful are the kisses of an enemy.


HOW TO CHOOSE FRIENDS:

Proverbs 12:26
The righteous is a guide to his neighbor, But the way of the wicked leads them astray.

Proverbs 13:20
He who walks with wise men will be wise, But the companion of fools will suffer harm.

Proverbs 22:24-25
Do not associate with a man given to anger; Or go with a hot-tempered man, Or you will learn his ways And find a snare for yourself.

1 Corinthians 15:33
Do not be deceived: "Bad company corrupts good morals."


HOW TO TREAT FRIENDS:

Proverbs 16:28
A perverse man spreads strife, And a slanderer separates intimate friends.

Proverbs 17:9
He who conceals a transgression seeks love, But he who repeats a matter separates intimate friends.

Proverbs 17:17
A friend loves at all times, And a brother is born for adversity.

Proverbs 18:24
A man of too many friends comes to ruin, But there is a friend who sticks closer than a brother.

1 Corinthians 10:24
Let no one seek his own good, but that of his neighbor.

John 15:13
"Greater love has no one than this, that one lay down his life for his friends.


Jesus: You are my friends if you do what I command. John 15:14.