Monday, January 03, 2011

நில்லாதே... கவனியாதே... செல்லாதே...!

நில்... கவனி... செல்...! என்பது நம்மெல்லோருக்கும் பழக்கமானதொரு சொல். ஒருவர் ஒன்றை செய்யச் சொன்னால், சொல்வதற்கு நேரெதிராகச் செய்வது மனித இயல்பு.

வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள கட்டளைகளை, நில்லாதே... கவனியாதே... செல்லாதே...!  என்ற கோணத்தில் பார்ப்பது பிரயோஜனமாக இருக்கலாம் என நம்புகிறேன்.  இதோ அவைகளின் தொகுப்பு:



நில்லாதே...!


1) உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே. (ஆதியாகமம் 19:17 )

2) பாவிகளுடைய வழியில் நில்லாதே. (சங்கீதம் 1:1 )

3) பெரியோர்களுடைய ஸ்தானத்தில் நில்லாதே. (நீதிமொழிகள் 25:6 )

4) பொல்லாதகாரியத்திலே பிடிவாதமாய் நில்லாதே. (பிரசங்கி 8:3 )



கவனியாதே...!


1) சொல்லப்படும் எல்லா வார்த்தைகளையும் கவனியாதே. (பிரசங்கி 7:21)

2) தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கும் (I தீமோத்தேயு 1:3 )



செல்லாதே...!


1) நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு. (ஆதியாகமம் 26:2 )
2) வழிக்குப் பையையாகிலும், அப்பத்தையாகிலும், கச்சையில் காசையாகிலும் எடுத்துக்கொண்டுபோகால் (மாற்கு 6:8 )

3) ... வீட்டுக்கு வீடு போகாதிருங்கள். (லூக்கா 10:7 )

Saturday, January 01, 2011

பு(ப)த்தாண்டு வாக்குத்தத்தம்

மூன்றாம் மில்லேனியத்தின் முதல் பத்தாண்டுகளை முடித்து 2011 என்றதொரு புத்தாண்டுடன் இரண்டாம் பத்தாண்டுகளுக்குள் நுழைகிறோம். புத்தாண்டு தினங்கள்தோறும் எப்படியாகிலும் தப்பாமல் அநேக வாக்குத்தத்த வசனங்கள் நம்மை வந்தடைகின்றன. நாம் அவை அவ்வண்ணமே பலித்திட வேண்டுமென விரும்பி ஜெபித்து வருவதுமுண்டு. ஆனால் அவை அப்படியே அனுபவமாகியதாக ஆண்டு இறுதியில் சாட்சி பகருவோர் வெகுசிலரே. காரணம் பலவிதம். அவற்றுள் பின்னணியிலுள்ள நிபந்தனைகளை கண்டுகொள்லாமல் விட்டுவிடுவது முக்கியமானதொரு காரணம்.

ஆசீர்வாதங்களை அருளும் ஆண்டவர் எப்பொழுதுமே பின்னணியில் மறைமுகமாக சில நிபந்தனைகளை வைத்திருக்கிறார் என அவரைக் குறித்து நாம் குறைவாக நினைத்துவிட வேண்டியதில்லை. ஏனெனில் வாக்குத்தத்தங்களின் பின்னணியில் கட்டளைகளை வைத்திருக்கும் தேவன் தாமே மோசே மூலம் கொடுத்த பத்துக் கட்டளைகளினூடே வெளிப்படையாக வாக்குத்தத்தங்களையும் வழங்கிட தவறவில்லை (யாத். 20:6,12 ; எபே. 6:3).

இன்று உங்களை நோக்கி வரும் வாக்குத்தத்த வசனமாகிய ஏசாயா 33: 15-16 ன் பின்னணியிலுள்ள நிபந்தனைகளையும் சற்றே நோக்குவோமா? ”V15 நீதியாய் நடந்து, செம்மையானவைகளைப் பேசி, இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, பரிதானங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி, இரத்தஞ்சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்குத் தன் செவியை அடைத்து, பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவனெவனோ, V16 அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்.”


நீதியாய் நடந்து – கால்

செம்மையானவைகளைப் பேசி – வாய் / நாவு

இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து – மனம் / மனபான்மை

பரிதானங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி – கை

இரத்தஞ்சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்கு…செவியை அடைத்து – காது / செவி

பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவனெவனோ – கண்

உயர்ந்த இடங்களில் வாசம்...உயர்ந்த அடைக்கலமாகும் – பாதுகாப்பு

அப்பம் .... தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும் – அவசியத் தேவைகள்.



நம் வாழ்வின் அன்றாட அவசியத் தேவைகள் குறைவின்றி நிச்சயமாய் சந்திக்கப்பட நம் உடலின் அவயவங்களை அன்றாடமும் ஆண்டவர் பாதத்தில் அர்ப்பணித்து அவர் விரும்பும் விதம் வாழ ஆயத்தமா?

அப்படியெனில், இந்த வாக்குத்தத்தம் இந்த புத்தாண்டுக்கோ அல்லது வரும் பத்தாண்டுக்கோ மட்டுமல்லாமல், இப்பூவுலகில் நாம் வாழும் நாட்கள் மட்டும் நமக்கு உரித்தாகும்!

Sunday, August 29, 2010

அறிந்து கொள்வோம் அரவாணிகளை

அரவாணிகள் அல்லது திருநங்கைகள் என கண்ணியமான வார்த்தைகளாலும் இன்னும் பிற கண்ணியமற்ற சில வார்த்தைகளாலும் அழைக்கப்படும் மூன்றாம் பாலினத்தவர் பற்றி நம்மில் பலருக்கு சரியான முழுவிபரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காரணம் அவர்களைக் குறித்து நேர்மையான நோக்குடன் அணுகாமல் அவர்களை பிச்சை மற்றும் பாலியல் தொழிலாளர்களாக ஊடகங்கள் சித்தரித்து வரும் நிலை தான். முழுமையாக ஆண் எண்றோ அல்லது பெண் என்றோ இல்லாமல் இருவரது பண்புகளையும் உள்ளடக்கிய இடைநிலை பாலினமான (Intersex) இவர்கள் மூன்றம் பாலினத்தவராக (Third Gender) தற்போது தான் பல நாடுகளிலும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறார்கள்.

ஆணும் பெண்ணுமாக

ஆதியிலே மனுஷரைச் சிருஷ்டித்த தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் (மாற்கு 10:6). அப்படியென்றால், இவர்கள் எப்படி வந்தார்கள் எப்போது வந்தார்கள், இவர்களைக் குறித்த தேவனின் திட்டம் என்ன, இவர்களை நாம் அணுக வேண்டிய விதம் என்ன என்பதை குறித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

மனித உடலில் 46 குரோமோசோம்கள் உண்டு என்பது நாம் பள்ளிப் பருவத்திலேயே அறிந்து கொண்டது தான். அதைப்பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொண்டால் தான் அரவாணிகளைப் பற்றி புரிந்து கொள்ள முடியும். மனிதனின் பல்வேறு குணாதிசயங்களுக்கும் காரணமான வெவ்வேறு மரபணுக்களை (Genes) கற்றையாக ஒருங்கே கொண்டிருப்பது தான் குரோமோசோம். இந்த 46 குரோமோசோம்களும் இரண்டிரண்டாக மொத்தம் 23 ஜோடிகளாக காணப்படும். இவற்றில் 22 ஜோடிகள் உடலின் பால் சம்பந்தப்பாடாத உடலின் மற்ற அனைத்துப் பண்புகளையும் கட்டுப்படுத்துபவை. கடைசி ஜோடி குரோமோசோம்கள் பாலினம் (Sex) சம்பந்தப்பட்டவை. அது XY என்று ஆண்களிலும் XX என்று பெண்களிலும் கானப்படும். இனப்பெருக்கத்தின் போது ஆண்களில் அது X மற்றும் Y ஆகவும். பெண்களில் இரண்டு X களாகவும் அளவில் மட்டுமல்ல பண்புகளிலும் சரிபாதியாக பிரிந்து கரு உருவாக உதவும். உருவாகும் கருவில் ஆணின் X ம் பெண்ணின் X ம் இணைந்து XX குரோமோசோம் உருவானால் அது பெண்ணாக வளரும். ஆணின் Y ம் பெண்ணின் X ம் இணைந்து XY குரோமோசாமாக உருவானால் ஆணாகவும் வளரும். இன்னும் வேறுவிதமாக கூறினால் உருவாகும் கருவில் Y குரோமாசோம் இருந்தால் அது ஆணாகவும் Y இல்லையென்றால் அது பெண்ணாகவும் வளர்ச்சியடைகிறது எனலாம்.

மிகச்சில வேளைகளில் (ஆயிரத்தில் ஒன்றிரண்டு) இது இவ்விதம் முறைப்படி இரண்டாக பிரிந்து இணைவதில்லை. எடுத்துக்காட்டாக உருவாகும் கருவில் அல்லது என்ற ஒற்றைக்குரோமோசோம் மட்டுமே காணப்படலாம்; இவர்கள் 45Y ஆகவோ (ஆண்பண்புகள் குறைவான ஆண்கள்) அல்லது 45X (பெண்பண்புகள் குறைந்த பெண்களாகள்) ஆகவோ இருப்பர். இதுபோன்று உருவாகும் கருவில் இரண்டிற்கும் மேற்பட்ட குரோமோசோம்களும் காணப்படலாம். இவர்கள் பெண்பண்புகள் அதிகம் கொண்ட பெண்கள் (47XXX) ஆண்பண்புகள் அதிகம் கொண்ட ஆண்கள் (47XYY) ஆண்பண்புகள் கொண்ட பெண்கள் அல்லது பெண்பண்புகள் கொண்ட ஆண்கள் (47XXY) என வித்தியாசமானவர்களாக இருப்பர்.


இவ்விதம் குரோமோசோமின் எண்ணிக்கை கூடுதல் குறைவைப் பொறுத்தும் இவற்றில் Y குரோமோசோம் இருப்பதையும் இல்லாததையும் பொறுத்தும் அந்த கருவானது வளர்ச்சியடையும் போது அதில் உட்புறமான மற்றும் வெளிப்புறமான இன உறுப்புக்கள் உருவாகுவது கட்டுப்படுத்துகிறது. மட்டுமல்ல, இப்படியான இன உறுப்புக்களின் வளர்ச்சியின் அளவை பொறுத்து அவர் பின் நாட்களில் பருவ மாற்றங்கள் உடலில் தென்பட ஆரம்பித்து முழுமையான ஒரு ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ அல்லது இடைநிலையாகவோ அடையாளம் காணப்படுகிறார்.

ஆணா? அல்லது பெண்ணா?

ஒருவரை ஆண் என்றோ அல்லது பெண் என்றோ வெளித்தோற்றத்தை வைத்து, எளிதாக அடையாளம் கண்டு விடுகிறோம். ஆனால் அது எப்போதும் சாத்தியமில்லாத சூழ்நிலையில், ஆணுக்கும் பெண்ணிற்கும் உள்ள பல்வேறு பால் வேறுபாடுகள் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஆணுக்கும் பெண்ணிற்கும் உள்ள வேறுபாடுகள் அடிப்படையில் பால் வேறுபாடுகள் என்பதை கீழ்கண்டவாறு 4 முக்கிய வகையாக பிரிக்கலாம்:

1. மரபணு பால் (Genetic Sex) : இதன் படி ஒருவரின் உடலில் 23ம் ஜோடி குரோமோசோமில் Y காணப்பட்டால் அவரை ஆண்(XY) அது காணப்படாவில்லையெனில் பெண்(XX) எனவும் கூறுகிறோம்.

2. இன உறுப்புகள் பால் (Gonadal Sex) : உருவாகும் கருவில் Y குரோமோசோம் இருப்பதையும் இல்லாததையும் பொறுத்து உள்ளான மற்றும் வெளிப்புறமான இனஉறுப்புக்கள் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ வளர ஆரம்பிக்கும். எனவே இந்த இன உறுப்புகள் பால் உருவாக அடிப்படையாது மரபணு பால் எனலாம்.

3. புறத்தோற்ற பால் (Phenotype Sex) - இதில் இனஉறுப்புக்கள் வளர்வது மாத்திரம்மல்ல, அதற்கேற்ப அவைகளில் நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் ஹார்மோன்கள் (ஆண்ட்ரோஜன், ஈஸ்ரொஜன்) அதனால் ஏற்படும் உடல்வாகு / பிற உடல் மாற்றங்கள் (Secondary Sexual Characters) ஆகியவை அடங்கும். இன உறுப்புகளில் ஆண்ட்ரோஜென் சுரந்தால் ஆணாகவும் ஈஸ்ட்ரோஜன் சுரந்தால் பெண்ணாகவும் வளர்ச்சியடைகின்றனர்.

4. உளவியல் பால் (Psychological Sex) – மேற்கண்ட பண்புகளுடன் ஒருவரது வளர்ப்புமுறை சமுதாய சூச் நிலையை பொறுத்து ஒருவர் மனதளவிலும் முழுமையான ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ முதிர்ச்சிய்டைகிறார்.
இவ்விதம் ஒருவர் நான்கு நிலைகளிலும் ஒரேவகையினராக பொருந்தினால் மட்டுமே அவர் ஒரு முழுமையான ஆண் அல்லது பெண் எனலாம். ஒர் முழுமையான ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இல்லாமல், இடை நிலையுடன் இருப்பது கரு உருவாகும் போது அவற்றிலுள்ள மரபணுக்கள் மற்றும் அவற்றைத் தாங்கியுள்ள குரோமோசோம்களின் அமைப்பையும் அளவையும் பொறுத்தது. இந்த மரபணுக்களில் நடைபெறும் மாற்றங்கள் (mutations) தன்னிச்சையாக தலைமுறைதோறும் தொடர்கின்றன. இதனை மரபணு ஆலோசனை மூலம் ஓரளவு தவிர்க்கலாமே தவிர முற்றிலும் சரிப்படுத்துவது நம் கையில் இல்லை.

அண்ணகர்கள் (அரவாணிகள்) மூன்றுவிதம் 

விவாகரத்து குறித்து கேள்வி கேட்ட பரிசேயர்களைப் பார்த்து இயேசு: ”தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு; மனுஷர்களால் அண்ணகர்களாக்கப் பட்டவர்களும் உண்டு; பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக் கொண்டவர்களும் உண்டு. இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக் கடவன்” என்றார் (மத் 19:12).

தாயின் வயிற்றில் அண்ணகர்களாய் பிறந்தவர்களை மரபணு பால் மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் பால் வகையில் இவ்விதம் வகைப்படுத்துகிறோம். இவர்களுக்கே இன்று சரியான அங்கிகாரமும் தேவைகளும் இல்லாத நிலையில் மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்படுகிறவர்கள் இன்றைய நாட்களில் இல்லை எனலாம். இவர்கள் இனப்பெருக்க உறுப்புகளை அறுவைசிகிச்சை செய்து கொள்வதன் மூலம் புறத்தோற்ற பால் மற்றும் உளவியல் பாலில் மாற்றம் காண முற்படுபவர்கள். இன்றைய காலகட்டத்தில் அண்ணகர்களுக்கு இத்தகைய அறுவைசிகிச்சை மூலம் தங்களின் முதன்மை பாலினத்தோடு ஒத்துப்போகும் புறத்தோற்ற/உளவியல் பாலின நிலையை அடையவே இவை அதிகம் பயன்படுத்தப் படுகின்றன. பரலோக இராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக் கொள்பவர்களை உளவியல் பால் வகை எனலாம். இவர்கள் ஒரு முழுமையான ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருப்பவர்கள். இவர்களுக்கு உடலளவில் எவ்வித மாற்றமும் ஏற்படப் போவதில்லை; ஆனால் மனதளவில் இவர்கள் தங்களை ஒரு ஆண் அல்லது பெண்ணின் இனப்பெருக்க கடமையை செய்வதில் நாட்டமில்லாதவர்கள். இவர்களைக் குறித்து 1 கொரி 7: 25-40 ல் விபரமாக கூறப்பட்டுள்ளது. இவைகளை உற்று நோக்கும் போது அண்ணகர்கள் எந்த விதத்திலும் தாழ்ந்தவர்கள் அல்ல என்பது தெளிவாகிறது.

வேதாகமத்தில் இவர்கள்

வேதாகமத்தில் இவர்கள் பிரதானிகள் (2 இரா 9:32, எரே 38:7, ஆதி 37:36, எஸ்தர் 1:11) விதயடிக்கப்பட்டவர்கள் (உபா 28:1), அண்ணகர்கள் (மத் 19:12). என பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்படுகிறார்கள். ராஜாவின் அரணமனைகளில் பிரதானிகள், பானபாத்திரக்காரரின் தலைவன், சுயம்பாகிகளின் தலைவன் (ஆதி 40:2), தலையாரிகளுக்கு அதிபதி (ஆதி 37:36) ராஜஸ்திரீக்கு மந்திரி (அப் 8:27) என்ற முக்கிய பொறுப்புகளில் இவர்கள் இருந்து வந்துள்ளனர். இதன் மூலம் அக்காலங்களில் இவர்களுக்கென்றும் ஒரு சிறப்பான அந்தஸ்து இருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. இப்படிப்பட்ட அன்ணகர்களுக்கும் அவர்கள் வகித்த பொறுப்புகளுக்கும் ஒரே வார்த்தை வார்த்தை பயன்படுத்தப்படுவதால் வேதாகமத்தில் இவர்களைக் குறித்து கிட்டதட்ட 50 முறை சொல்லப்பட்டிருந்தாலும் 28 இடங்களில் மட்டுமே தான் உண்மையான விதயடிக்கப்பட்டவர்கள், அண்ணகர்களைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளவும் வாய்ப்புண்டு.

ஆரம்பத்தில் ஆலய ஆராதனைகளில் சேர்த்துக் கொள்ளப்படாத இவர்கள் (உபா 23:1) பின்னர் சிறப்பாக அங்கீகரிக்கப்படுவதாக ஏசாயாவால் வாக்கு அருளப்பட்டது. என் ஓய்வுநாட்களை ஆசரித்து, எனக்கு இஷ்டமானவைகைளைத் தெரிந்துகொண்டு உடன்படிக்கையைப் பறறிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும் குமாரருக்கும் குமாரத்திகளுக்குமுரிய இடத்தையும் கீர்த்தியையும்பார்க்கிலும், உத்தம இடத்தையும் கீர்த்தியையும் கொடுப்பேன், என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன். (ஏசாயா 56:4,5).

தேவனைத் தொழுது கொள்ளும் இஸ்ரவேலர் தூய்மையானவர்களாக இருக்கவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தவே அன்று அங்கவீனன் அங்கீகரிக்கப்படவில்லை எனலாம். மாத்திரமல்ல இவ்விதம் விதையடிக்கப்படுதல் அந்நிய தேவர்களுக்காக செய்யப்படுதவதாக இருந்ததாலும் பழுதுள்ள எதுவும் பலி செலுத்தப்படலாகாது என நியாயப் பிரமாண சட்டம் இருந்ததாலும் இவர்கள் அவ்விதம் ஆலயங்களில் ஒதுக்கப்பட்டிருந்தனர். புதிய ஏற்பாட்டு காலத்தில் எத்தியோப்பிய ராஜாஸ்திரியின் நிதிப்பொறுப்பிலிருந்த அண்ணகன் பிலிப்பு மூலம் இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் பெற்றான் (அப். 8:37,38). இது கிறிஸ்தவத்தில் அண்ணகர்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதையும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதையுமே காட்டுகிறது.

இந்தியாவில் இவர்களின் நிலை:

காலாகாலமாக ஒவ்வோரு நாட்டிலும் இவர்கள் வெவ்வேறு குறிப்பிட்ட வேலைகளுக்காக பயன்படுத்தப்பட்டனர். அதனைப் பொறுத்து ஒவ்வொரு நாட்டிலும் அவர்களது சமூக அந்தஸ்தில் மாற்றங்கள் உண்டு. இந்தியா போன்ற நாடுகளில் ஏற்கனவே மக்கள் தொகை மலிந்துவிட்ட நிலையில் இடப்பட்ட இவர்களின் நிலைமை திண்டாட்டம் தான். கேலி, கிண்டல், பரியாசம், குடும்பத்தினரால் வெறுக்கப்படுதல், மற்றும் சமுதாயத்தில் சரியாக ஏற்றுக் கொள்ளப்படாதிருக்கும் போது இவர்களில் பலர் பாலியல் மற்றும் பிச்சை தொழிலுக்கு வந்து சேருகின்றனர். இவர்களைக் குறித்த சரியான விழிப்புணர்வும் புரிந்து கொளதலும் அக்கறையும் சமுதாயத்தில் இல்லாமையால் இவர்களின் சமூக நிலைமை இன்னமும் மோசமாகி இவர்களைக் குறித்த தவறான கண்ணோட்ட்த்துக்கு விட்டுச் செல்கிறது. எனவே இவர்களைக் குறித்த தெளிவான பார்வை நமக்குத் தேவை.

திருநங்கையர் என மரியாதைக்குரியவர்களாக அழைக்கப்படுவது போன்று தோன்றினாலும், அவர்கள் எல்லோரிடமும் குறைந்தபட்சம் ஒரு X குரோமோசோம் உள்ளது என்பதற்காக இவர்களை முற்றிலும் நங்கையர் பிரிவில் சேர்த்துவிட்டது நியாயமாக இருக்க முடியாது. இவர்களில் பெரும்பான்மையினோருக்கு Y குரோமோசோமும் உண்டு என்பதைக் கருத்தில் கொண்டு இவர்களை உளவியல் மற்றும் புறத்தோற்ற பால் வகையில் ஆணாக இருந்திட ஏன் சமுதாயம் அனுமதிக்கக் கூடாது? இன்றும் இந்தியாவில் பெண்களின் நிலையே பரிதாபமாக காணப்படும் போது இவர்கள் நிலை இன்னும் பரிதாபம் தான்.

சமீப காலங்களில் இவர்களைப் பற்றிய சமூகப் பார்வையில் மாற்றங்கள் வந்து கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. 2005 முதல் பாள்போர்ட் விண்ணப்பங்களில் இவர்களுக்கென மூன்றாம் பாலினத்தை குறிப்பிட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 2009 முதல் வாக்காளர் பட்டியலிலும் இவர்கள் தனிபாலின வகையினராக அங்கிகரிக்கப்பட்டு அடையாள அட்டைகளும் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் இவர்களின் நலனுக்கென தனி வாரியமே அமைக்கப்பட்டுள்ளது நல்ல விஷயம். அரசியல் மற்றும் அதிகார மட்டத்தில் மட்டும் இந்த மாற்றங்கள் போதாது. ஒவ்வொருவரும் இதுபோன்ற ஆயிரத்தில் ஓரிருவரை அடையாளம் காணும்போது பரிவுடனும் நேர்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும். தங்களாலியன்ற தனிப்பட்ட மற்றும் சமுதாய உதவிகளை நல்கிட முன்வர வேண்டும். இத்தகைய மாற்றுப் பார்வையில் தங்கள் கடமையினை ஆற்றிட முதலில் கிறிஸ்தவர்கள் முன்வரவேண்டும்.

”ஏழையைப் பரியாசம் பண்ணுகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்”(நீதி 17:5).



 இது உன்னத சிறகுகள் ஜனவரி-மார்ச் 2010 இதழில் வெளிவந்த எனது கட்டுரை.

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

Wednesday, July 07, 2010

இணையம்: ஆக்கமா? அழிவா?

நாம் வாழும் இன்றைய பின்நவீன காலக்கட்டத்தில் (Post–modern Era), இணையமும் இளைஞரும் இணைபிரியாத வார்த்தைகளாகி விட்டன. இணையம் என்றாலே இளைஞருக்கு இடறல் என பெரியவர்களும் இணையம்தான் எல்லாமே என இளைஞரும் இருவேறுதுருவ கருத்துடையவர்களாக இருக்கின்றனர். இன்று இணையம் இளைஞருக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே அவசியமான ஒன்றாகி விட்ட்து. இன்னும் சொல்லப்போனால், இன்றைய பின்நவீன காலக்கட்டத்தின் ஆரம்பமே இணையத்தின் கண்டுபிடிப்பில் தான் எனலாம்.


இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இணையம் இளைஞரின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பல. அவற்றில் சில ஆக்கப்பூர்வமானவையாகவும் சில அழிவுப்பாதையில் நடத்திச் செல்பவையாகவும் உள்ளன. இன்று மாணவர்களுக்கு, குறிப்பாக முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களின் கல்விக்கு இணையம் ஒரு இன்றியமையாத கருவியாகிவிட்டது. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தேவைப்படும் விபரங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு இணையத்தின் இணையில்லாத சிறப்பு.


சமீபத்தில் “இணையத்தில் நேரத்தை தொலைக்கும் இளைஞர்கள்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை (தினமணி, மே 12) வெளிவந்தது. அது இன்றைய இளைஞர்கள் தங்களையும் அறியாமல் எப்படியெல்லாம் இணையத்தில் நேரத்தை வீணடிக்கிறார்கள் என விரிவாக அலசியது. இணையம் என்பது ஒரு தொடர்பு ஊடகம். அது தன்னகத்தே ’நல்ல’ அல்லது ’கெட்ட’ என எந்தவொரு பண்பினையும் கொண்டிருக்கவில்லை; நடுநிலையானது. அதன் பயன்பாடு பயன்படுத்துவோரின் கையில் தான் உள்ளது. எண்ணற்ற பயன்கள் இணையத்தில் ஒழிந்துள்ளன. ’எதைத்தேடி? எவ்வளவு நேரம்?’ என எந்தவொரு நோக்கமும் தெளிவும் இல்லாமல் இணையத்தில் இறங்குபவர்களுக்கு இங்கு இடறல்களே அதிகம். மட்டுமல்ல, அத்தகைய காரியங்களில் இணையம் அவர்களை படிப்படியாக அடிமைப்படுத்தி விடுகிறது.


நல்ல காரியங்களைத் தெரிந்து கொள்ளவே இணையத்தில் இறங்குவதாயினும் அதில் ஒரு கட்டுப்பாடு தேவை. எதிர்ப்பார்த்த காரியம் முடிந்தவுடன் வெளியேறிவிடுவது நல்லது. இல்லையெனில் கண்ணையும் மனதையும் கவரும் ’கவர்ச்சி’ விளம்பரங்கள் அவ்வப்போது அழையா விருந்தாளிகளாக வந்துசேரும். ஒரு கிளிக் செய்தாலே அது நம்மை இணையத்தின் மறுமுனைக்கு கொண்டு சென்றுவிடும். எனவே இதனைத் தவிர்க்க தனிமையில் இணைய மையங்களுக்குச் செல்வதை தவிர்க்கலாம்; இணையவசதி வீட்டிலேயே இருக்குமானால் தனிஅறையில் இல்லாமல் விட்டிலுள்ள மற்றவர்களின் பார்வையில் இணையத்தை பயன்படுத்துவது தான் பாதுகாப்பானது.


இணையத்தில் சமீபத்திய முன்னேற்றமாகிய ஆர்குட், ஃபேஸ்புக் போன்ற ’சமூகப் பரிமாற்ற ஊடகம்’ (Social Interactive Media) குறித்து தெளிவுடன் இருப்பது நல்லது. இவற்றில் உரையாடுதல், உடனுக்குடன் செய்தியனுப்புதல், ஆன்லைன் விளையாட்டுக்கள் போன்றவை நன்மையானவையாகவே இருப்பினும் நாளடைவில் தவறான உறவுகளையும் அடிமைத்தனத்தையும் கொண்டு வந்துவிடும். அதற்கு காரணம் இவற்றில் ஈடுபடும் பெரும்பான்மையினோரின் நடவடிக்கைகள் தாம்.


இத்தைய சூழ்நிலையில் இவற்றிலிருந்து அறவே வெளியேறுவதைத் தவிர்த்து, விசுவாச மாணவர்களும் பட்ட்தாரிகளும் இவற்றை நன்மையான காரிய்ங்களுக்காக (Context) அதிக அளவில் (Content) சரியான விதத்தில் பயன்படுத்துவதன் மூலம் ஒரு சிறிய அளவிலாவது சமூக மாற்றத்தை ஏற்படுத்தி, இவ்விதம் இணையத்தின் மூலம் நற்செய்தியைப் பரப்பிட முயற்சி செய்யலாமே?



This is a my Forum article published in THARISANA SUDAR – JULY 2010

Wednesday, May 19, 2010

வேதாகம IPL

IPL என்றவுடனே சமீபத்திய கிரிக்கெட் சாதனைகலும் வேதனைகளும் நினைவுக்கு வருகிறது அல்லவா?


இந்த நிலையில், அது சம்பந்தப்பட்ட வேதாகம நிகழ்வுகளை நினைவு படுத்தியும் அதன் மூலம் உணர வேண்டிய உண்மைகளை உணர்த்தியும் வெளிவந்த ஒரு “சிரிக்க சிந்திக்க” தொகுப்பு இதோ:



இது வெறும் சிரிக்க மட்டுமல்ல; சிதிக்கவும் செயல்படவும் தான்.

இதுபோன்ற நிகழ்கால நிகழ்வுகளை மையமாகக் கொண்டு வெளிவரும் சிந்தனைகளை உள்ளடக்கிய ”பிதாவின் சித்தம்” என்ற பத்திரிக்கையை பெற விருப்பமா?

ஆண்டு சந்தா ரூ. 70 மட்டுமே. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

சகோ. A. தாமஸ் ரிச்சர்டு,
பிதாவின் சித்தம் ஊழியங்கள்,

172, அண்ணா நகர், விராலிமலை ரோடு,

மணப்பாறை -தாலுகா, திருச்சி மாவட்டம்.

PIN: 621 306



Phone:


.

Friday, April 30, 2010

பிறந்தநாள் கொண்டாடலாமா?

என்ன இது, கேள்வியே விகற்பமாக இருக்கிறதல்லவா?

பதில் ஓரிரு நாட்களில்....